Wednesday, September 7, 2016

தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன்?

எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும்.
 ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது. 
எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என வேண்டவே நாம் நமது கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம்.
அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு. அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.
மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது. ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது.
 முழுத் தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும். பழம் கொட்டை என்பது கிடையாது.
அப்படி நமது எச்சில்படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள்.நாமும் இந்த மரபினைப் பின்பற்றிவருகிறோம்.இதுவே இந்துதர்மத்தின் தனிச்சிறப்பு.

ராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சீடர் கதை 1

ஒரு முறை ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் சீடர் ஒருவர் கேட்டார். “ஸ்வாமி, நமக்குப் புத்தி சொல்பவரே தவறு செய்பவராக இருந்தால் அந்த புத்திமதியை எப்படி எடுத்துக்கொள்வது?”
“ஒரு மாணவன் குருவைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை” என்றார் பரமஹம்ஸர். “குருவே தவறு செய்தால் அவர் சொல்லை எப்படி நாம் ஏற்றுக்கொள்வ்து?” என்று கேட்டார் சீடர்.
பரமஹம்ஸர் முகத்தில் புன்னகை. “அழுக்குத் துடைப்பம்தானே அறையைச் சுத்தம் செய்கிறது?”
சீடர் அதன் பிறகு கேள்வி எதுவும் கேட்கவில்லை.
துடைப்பம் அழுக்காக இருந்தாலும் அது சுத்தம் செய்கிறது. அறை சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் துடைப்பம் அழுக்காக இருக்கிறதே எனக் கவலைப்படுவதில்லை.
ஒரு சிஷ்யனின் மனநிலை இப்படி இருக்க வேண்டும். குருவின் சொல் தனக்குப் பயன்படுமா என்பதைத்தான் பார்க்க வேண்டும். குருவின் தகுதியைப் பார்க்க வேண்டிய பொறுப்பு அவனுக்கு இல்லை.
தான் தன் சொல்லுக்குத் தகுதியானவராக இருக்கிறோமா எனப் பார்ப்பது குருவின் பொறுப்பு.,
குருவும் சிஷ்யனும் தத்தமது பொறுப்பை ஒழுங்காகச் செய்தால் எது சரி, எது தவறு என்ற கேள்வியே வராது அல்லவா?
பூனையையும் குரங்கையும் வைத்து இதே விஷயத்தை விளக்குவதுண்டு. பூனை தன் குட்டியை வாயில் கவ்விக்கொண்டு போகும். குட்டி வளரும்வரை அது குறித்த எல்லாப் பொறுப்பையும் தாய்ப் பூனையே ஏற்றுக்கொள்ளும்.
குரங்கு விஷயத்தில் இது நேர் மாறாக இருக்கும். குட்டிதான் தாயின் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொள்ளும். தாய் கவலையே படாது.
சொல்லிக் கொடுப்பவர் பூனைத் தாய் போலவும், கற்றுக்கொள்பவர் குரங்குக் குட்டிபோலவும் இருந்துவிட்டால் பிரச்சினையே இல்லை.