Tuesday, November 29, 2016

செல்ஃபி ஸ்டிக் எல்லாம் பழசாம் பாஸ். AirSelfie தெரியுமா?

ஸ்மார்ட் போன்களில் எவ்வளவோ அம்சங்கள் இருந்தாலும் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் தெரிந்த அம்சமும், மிகவும் விரும்பும் அம்சமும் Selfie தான். தன்னை தானே படம் எடுத்து கொள்வது என்று ஆரம்பித்து, நண்பர்களை தன்னுடன் இணைத்து எடுத்துக்கொள்ளும் க்ரூப் செல்ஃபி என்று வளர்ந்து... Selfie நம் சமூக வலைதளங்களில் காட்டிய வீச்சு மிகவும் வேகமானது.

ஆரம்ப காலங்களில் Selfie எடுப்பதற்கு கையை ஒட்டடை அடிக்கும் கம்பு போல் தூக்கிக் கொண்டு திரிந்தோம், பின்பு Selfie Stick வந்து நம் கை வலியை சற்று குறைத்தது. ஆனால் அதிலும் ஒரே மாதிரியான ஆங்கிளில் படம் எடுக்க முடியும். அதுவும் க்ரூப் செல்ஃபி எடுக்க வேண்டும் என்றால் அனைவரையும் பிரேமுக்குள் கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.
இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வாக வரவுள்ளது AirSelfie Camera.

உள்ளங்கை அளவே உள்ள இந்த சாதனம் ஒரு பறக்கும் கேமரா(Drone). நம் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் இதனை கட்டுப்படுத்தி படங்களை நல்ல வைட் ஆங்கிளில் எடுக்கலாம்.

கட்டுமானம் மற்றும் சார்ஜ்:

உறுதியான anodized aluminum case மூலம் உருவாக்கப்பட்ட இந்த பறக்கும் கேமரா 94.5மிமீ நீளமும், 67.4மிமீ அகலமும், 10.6மிமீ தடிமனும் அளவை கொண்டது. இதன் மொத்த எடையும் 52 கிராம் மட்டுமே.

இதனை மொபைலுடன் பொருத்தும் வகையில் கேஸுடன் விற்பனைக்கு வரவுள்ளது. இந்த கேஸ் ஐபோன் 6 மற்றும் 6s, ஐபோன் 7 மற்றும் 7s, ஹுவாவே P9 மொபைல் மற்றும் கூகுள் பிக்சல் மொபைல் போன்களுக்கு பொருத்தும். AirSelfie கேமராவை இந்த கேஸில் மொபைலுடன் வைத்தால் போதும் 30 நிமிடங்களில் சார்ஜ் ஆகிவிடும். ஒருமுறை சார்ஜ் செய்துவிட்டால் AirSelfie கேமரா 3 நிமிடங்கள் பறக்க இயலும். முழு சார்ஜ் உள்ள மொபைல் மூலம் 20 முறை இந்த AirSelfie கேமராவை சார்ஜ் செய்துக் கொள்ளலாம். இது போக USB மூலம் நேரடியாக சார்ஜ் செய்துக் கொள்ளும் வசதியும் உண்டு.

இதனை எந்த ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோனிலும் இயக்கலாம்.

எப்படி பறக்க வைப்பது, படம் எடுப்பது? :

ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்ட் மொபைலில் AirSelfieக்கான பிரத்யேக இலவச Appஐ தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டும், அந்த app மூலம் மிக சுலபமாக AirSelfie கேமராவை கட்டுப்படுத்தலாம். 20 மீட்டர் சுற்றுவட்டாரத்திற்குள் இதனை இயக்க முடியும். பறக்க விட்டு சரியான ஆங்கிளைத் தேர்ந்தெடுத்ததும் 10 செகன்ட் வரை உள்ள டைமரை செட் செய்து விட்டு உங்கள் மொபைலை ஓரமாக வைத்துவிட்டு போட்டாக்கு போஸ் கொடுத்தால் போதுமானது.

இதில் உள்ள 5MP கேமரா வண்ணமயமான HD படங்கள், வீடியோ மற்றும் பனோரமா ஷாட்கள் எடுக்க சிறந்தது. வெளிச்சம் குறைவான இடங்களில் கூட நல்ல தரமான படங்களை இதனை கொண்டு எடுக்க முடியும்.

மெமரி மற்றும் பேட்டரி:

AirSelfie கேமராவில் 4GB பில்ட் இதன் மைக்ரோ SD கார்டுடன் வரவுள்ளது.

260mAh 7.4 லிப்போ பேட்டரி தொடர்ந்து 3 நிமிடம் பறக்க போதுமானது.

சிறப்பம்சங்கள்:

பறக்கும் பொழுது நிலை தடுமாறாமல் சீராக இயங்க கேமராவின் அடிப்பகுதியில் altitude சென்சார் மற்றும் stability கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த வசதியால் வீடியோக்களை சீராக பதிவு செய்ய முடியும்.

இதனை வானில் வேகமாக செலுத்த 4 சுழலும் Brushless மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளது, கேமரா நம் கைகளில் பத்திரமாக தரையிறங்கவும், கேமரா பறந்து கொண்டிருக்கும் போது அதனை சுலபமாக கைகளில் பிடிக்கும் விதமாகவும் இந்த இறக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

விலை!

2017 மார்ச்சில் வெளியாக உள்ள இந்த AirSelfie கேமரா 300$ வரை விலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதாவது தோராயமாக இந்திய மதிப்பில் 20,000 ரூபாய்.

AirSelfie கேமராவின் அம்சங்களை காண:

ஸ்வைப் மெஷின் பெறுவது எப்படி

மத்திய அரசு ரொக்கமில்லாத பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க தொடங்கி இருப்பதைத் தொடர்ந்து வியாபாரிகளுக்கு கிரெடிட், டெபிட் கார்டுகளை பெறுவதற்கான நடைமுறைகள் குறித்து வங்கி அதிகாரிகள் விளக்கம் அளிக்கத் தொடங்கியுள்ளனர்.
கருப்புப் பணத்தை ஒழிக்கும் முதல்கட்ட நடவடிக்கையாக 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரொக்கமில்லாத பரிவர்த்தனைகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக மத்திய உணவுத் துறையின் கீழ் வரும் இந்திய உணவுக் கழகம், மத்திய உணவு தானிய சேமிப்பு நிறுவனம் போன்ற அமைப்புகள் ஏற்கனவே அவற்றின் பரிவர்த்தனைகளில் 99 சதவீதம் அளவுக்கு ரொக்கமில்லாத பரிவர்த்தனையே மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பணப்புழக்கம் தட்டுப்பாடு காரணமாக 'கிரெடிட்', 'டெபிட்' கார்டு மூலம் வியாபாரம் மும்முரம் அடைந்து வருவதால், வியாபாரிகள் 'ஸ்வைப் மெஷின்' பெறுவதற்கான நடைமுறைகள் என்ன? என்பது குறித்து இந்தியன் வங்கி அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பு:
மத்திய அரசு பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்ததில் இருந்து நாட்டில் பணப்புழக்கம் தட்டுப்பாடாக இருந்து வருகிறது. இதனால் ஓட்டல்கள், பெரிய வணிக நிறுவனங்கள், மளிகை கடைகள், திரையரங்குகள் உள்பட பல இடங்களில் ‘ஸ்வைப் மெஷின்' மூலம் ‘கிரெடிட்', ‘டெபிட்' கார்டு பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
மேலும், பணப்புழக்க தட்டுப்பாடு காரணமாக விற்பனை பாதிக்காமல் இருப்பதற்காக பெரிய வணிக நிறுவனங்கள் கிரெடிட், டெபிட் கார்டு பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கவர்ச்சிகரமான விளம்பர யுக்திகளையும் கையாண்டு வருகின்றன.
எனவே, காய்கறி-மளிகை கடை, பெட்டி கடை வைத்திருக்கும் சிறு குரு வியாபாரிகள் பார்வையும் தற்போது ‘ஸ்வைப் மெஷின்' பக்கம் திரும்பி உள்ளது. வங்கிகளில் ஸ்வைப் மெஷின் பெறுவதற்கான விண்ணப்பங்கள் குவிகின்றன. நாடு முழுவதும் ஸ்வைப் மெஷினுக்கு ‘திடீர்' மவுசு அதிகரித்துள்ளது.
ஸ்வைப் மெஷின் பெறும் நடைமுறை விளக்கம்: இந்தியன் வங்கியின் பார்க் டவுன் உதவி பொதுமேலாளர் எம்.வி.ரமணா ‘ஸ்வைப் மெஷின்' பெறுவதற்கான நடைமுறைகள் என்ன என்பது குறித்து வியாபாரிகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:
டயல் அப் (தொலைபேசி இணைப்பு மூலம்), டெஸ்க்டாப் (ஜி.பி.ஆர்.எஸ்.), ஹாண்டு ஹெல்டு (ஜி.பி.ஆர்.எஸ்.), டிஜிட்டல் (ஜி.பி.ஆர்.எஸ்) ஆகிய 4 வகை மாடல்களில் ஸ்வைப் மெஷின்கள் உள்ளன.
இதில் ‘டயல் அப்', ‘டெஸ்க்டாப்', ‘ஹாண்டு ஹெல்டு' ஆகிய மெஷின்களில் பண பரிமாற்றம் குறித்த ரசீது வரும். ‘டிஜிட்டல்' மெஷினில் ரசீது வராது. அதற்கு பதிலாக பண பரிவர்த்தனை விவரம் சம்பந்தப்பட்ட நபரின் செல்போன் எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். ஆக (குறுந்தகவல்) வந்து சேரும்.
‘டெஸ்க்டாப்', ‘டயல் அப்' மெஷின்கள் மின்சாரம் மூலம் இயங்குகிறது. மற்றவைகள் பேட்டரி மூலம் இயங்குகிறது.

சுவைப் மெஷின் பெற எப்படி விண்ணப்பிப்பது?
ஸ்வைப் மெஷின் கோரி விண்ணப்பிக்கும் வியாபாரிக்கு, எந்த வங்கியில் விண்ணப்பிக்கிறாரோ? அந்த வங்கியில் கண்டிப்பாக அவருக்கு கணக்கு இருக்க வேண்டும். பின்னர் வங்கியில் வழங்கப்படும் விண்ணப்ப படிவத்தில் தொழில் விவரம், வியாபாரியின் பெயர், புகைப்படம், வீடு-கடை முகவரி, தொலைபேசி, செல்போன் எண் மற்றும் கடந்த 3 ஆண்டுகள் கடையின் விற்பனை, லாப-நஷ்டம் போன்ற விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
கடை சொந்தமானதா? வாடகையா? குத்தகையா? என்பன போன்ற விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.

திரும்பப் பெறுதல்:
கூட்டாண்மை வணிக நிறுவனமாக இருப்பின் யாராவது ஒருவருடைய புகைப்படத்துடன் விண்ணப்பிக்கலாம். ஆனால் மற்றவர்களின் பெயர், முகவரி போன்ற விவரங்களையும் அந்த விண்ணப்பத்தில் தெரிவிக்க வேண்டும். விற்பனையை பொறுத்து எத்தனை ஸ்வைப் மெஷின்கள் வேண்டும் என்றாலும் அவர்கள் பெறலாம்.
அதே நேரம் போதிய அளவு விற்பனை இல்லாத கடைகளில் ஸ்வைப் மெஷின்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட வணிகர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்ப படிவம் வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்படும். அங்கிருந்து ஸ்வைப் மெஷின் தயாரிப்பு நிறுவனத்துக்கு தகவல் கொடுக்கப்படும். குறைந்தபட்சம் 20 நாட்களில் இருந்து அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் ஸ்வைப் மெஷின்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

ஸ்வைப் மெஷின் பெற கட்டணமில்லை:
சுவை மெஷின் பெறுவதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. ‘சிம்கார்டு' இணைப்புக்கு மட்டும் 400 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். மாத வாடகை கட்டணமாக குறைந்தபட்சம் ரூ.1,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் கிரெடிட், டெபிட் கார்டு பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் மாறுபடும் என்று அவர் கூறினார்.

Sunday, November 27, 2016

இந்திய இராணுவத்தின் அதிசயத்தக்க கருவிகள்

உலகிலேயே அதிவேகமாக சென்று தாக்கும் ஏவுகணை - இந்தியாவின் பிரம்மோஸ் (ஒலியை விட 2.5 மடங்கு) இதற்கு இணையான ஒரு ஏவுகணையை பத்தாண்டு ஆராய்ச்சிக்கு மேலும் அமெரிக்க, சீனாவால் தயாரிக்க முடியவில்லை

உலகிலேயே ஒரே ஏவுகணையில் 6 அணுகுண்டுகளை சுமந்து, ஒரே நேரத்தில் ஆறு இலக்குகளை தாக்கும் ஒரே ஏவுகணை - பிருத்வி

உலகிலேயே மிகச்சிறிய நவீன போர்விமானம் - இந்தியயாவின் தேஜஸ்

உலகிலேயே அதிவேக போர்விமானம் - சுகோய் 30 ரக இந்திய விமானம்

உலகிலேயே ஒரே ஏவுகணையில் 10 எதிரி விமானங்களை வீழ்த்தும் ஆற்றல் பெற்றது - இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை

உலக அணு ஆயுத ஏவுகணையில் காற்றில்லா உயரத்திற்கு சென்று 5000 கி.மீ தொலைவை 17 நிமிடத்தில் தாக்கும் அதிவேக அணுஆயுத ஏவுகணை - அக்ணி 5

உலகிலேயே GPS தொழில்நுட்பத்துடன் கடலுக்கடியில் நீர்மூழ்கி கப்பலயே சாம்பலாக்கும் ஏவுகணை - இந்தியாவில் K4 ஏவுகணை

உலகிலேயே ராடாரால் கண்டுபிடிக்க முடியாத தரை ஒட்டி சென்று 1000 கி.மீ அப்பால் உள்ள இலக்கை அழிக்கும் ஒரே ஏவுகணை - இந்தியாவின் நிர்பாய்

உலகிலேயே அணு ஆயுதத்தை கொண்டு தாக்கினாலும் அழிக்க இயலாத ஒரே பீரங்கி - அர்ஜுனா டாங்கி.

உலகிலேயே 1 நிமிடத்தில் 20 ஏவுகணையை செலுத்தும் ஆற்றல் பெற்ற ராக்கெட் லாஞ்சர் இந்தியாவின் பினாகா.

*♻பகிர்ந்து கொள்ளுங்கள் மக்களும் தெரிந்து கொள்ளட்டும்♻*

Sunday, November 20, 2016

இன்னும் எத்தனை பேர் சாகவேண்டும் பிரதமரே? -கொதிக்கும் வங்கி ஊழியர்கள்

புதிய ரூபாய் நோட்டுகளைப் பெறுவதற்காக ஏ.டி.எம் மையங்களிலும் வங்கி வாசல்களிலும் மக்கள் தவம் கிடக்கின்றனர். ' கடந்த பத்து நாட்களில் வங்கி ஊழியர்கள் உள்பட 40 பேர் இறந்துள்ளனர். டிசம்பர் இறுதிக்குள் இன்னும் எத்தனை சாவுகள் நிகழப் போகிறதோ?' என அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் வங்கி ஊழியர்கள்.

மத்திய அரசு கடந்த 8-ம் தேதி, ' 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என அறிவித்தது. இதனால் அதிர்ந்து போன பொதுமக்கள் தங்கள் கையிருப்பில் இருந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளுக்குப் படையெடுத்தனர். வங்கி ஊழியர்களுக்கும் விடுமுறையற்ற வேலைநாட்கள் அறிவிக்கப்பட்டன. பெரும்பாலான ஏ.டி.எம் மையங்கள் பூட்டியே கிடக்கின்றன. அன்றாட செலவுகளுக்குப் பணமில்லாமல், பொதுமக்கள் மிகுந்த துயரத்தில் உள்ளனர். மத்திய அரசின் அறிவிப்பால், பெரும் பணக்காரர்கள் யாரும் பாதிக்கப்பட்டதாக இதுவரையில் தகவல் வெளியாகவில்லை. மாறாக, வாராக்கடன்களை தள்ளுபடி செய்யும் அரசின் நடவடிக்கையால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. "மருத்துவச் செலவு உள்பட அன்றாட குடும்பச் செலவுகளுக்குக்கூட பணத்தை மாற்ற முடியவில்லை. சில்லறை வர்த்தகம் முடங்கிக் கிடக்கிறது. தொடர் வேலைநாட்களால் வங்கி ஊழியர்கள் மத்தியில் மிகுந்த மனச் சோர்வு ஏற்பட்டுள்ளது" என ஆதங்கத்தோடு பேசினார் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் (தமிழ்நாடு) பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன். தொடர்ந்து நம்மிடம்,

"எது கறுப்புப் பணம் என்பதை எப்படி வரையறுக்கிறார்கள் என்று தெரியவில்லை. வங்கிக் கணக்கில் சேரும் பணம் எல்லாம் கறுப்புப் பணம் என்று சொல்ல முடியாது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணைநிலை ஆளுநர் சக்ரவர்த்தி சொல்வதைப் போல, 'அரிசியில் கல் இருந்தால், அதை எடுத்துவிட்டுத்தான் பயன்படுத்த முடியும். மாறாக, அரிசியைக் கொட்டிவிட முடியாது'. இதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். ரூபாய் நோட்டுகள் குறித்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து, பொதுமக்கள் மத்தியில் உயிர்ப்பலி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது'"என வேதனைப்பட்டவர், "போபால், ஸ்டேட் வங்கிக் கிளையில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர், தொடர்ந்து மூன்று நாட்களாக பணிக்கு வந்து கொண்டிருந்தார். அதிகப்படியான மன அழுத்தம் காரணமாக, 13-ம் தேதி மாலை நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்துவிட்டார். அதேபோல், பஞ்சாப்பில் மகள் திருமணத்துக்காக பணத்தை சேர்த்து வைத்திருந்த சுக்தேவ் சிங் என்பவர், பணத்தை மாற்ற முடியாத வேதனையில் இறந்துவிட்டார். ஒடிசா, சம்பல்பூரில் மருத்துவமனையில் பழைய ரூபாய்களை ஏற்காததால், இரண்டு வயது குழந்தை இறந்துவிட்டது.

புனேவில், துக்காராம் என்ற வங்கி ஊழியர் 16-ம் தேதி மன அழுத்தத்தால் இறந்துவிட்டார். லக்னோவில் 10-ம் தேதி பழைய ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம் மையங்களில் இருந்து எடுப்பதற்காக விரைந்து சென்ற வாகனம், விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் இறந்தார்கள். மேலும், மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் பணத்தை எடுத்து வரத் தாமதம் செய்ததால், மது திவாரி என்ற பெண் கணவரால் கொல்லப்பட்டார். இப்படி நாடு முழுவதும் 40 பேர் வரையில் மரணத்தைத் தழுவியிருக்கிறார்கள். கறுப்புப் பணத்தின் மீதான துல்லியத் தாக்குதல் என்று சொல்லிவிட்டு, அப்பாவி மக்கள் மீது அரசு துல்லியத் தாக்குதல் நடத்தியிருக்கிறது. நமது நாட்டில் 'ரா' உள்பட பல புலனாய்வு அமைப்புகள் உள்ளன. அவற்றின் உதவியோடு எங்கே கறுப்புப் பணம் அச்சடிக்கிறார்கள் என்பதைத் தெரிந்து, அதிரடியாக நடவடிக்கை எடுக்க முடியும்.

நாட்டின் மொத்தப் பணத்தில், '400 கோடி ரூபாய் அளவுக்கு போலியான ரூபாய்கள் இருக்கலாம்' என இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் அறிக்கை சொல்கிறது. இவ்வளவு குறைந்த தொகைக்காக, ஒட்டுமொத்த சாமானிய மக்களையும் வதைப்பது எந்த வகையில் நியாயமானது? இதுவரையில், வங்கி வாசல்களில் வரிசையில் நின்றதில் நமது மக்களின் நேரம் விரயமாகியிருக்கிறது. வங்கிகளின் அன்றாட பரிவர்த்தனைகள் அடியோடு முடங்கிப் போய்விட்டன. பொதுமக்களின் சேவைக்காகத்தான் வங்கி ஊழியர்களும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்களோடு சேர்ந்து அவர்களும் வதைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்" என்றார் வேதனையோடு.

Saturday, November 19, 2016

ரூபாய்க்கு பதில் புதிய பணம் - மிசோரம் மக்கள்

இந்தியாவின் எதிர்கால பொருளாதாரம் குறித்து விதவிதமாய் செய்திகளும் ஆரூடங்களும் சொல்லப்பட்டு வரும் இந்த வேளையில், செவன் சிஸ்டர்ஸ் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் இதை வேறு விதமாக எதிர்கொள்கிறது

ஹாவ்பங், இந்திய-மியான்மர் எல்லையில் இருக்கும் மிசோரம் மாநில கிராமம். இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட கூடுதலாகவே இங்கு ரூபாய்களுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. காரணம் வங்கிகள்,அஞ்சலங்கள், ஏடிஎம் போன்றவை ஒப்பீட்டு அளவில் மிகவும் குறைவாகவே உள்ள மாநிலம் இது. ரூபாய் தட்டுப்பாட்டை அஸ்ஸாம் போன்ற மாநிலங்கள் பூட்டான் நாட்டு தாளை பயன்படுத்தி சமாளித்து வரும் நிலையில் மிசோரம் மக்கள் கைகளில் எழுதிய தாள்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

விவசாயத்தை மட்டுமே அடிப்படையாக கொண்ட இந்த கிராமத்தில் ரூபாய்தாள்கள் செல்லாதவை என அறிவிக்கப்பட்ட பின் 7 நாட்கள் வரை காத்திருந்துள்ளனர். இந்த தேக்க நிலை மாற இன்னும் பல நாட்கள் ஆகும் என தெரியவரவும் தங்கள் ஊருக்குள் மட்டுமே செல்லத்தக்க வகையில் கையெழுத்து தாள்களை பணமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அந்த ஊர்த்தலைவரின் ஒப்புதலோடு இதை நடைமுறைப்படுத்தியுள்ள கிராமத்தினர். 100 மற்றும் 50 ரூபாய்களுக்கான தாள்களை மட்டும் கைகளில் எழுதி புழக்கத்தில் விட்டுள்ளனர்.

கிராம மக்களின் அடிப்படை தேவைகளை தீர்க்கும் மளிகைக்கடை, காய்கறி கடை மற்றும் மருந்து கடையிலும் இந்த தாள் ஏற்கப்படும் என கூறுப்பட்டுள்ளன. மேற்படி கடைக்காரர்களும் அந்த தாள்களை பயன்படுத்தி மற்ற கடைகளில் பொருட்களை வாங்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே மிசோரம் மாநிலத்தின் பெரும்பாலான விவசாய கிராமங்களில் "கோலோக் டாவ்" என்கிற ஆளில்லா கடைகள் புழக்கத்தில் உள்ளன. தோட்டங்களை ஒட்டிய தெருக்களில் பொருட்களை வைத்து விட்டு அதற்கான விலையை எழுதி வைத்துவிடுவார்கள். அங்கே ஒரு பாட்டில் இருக்கும். தேவையானவர்கள் பொருட்களை எடுத்துக்கொண்டு அதற்குரிய பணத்தை அதில் போட்டு விடுவார்கள். மீதி சில்லறை எடுப்பதாக இருந்தாலும் சரியான சில்லறையை எடுத்துக்கொண்டு உரிய பணத்தை அதில் போட்டுவிடுவார்கள். உலகத்திலேயே மிசோரம் கிராமங்களில் மட்டுமே இப்படியான பழக்கம் நடைமுறையில் உள்ளது. முன்பு ஒன்றுபட்ட சோவியத் ரஷ்யாவில் இப்படியான கடைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

-வரவனை செந்தில்

Friday, November 18, 2016

பணத்தை செல்லாது என அறிவித்து தோல்வி அடைந்த நாடுகள்!

இந்திய மக்களிடம் 80 சதவீதம் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள், பிரதமர் மோடி அறிவித்த நான்கு மணிநேரத்தில் செல்லாக் காசாகி விட்டன. மீதமுள்ள 20 சதவீதம், 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகளை வைத்துதான், கடந்த 8 நாட்களாக மக்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். வங்கிகளில் போதிய அளவு பணம் கையிருப்பு இல்லாததால், நாட்டில் அவரசநிலை ஏற்பட்டுள்ளது போல மக்கள் உணர்கிறார்கள்.

இப்போது இந்தியப் பிரதமர் மோடி எடுத்துள்ள இந்த நடவடிக்கையை கடந்த 40 ஆண்டுகளில் பல நாட்டு அதிபர்களும், சர்வாதிகாரிகளும் எடுத்துள்ளனர். 'கறுப்புப் பணத்தை ஒழிக்கிறேன், ஊழலைத் தடுக்கிறேன்' என்று கூறி, மக்களிடம் புழக்கத்தில் இருந்த பணத்தை திடீரென செல்லாது என கானா, நைஜீரியா, மியான்மர், சயீர், வடகொரியா நாடுகளின் சர்வாதிகாரிகளும், சோவியத் யூனியன் அதிபரும் அறிவித்தார்கள். இதன் மூலம் அந்தந்த நாடுகளில் கறுப்புப் பணம் ஒழிந்ததா? பணவீக்கம் குறைந்ததா? மக்கள் சுபிட்சம் அடைந்தார்களா? வரலாறு நமக்கு உணர்த்துவது என்ன?

1982-ல், கானா நாட்டில், ஊழலை தடுப்பதற்கும், மக்களிடம் அதிகப்படியாக உள்ள பணப்புழக்கத்தை குறைக்கவும் அதிக மதிப்பு கொண்ட பணம் செல்லாது என அறிவிக்கப்பட்டது. ஏழை மக்களும், விவசாயிகளும் தங்களது பணத்தை மாற்ற பல கிலோ மீட்டர் நடக்க வேண்டியதாயிற்று. இதனால் வங்கிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து, வெளிநாட்டு பணங்களையும், சொத்துக்களையும் வாங்கினர்.

1984-ம் ஆண்டில், நைஜீரியாவை ஆண்டு வந்த முகம்மது புகாரி தலைமையிலான இராணுவ அரசாங்கம், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையாக மக்களிடம் புழக்கத்தில் இருந்த பணத்தை ரத்துசெய்துவிட்டு, புதிய நிறம் கொண்ட புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. இந்த நடவடிக்கையால் விலைவாசி அதிகரித்ததுடன், நாடும் கடன் சுமையில் சிக்கியது.

1987-ம் ஆண்டில், மியான்மரை ஆட்சி செய்த இராணுவ ஆட்சிக் குழு, புழக்கத்திலிருந்த 80 சதவீத பணங்களை செல்லாது என அறிவித்தது. இதனால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்ததால், பெருமளவு மக்கள் வீதியில் இறங்கிப் போராடினர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மக்களை ராணுவ ஆட்சியாளர்கள் கொன்றனர்.

1990-களில் ஆப்பிரிக்க நாடான சயீர் (தற்போது காங்கோ மக்களாட்சிக் குடியரசு) நாட்டின் பொருளாதாரம் தேக்க நிலையில் இருந்தது. இதனால் நாட்டை ஆண்டு வந்த சர்வாதிகாரி மொபுடு சேசே, பணத் தாள் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். 1993-ல் மக்களிடம் புழக்கத்தில் இருந்த பணத்திற்கு தடை விதித்தார். இந்த சீர்திருத்தம் பொருட்களில் விலைவாசியை பல மடங்கு உயர்த்தியதுடன், அந்நாட்டு பணத்தின் டாலருக்கு மாற்று விகிதமும் அதலபாதாளத்திற்குச் சென்றது. அதன் பிறகு உள்நாட்டுப் போர் ஏற்பட்டு, மொபுடு பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1991-ம் ஆண்டு சோவியத் யூனியனை ஆட்சி செய்து கொண்டிருந்த, கோர்பசேவ், கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக அதிக மதிப்புள்ள ரூபிள்களை செல்லாது என அறிவித்தார். இந்த சீர்திருத்தம் அதிகரிக்கும் பணவீக்கத்தை தடுத்து நிறுத்தத் தவறி விட்டது. விலைவாசி உயர்ந்தது. கோர்பசேவ் அரசு மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை சிதைந்தது. சோவியத்தில் நிலவிய அரசியல் மோதல்கள் பொருளாதாரத்தை சரிவை நோக்கி இட்டுச் சென்றது. சில மாதங்களில் கோர்பசேவின் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சிகளும் நாட்டிற்குள் நடந்தன.

2010-ல் வடகொரியாவை ஆண்டு கொண்டிருந்த சர்வாதிகாரி கிம் ஜோங், நாட்டின் பொருளாதாரத்தின் கட்டுப்பாட்டை இறுக்கவும், கறுப்பு சந்தைகளை முடக்கவும் அதிக மதிப்புள்ள நாணயங்களை தடை செய்தார். இந்த நடவடிக்கையால், விவசாயம் முடங்கி கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் அரசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்ததால், நாட்டில் அசாதரண சூழ்நிலை உருவானது. மக்களின் கோபத்துக்கு உள்ளான சர்வாதிகாரி கிம் ஜோங், மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.

Monday, November 14, 2016

கருப்பு பணம்: சென்னையில் பணத் தொட்டி திறப்பு

சென்னை : கருப்பு பணத்தை ஏழைகளுக்கு கொடுங்கள் ,அப்படி கொடுக்க பயமாக இருந்தால் நாங்கள் பணத்தொட்டி திறக்கிறோம் அதில் போடுங்கள் என்று இந்திய தேசிய லீக் தலைவர் தடா ரஹீம் தெரிவித்துள்ளார்.

கருப்புப்பணம் மற்றும் கள்ள பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக நவம்பர் 9 முதல் ரூ.500 மற்றும் 1,000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த செவ்வாய்கிழமை அறிவித்தார். ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் கடும் வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதனால் சில இடங்களில் பணம் எரிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தனர்.

இதனையடுத்து வீணாகும் கருப்பு பணத்தை ஏழைகளுக்கு கொடுங்கள் எனவும் அப்படி கொடுக்க பயமாக இருந்தால் நாங்கள் பணத்தொட்டி திறக்கிறோம் அதில் போடுங்கள் என இந்திய தேசிய லீக் தலைவர் தடா ரஹீம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அந்தக்கட்சியின் தலைவர் தடா ஜெ. அப்துல் ரஹிம் கூறுகையில், "2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வங்கிகளில் டெபாசிட் செய்தால் வரி விதிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இதனால் நிச்சயம் வரி செலுத்தாமல் பதுக்கி வைத்துள்ள பணத்தை, வெளியில் கொண்டு வருவதில் சிரமம் ஏற்படும். மேலும் அரசு நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் கறுப்புப் பணத்தை மாற்றவும் இயலாது.

இதனால் அந்தப்பணத்தை ஏழைகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தால் அவர்களது வாழ்க்கை முன்னேறும். ஏழைகளுக்கு பணம் கொடுக்க தயங்கும் மற்றும் பயப்படுபவர்கள் எங்கள் கட்சி தலைமை அலுவலகத்தை நாடலாம். எங்களிடமும் தகவல் சொல்லத் தயங்கினால் அலுவலக வாசலில் பணத்தொட்டி திறக்கப்பட்டுள்ளது. அதில் உங்களது பணத்தை யாருக்கும் தெரியாமல் போட்டுவிட்டுச் செல்லலாம்.

எங்களிடம் தகவல் தெரிவித்தாலும் அது ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும். இந்த பணத்தொட்டி என்பது அட்டைப் பெட்டியால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் கோடிக்கணக்கான ரூபாய்களை போடலாம். இந்த பணத்தொட்டி 339, காயிதே மில்லத் ரோடு, ஆதம் மார்க்கெட் வளாகம், திருவல்லிக்கேணி என்ற முகவரியில் உள்ளது" என்றார்.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள இடங்கள்

மக்கள் நலன் கருதி குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ஏற்கும் சலுகையை மத்திய அரசு மேலும் நீட்டித்துள்ளது.

ஐநூறு மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த 8 ஆம் தேதி அறிவித்தது. இந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி மற்றும் அஞ்சலகங்களில் மாற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இருந்தும் இந்த தீடீர் அறிவிப்பால் மக்கள் தங்கள் அத்யாவசிய தேவைகளுக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் பழைய ரூபாய் நோட்டுகளை இன்று (நவ.14) வரை பெட்ரோல் பங்க்குகள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் இந்த கால அவகாசத்தை நீட்டித்து வரும் 24 ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

அதன்படி, பால் விற்பனை நிலையங்களில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வழங்கலாம். இதே போல ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள்,‌ விமான நிலையங்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகளிலும் பழைய ரூபாய் நோட்டுக்களை வழங்கி பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்ப‌ட்டுள்ளது.

வீடுகளுக்கான மி்ன்சார கட்டணங்கள், சிலிண்டர் கட்டணங்கள், உள்ளாட்சிகளுக்கான வரிகளையும் பழைய ரூபாய் நோட்டுகளில் செலுத்தலாம். ‌ மருத்துவர் பரிந்துரை சீட்டுகளுடன் ‌அரசு மற்றும் தனியார் மருந்துக்கடைகளில் பழைய நோட்டுகள் ஏற்கப்படும். இடுகாடுகள், சுடுகாடுகள் ஆகிய இடங்களிலும் 24ம் தேதி நள்ளிரவு வரை பழைய 500, 1000 ரூபாய் ஏற்றுக் கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதேபோல நாடுமுழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் வரும் 18 ஆம் தேதி வரை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தலாம் என மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஸ்டெதஸ்கோப் முனீஸ்வரர்- மலேசியா

முனீஸ்வரனின் ரூபங்கள் பொதுவாக பரிவார தெய்வங்களாகவே அமைந்திருக்கும். ஆனால், முனீஸ்வரரை மூலவராகக் கொண்டு அமைந்த ஆலயம் மலேசியாவில் செரிம்பன் நகரிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது.

கோயிலுக்குள் நுழைந்ததும் ஸ்ரீவாழ்முனி வனமா முனீஸ்வரர், கையில் திரிசூலமும், ஸ்டெதஸ்கோப்பும் கொண்டு, கம்பீரமாக காட்சியளிக்கிறார். கண்கள் பிரகாசமாக நம்மைப் பார்ப்பது போன்று உள்ளன. இவரை, ‘மருத்துவர் அப்பா’ என்று மக்கள் அழைக்கின்றனர். சுற்றிலும் பிற தெய்வங்களின் புகைப்படங்களும், சிலைகளும் உள்ளன.

உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டையும் பேணுபவராக விளங்குகிறார் இவர். உடல் நோய் தீர்க்க ஸ்டெதஸ்கோப்பும், மனம் மற்றும் பிற துன்பங்களை போக்க திரிசூலமும் அடையாளங்கள்.இவரை வணங்கினால் தீராத நோயும் குணமடையும் என்கிறார்கள் பக்தர்கள்
சுமார் 37 அடி நீளம் கொண்ட குழந்தை வடிவ பிரமாண்ட பாலசிவன், பள்ளி கொண்டு சயன நிலையில் உள்ளார். குழந்தை போன்ற பிரமாண்ட உருவத்தில் அவரைக் காணும்போது உள்ளத்தில் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது. இது உலகிலேயே மிகப்பெரிய சிவன் உருவம் என்றும் சொல்கிறார்கள். இவரைச் சுற்றிலும் பக்தர்களால் வழங்கப்பட்ட விளையாட்டு சாமான்கள் உள்ளன.
மற்றொரு இடத்தில், சுமார் 8 அடி உயரம் கொண்ட நரசிம்மர் சிலை உள்ளது. அதன் பின் பகுதியில் ஒரு அறை மிகப்பெரிய சிவ லிங்க சன்னிதி. சுற்றிலும் விநாயகர், மகா விஷ்ணு போன்றோரின் சிலைகள் காணப்படுகின்றன.

கோயிலின் நந்தவனப் பகுதியில் முருகருக்கும் விநாயகருக்கும் தனிச் சன்னிதிகள் உள்ளன. சுவர்களின் ஆங்காங்கே பிரம்மாண்ட வண்ண ஓவியங்கள்.தென்னை மரத்தின்கீழ், தாமரை மீது அமர்ந்த புத்தர் சன்னிதி. மங்குஸ்தன் மரத்தின் கீழ் சிவசங்கரி அம்மன், காளியம்மன் சன்னிதி என வியப்பூட்டும் அமைப்புகள்.

இந்தக் கோயிலில் மிகவும் பிரசித்திப் பெற்றது அருள்வாக்கு கூறுதல். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகளுடன் 9 மணிக்கு மேல் அருள்வாக்கு சொல்லப்படுகிறது. அருள்வாக்கு சொல்லும்போது, பூசாரி கூர்மையான இரண்டு வாள்கள் பதிக்கப்பட்ட ஊஞ்சலில் ஏறி நின்று ஆடுகிறார். திருவிழாவின்போது, தீமிதி நிகழ்ச்சியில் நெருப்பில் நடனம் ஆடுகிறார்கள். அருள்வாக்கு சொல்லப்படும் நாட்களில், பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் இங்கு வருகின்றனர்.

தொழில் வளர்ச்சி, குடும்பப் பிரச்னை, குழந்தை பாக்கியம் வேண்டுவோரும் வருகின்றனர்.உலக அளவில் புகழ்பெற்ற கோயிலாக இன்று விளங்குகிறது.

Sunday, November 13, 2016

பாடிகாட் முனீஸ்வரன் கோயில்

எல்லை காத்த சாமி:

கடந்த, 1860ம் ஆண்டு, இப்போதைய தலைமை செயலக இடத்தில், கோட்டை சாமியாக அருள் பாலித்து வந்தார் முனீஸ்வரன். பின், 80 ஆண்டுகளுக்கு முன்பு, பல்லவன் பணிமனையின் முன்பக்கம் மாற்றப்பட்டார்.அந்த காலகட்டத்தில், பல்லவன் இல்லத்தில் பேருந்துகளுக்கு, "பாடி கட்டும்' வேலைகள் நடந்தன. அதே போல், ரயில் பெட்டிகளுக்கு மேற்கூரை அமைக்கும் பணியும் நடந்து வந்தது.இரண்டு இயந்திர வாகனங்களுக்கும், பாடிகட்டும் இடத்தில் இருந்ததால், முனீஸ்வரனுக்கு, பாடிகாட் முனீஸ்வரன் என்ற பெயர் வந்தது.

புது வாகனம்:

சென்னையில், புது வாகனம் வாங்கியோர், ஆர்.டி.ஓ., அலுவலகம் போவதற்கு முன்பாக, பல்லவன் இல்லத்தின் அருகில் உள்ள, பாடிகாட் முனீஸ்வரன் கோவிலுக்குச் செல்வதற்கே முக்கியத்துவம் கொடுப்பர்.புது வாகனம் வாங்கிய பின், இங்கு பூஜை செய்தால், வாகனத்திற்கு விபத்தே ஏற்படாது என்பது, சென்னைவாசிகளின் நம்பிக்கை. வேன், கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களுக்கு 250 ரூபாய் பூஜை கட்டணமும், இருசக்கர வாகனங்களுக்கு 150 ரூபாயும் முனீஸ்வரன் கோவிலில்வசூலிக்கப்படுகிறது.

"குவார்ட்டர்' அபிஷேகம்:

மேலும், சிறப்பு அபிஷேகம் செய்ய, 1,500 ரூபாய் கட்டணம் வ‹லிக்கப்படுகிறது. இதில், மதுபான "குவார்ட்டர்' குளியலும், சந்தன காப்பும் தான் சிறப்பு. இப்படி, தினமும், 30க்கும் மேற்பட்ட அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.அபிஷேகத்தில், பக்தர்கள் கொண்டு வரும் குவார்ட்டரில் குளிப்பது, முனீஸ்வரனுக்கு, முக்கிய சடங்கு. தினமும் மதுபான அபிஷேகம் நடந்தாலும், துளியளவு வாசம் கூட, வெளியில் வருவதில்லை. அபிஷேகத்திற்கு பிறகு சாத்தப்படும் சந்தனகாப்பே இதற்கு காரணம் என்கின்றனர், கோவில் பணியாளர்கள்.இங்குள்ள முனீஸ்வரனின் கடைக்கண் பட்டால், கண் திருஷ்டி முறிந்து விடும் என, பக்தர்கள் நம்புவதால், திருஷ்டி நீக்க, கறுப்பு, சிவப்பு கயிறுகள், கண் திருஷ்டி கீ செயின் என, பல வியாபார பொருட்கள், அமோகமாக விற்பனையாகி வருகின்றன.பெரும்பாலும், வாகனத்துக்கு பூஜை செய்ய வருவோர், மறக்காமல் கண் திருஷ்டி கயிறையும் வாங்கி செல்வர்.

ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு...:

மேலும், எலுமிச்சை, அபிஷேக பொருட்கள், பூ, பழம் என, ஒவ்வொரு பொருளும், விற்பனைக்குரிய பொருளாகவே இருக்கிறது. எனவே, கோவில் மூலம் வரும் அதிகப்படியான வருமானத்தை, எதிர்பார்த்தே, தயங்காமல் ஏலம் எடுக்கப்படுகிறது. கடவுள், நம்பிக்கை, வருமானம் என்பதை தாண்டி,கோவில் வருமானத்தின் ஒரு சதவீதம், போரில் இறந்த ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு செல்கிறது. முனீஸ்வரன் அப்போது மட்டுமல்ல, இப்போதும், தம் பக்தர்கள் மூலமாகஎல்லையை காத்து கொண்டிருக்கிறார் என்கின்றனர், கோவில் பணியாளர்கள்.

ஏலத்தில் சாதனை:

இந்த கோவிலில் ஆண்டு தோறும், கோவில் பராமரிப்புக்காக, ஏலம் விடப்படுவது வழக்கம். கடந்தாண்டு, இந்த ஏலம், 49 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்டது. இந்தாண்டு, ஏல தொகை, 50 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. கடந்தாண்டு ஏலத்தை எடுத்த, தனியார் அறக்கட்டளையே இந்தாண்டு ஏலத்தையும், 54 லட்சம் ரூபாய்க்கு எடுத்துள்ளது.ராஜகோபுரம், பல்வேறு சன்னிதிகள் அடங்கிய பெரிய கோவில்களை மிஞ்சும் வகையில், சாலையோரத்தில் உள்ள பாடிகாட் முனீஸ்வரன் கோவில், ஏலத்தில் சாதனை படைத்திருக்கிறது.

Friday, November 11, 2016

ஏன் செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டக்கூடாதுனு தெரியுமா?

துர்க்கை மற்றும் லட்சுமி தினம்

இந்த மூட பழக்கத்திற்கு வேறு காரணங்கள் உள்ளன. இந்தியாவின் பல பகுதிகளில் செவ்வாய் கிழமை என்பது துர்க்கை மற்றும் லட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது.

செலவு கூடாது:

செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமிக்கு உரிய நாள் செவ்வாய். இதன் காரணமாக இந்த நாளில் செல்வத்தை வீட்டை விட்டு வெளியேற்ற பெரியவர்கள் மறுத்து வருகிறார்கள். நம்மிடம் உள்ள லட்சுமியை தானம் செய்தால், லட்சுமி சென்று விடுவாள் என்ற நம்பிக்கை பண்டைய காலம் முதல் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.

வீட்டை சுத்தம் செய்யமாட்டார்கள்

எப்படி முடி வெட்டவோ, ஷேவிங் செய்யவோ, நகம் வெட்டவோ கூடாதோ அதேப் போல் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவி விடவோ அல்லது வீட்டில் உள்ள பழைய பொருட்களை தூக்கி எறியவோ மாட்டார்கள். இப்படி, செய்தால் வீட்டில் குடி கொண்டுள்ள லட்சுமி நம்மை விட்டு வெளியேறிவிடுவாள் என்ற நம்பிக்கை தான் முக்கிய காரணமாம்.

ஜோதிடம்

இச்செயல்களை செய்தால் அவரது வாழ்நாளில் 8 மாதங்கள் குறைவதாக ஜோதிடம் சொல்கிறது. காரணம், செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் குடி கொண்டிருக்கிறார். மனித உடலில், செவ்வாய் இரத்தத்தில் குடியிருக்கிறார். இரத்தத்தில் இருந்த தான் முடி வளர்கிறது. எனவே செவ்வாய் கிழமைகளில் முடி வெட்டினால், இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருமாம்.

செவ்வாய் கிரகத்தின் எதிர்மறை விளைவுகள்

நம் உடலின் முடியை சனி நிர்வகிக்கிறது. செவ்வாய் கிழமைகளில் செவ்வாய் ஆளுகிறது. உண்மையிலேயே சனி தான் செவ்வாயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது. ஒருவேளை செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்டினால் சனி கிரகத்தின் சக்தி குறைந்து பின் செவ்வாயின் எதிர்மறை விளைவுகளுக்கு உள்ளாகக்கூடும். எனவே தான் செவ்வாய் கிழமைகளில் முடியை வெட்ட வேண்டாம் என்று சொல்கிறார்களாம்.

Wednesday, November 9, 2016

உயிர்களின் பரிணாமத்தினை விளக்கும் தசவதாரம்

பரிணாமக் கொள்கையை விளக்கும் படைப்பே தசாவதாரம்

உலகில் உள்ள பிற மதங்கள் அறிவியலுக்கு எதிரானதாகவும், அறிவியலை மறுப்பதாகவும் இருக்கின்ற போது, இந்து மதம் மட்டுமே அறிவியலோடு இணைந்த மதமாக இருக்கிறது. நமது முன்னோர்கள் தாங்கள் கண்டறிந்த அறிவியல் விசயங்களை நமக்கு மறைமுகமாக உணர்த்தி சென்றுள்ளார்கள். வடக்கு திசை நோக்கி படுக்க வேண்டாம் என்று காலம் காலமாக சொல்லப்பட்டு வந்து கொண்டிருந்த்தை, சில மூடர்கள் மூடநம்பிக்கை என்று கிண்டல் செய்தார்கள். ஆனால் வடக்கு திசை நோக்கி படுக்கும் போது மனிதனின் மூளையை பூமிகாந்தம் பாதிக்கிறது என்ற உண்மையை பிறகே மக்கள் உணர்ந்தார்கள். மஞ்சளையும் வேம்பினையும் கிருமி நாசினியாக இன்றுதான் மேலுலகம் கண்டுபிடித்திருக்கிறது. ஆனால் நம் ஞானிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அதை கண்டறிந்து பயன்படுத்திவந்துள்ளார்கள். அவர்கள் பயன்படுத்தியதோடு நில்லாமல் நம்முடைய அன்றாட வாழ்விலும் அவைகளை பயன்படுத்த வைத்துள்ளார்கள். இப்படி இந்து மதத்தில் நிறைய விசயங்களில் மறைமுகமாக இருக்கும் விஞ்ஞானத்தினை நாம் இப்போது அறிந்துகொண்டிருக்கிறோம். அந்த வகையில் இன்று டார்வினின் பரிணாமக் கொள்கையை எளிமையாக விளக்கும் இந்து மதத்தினைப் பற்றி காண்போம்.

பரிணாமக் கொள்கை

சார்லஸ் ராபர்ட் டார்வின் கடல் வழியே, எச்எம்எஸ் பீகிள் (HMS Beagle) என்னும் கப்பலில், உலகில் பல இடங்களுக்கும் சென்று, உயிரினங்களின் தோற்றம் பற்றி ஆராய்ந்தார். ஊர்வன, பறப்பன, நடப்பன ஆகியவற்றின் பல எலும்புகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்ட போது, அவைகளுக்குள் சில ஒற்றுமைகள் இருப்பதை அறிந்தார். அவைகளைக் கொண்டு உயிரினங்களின் தோற்றம் எனும் நூலில் விவரித்துள்ளார். இதனை பரிணாமக் கொள்கையென கூறுகின்றார்கள். இந்த டார்வினின் பரிணாம வளர்ச்சி கொள்கை பெரும்பாலான ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட படைப்புக் கொள்கையாகும்.

பூமியில் நீர் மட்டுமே சூழ்ந்திருந்த காலத்தில் நீர்வாழ்பவன தோன்றின. பின் நாட்களில் நீர் வற்றி, நிலம் தென்பட்ட போது, நீரில் வாழும் உயிர்களில் சில நீர் நில வாழ்பவனவாக மாற்றம் அடைந்தன. அவற்றிலிருந்து ஊர்வன உயிரினங்கள் தோன்றின. பின் பாலூட்டிகளாக அவை மாற்றம் அடைந்தன. பாலூட்டிகளில் ஒன்றான குரங்கினம் சிந்தனை செய்ய தொடங்கிது. அதனால் ஆறறிவு பெற்ற மனிதன் தோன்றினான். மற்ற பாலூட்டிகள் போல் அல்லாமல் இரண்டு கால்களால் மனிதன் நடந்தான்.

 மூர்கமாக வேட்டையாடும் குணம் அவனுக்குள் இருந்தது. அதனால் வேட்டையாடி மிருகங்களை கொன்று உண்டான். தனித்தனியாக இருந்த மனிதன் குழுவாக இணைந்தார்கள். தங்களுக்குள் தலைவன் ஒருவனை தேர்ந்தெடுத்து அவன் பின் மற்றவர்கள் சென்றார்கள். அவன் சொல்படி நடந்தார்கள். நதிப்பகுதியில் விவசாயம் செய்து நாகரீக மனிதனாக மாறினான். கால்நடைகளை விவசாயத்திற்கு பயன்படுத்தினான். அவைகளை காடுகளில் மேய்ச்சல் செய்து பிழைத்தான். பின் தன்னுடைய அறிவினைப் பயன்படுத்தி தற்போதுள்ள விஞ்ஞான மனிதனாக மாறிவருகிறான். வருங்காலத்தில் உலகினையே அழிக்கும் சக்தியுடைவனாக மாறுவான் என்பதில் சந்தேகமில்லை.

தசவதாரம்

உலகில் அதர்மம் அதிகமாகும் பொழுது தர்மத்தினை நிலைநாட்டுவதற்காக திருமால் அவதாரம் எடுக்கிறார். எண்ணற்ற அவதாரங்களை திருமால் எடுத்திருந்தாலும் மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமண அவதாரம், பரசுராம அவதாரம், ராம அவதாரம், பலராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், கல்கி அவதாரம் என்ற பத்து அவதாரங்கள் மட்டும் தசவதாரங்கள் என்று பெருமையாக அழைக்கப்படுகின்றன.

இந்த அவதாரங்களை சற்று உற்றுநோக்கும் போது, இதில் ஒளிந்திருக்கும் பரிணாமக் கொள்கையை அறிய இயலும். டார்வினின் பரிணாம வளர்ச்சி கொள்கை உயிரிகளிலிருந்து மனிதன் தோன்றியதோடு நின்றுவிடுகிறது. அதன் பிறகு மனிதனின் பரிணாமம் துவங்குகிறது. தசவதாரத்தின் முதல் ஐந்து அவதாரங்கள் உயிர்களிலிருந்து மனிதனாக மாற்றம் அடைந்ததை விவரிக்கின்றன. அடுத்த ஐந்து அவதாரங்களும் மனிதனின் படிவளர்ச்சியை விவரிக்கின்றன.

மச்ச அவதாரம் – (மீன்- நீர் வாழ்வன)

பிரளய காலத்தில் மீனாக திருமால் அவதாரம் எடுத்து உலகை காப்பாற்றியதாக புராணம் கூறுகிறது. இது தசவதாரத்தில் முதல் அவதாரமாகும். பரிமாணவியல் கொள்கைபடி நீரில்வாழும் உயிரமான மீனிலிருந்தே உயிரங்களின் தோற்றம் ஆரமித்ததை குறிக்கிறது.

கூர்ம அவதாரம் – (ஆமை- நீர் நில வாழ்வன)

திருமாலின் இரண்டாவது அவதாரம் கூர்மம். பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடையும் போது, மேரு மலையை தாங்கிபிடிக்க திருமால் ஆமை ரூபத்தில் அவதாரம் எடுத்ததாக புராணம் கூறுகிறது. பரிணாமக் கொள்கையைப்படி நீர் வாழும் உயிர் நீர்நில வாழும் உயிராக மாற்றம் அடைந்ததாக கூறப்படுகிறது.

வராக அவதாரம் – (பன்றி- நிலத்தில் வாழும் பாலூட்டி)

தசவதாரத்தின் மூன்றாவது அவதாரம் வராகம். இரணியாசுரன் எனும் அரக்கனிடமிருந்து பூமியை காப்பற்ற திருமால் எடுத்த அவதாரம் என்று புராணம் கூறுகிறது. பரிணாமிவியல் கொள்கைபடி, நீர்நில வாழ்பவையாக இருந்தவை நில வாழ்பவையாக மாறியதை குறிக்கிறது.

நரசிம்ம அவதாரம் – (மிருகமாக இருந்து மனிதனாக மாறும் தன்மை)

தசவதாரத்தின் நான்காவது அவதாரம் நரசிம்மம். நரன் என்பது மனிதனைக் குறிக்கும் சொல். மனிதன் பாதியாகவும், மிருகம் பாதியாகவும் இருக்கின்ற திருமாலின் அவதாரம் இரணியனை கொல்ல எடுக்கப்பட்டதாக புராணம் கூறுகிறது. நிலவாழ்பவைகளாக இருந்த மிருகம் சிந்தனை திறன் பெற்று மனிதன் பாதி, மிருகம் பாதியாக இருந்த தொடக்க நிலையை இந்த அவதாரம் குறிக்கிறது.

வாமண அவதாரம் – (மனித தோற்றம்)

தசவதாரத்தின் ஐந்தாவது அவதாரமான வாமண அவதாரமே முழுமனிதனாக திருமால் எடுத்த அவதாரமென புராணங்கள் கூறுகின்றன. பரிணாமக் கொள்கைபடி முழு மனிதனை இந்த அவதாரம் குறிக்கிறது.

பரசுராம அவதாரம் – (மூர்கமாக வேட்டையாடும் மனிதன்)

தசவதாரத்தின் ஆறாவது அவதாரம் பரசுராம அவதாரம். மிகவும் மூர்க்க மனிதராக இந்த அவதாரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. கோடாரி ஆயுதத்தினை சிவனிடமிருந்து பெற்ற மனிதராக பரசுராமர் புராணங்களில் குறிப்பிடப்படுகிறார். மனிதனாக மாற்றம் அடைந்த பின்பு, மிருகங்களை மூர்க்கதனமாக வேட்டையாடியதை இந்த அவதாரம் குறிக்கிறது.

ராம அவதாரம் – (குழுக்களாக இணைந்து தலைவனை தேர்ந்தெடுத்தல்)

தசவதாரத்தின் ஏழாவது அவதாரமான ராம அவதாரம் இராவணனை அழிப்பதற்காக திருமாலால் எடுக்கப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. மனிதன் குழுக்களாக இணைந்து தலைவனை தேர்ந்தெடுத்து வாழ்ந்தமையை ராம அவதாரம் குறிக்கிறது.

பலராம அவதாரம் –(விவசாயம் செய்யும் மனிதன்)

தசவதாரத்தின் எட்டாவது அவதாரம் பலராமர். கிருஷ்ணனின் அண்ணனாக திருமால் அவதரித்தாக புராணம் கூறுகிறது. பலராமர் கைகளில் ஏர் கலப்பை விவசாயம் செய்யும் மனிதனை குறிக்கிறது.

கிருஷ்ண அவதாரம் – (கால்நடைகளை மேய்க்கும் மனிதன்)

தசவதாரத்தின் ஒன்பதாவது அவதாரம் கிருஷ்ணவதாரம். கிருஷ்ணன் கம்சன் எனும் அரக்கனை அழிக்க அவதரி்த்ததாக புராணங்கள் கூறுகின்றன. கிருஷ்ணன் ஆடுகளையும், மாடுகளையும் மேய்க்கும் சிறுவனாக இருந்தது கால்நடைகளை தங்களின் வேலைகளுக்கு பயன்படுத்திக் கொண்ட மனிதர்களின் பரிணாமத்தினை குறிக்கிறது.

கல்கி அவதாரம் –

தசவதாரத்தின் இறுதி அவதாரம் கல்கியவதாரமாகும். கலியுகத்தின் முடிவில் திருமால் எடுக்கும் அவதாரமாக புராணம் கூறுகிறது. ஆயுதங்களும், வாகனமும் கொண்ட அவதாரமான கல்கி தினம் தினம் சிந்தனையில் வளர்ந்து கொண்டிருக்கும் மனிதன் மகாசக்தியாக மாறுவதை குறிப்பதாகும்.

மேலைநாட்டு அறிஞர்கள் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு ஆய்வு செய்து அறிந்து கொண்ட பரிணாமவியல் கொள்கை இந்து மதத்தின் தசவதாரத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தெளிவுற எடுத்துரைக்கப்பட்டுள்ளமை வியப்பானதல்லவா?.

நன்றி –
வலைப்பூக்கள்

வீட்டில் துளசி மாடம் வைத்து வணங்குவது ஏன்?

தாவர இனங்களில் துளசி மிகவும் மருத்துவ சக்தி வாய்ந்தது. பொதுவாக தாவரங்கள் காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது நமக்கு தெரியும். ஆனால் துளசிச் செடி மற்ற தாவரங்களை விட மிக அதிகமாக ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை கொண்டது. சுற்றுச்சூழலில் உள்ள காற்று மண்டலைத்தையே சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனாலேயே ஒவ்வொரு வீடுகளிலும் ஆக்ஸிஜனை அதிகம் வெளியிடும் துளசியை நட்டு வளர்த்து அதிகாலை வேளையில் அதைச்சுற்றி வந்து வழிபடும் முறையை வைத்துள்ளனர்.

அதிகாலை மூன்று ம‌ணிமுத‌ல் ஐந்து ம‌ணிவ‌ரை பிர‌ம்ம‌ முஹூர்த்த‌ம் என்று சொல்லுவார்க‌ள். அதாவ‌து இந்த‌ வேளையில் தான் இய‌ற்கையின் அத்த‌னை அம்ச‌ங்க‌ளும் மிக‌வும் புதிதாதக‌ச் சுத்திக‌ரிக்க‌ப்ப‌ட்ட‌தைப் போல‌ இருக்கும். அதாவ‌து இந்த‌ நேர‌த்தை தான் ஓசோன் அதிக‌மிருக்கும் நேர‌ம் என்று இன்றைய அறிவிய‌லாள‌ர்க‌ள் கூறிகிறார்க‌ள்.

அதாவ‌து இய‌ற்கைய‌க‌வே காற்றில் ஆக்ஸிஜ‌ன் அதிக‌மாக‌ இருக்கும் நேர‌மான‌ அதிகாலை வேளையில் துள‌சிச் செடியைச் சுற்றி வ‌ந்தால் அதிக‌ சுத்த‌மான‌ ஆக்ஸிஜ‌னை சுவாசிக்க‌லாம் என்ப‌து இத‌ன் சாராம்ச‌ம். அதாவ‌து எல்லா ஜீவ‌ராசிக‌ளும் சுத்த‌மான‌ ஆக்ஸிஜ‌னை சுவாசித்து ஆரோக்கிய‌மாக‌ வாழ‌ வேண்டும் என்ற‌ தாத்ப‌ரிய‌த்திலேயே இந்த‌ ச‌ம்பிர‌தாய‌ம் அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.

தற்போது தாஜ்மஹாலைக் காப்பாற்ற அதைச்சுற்றி லட்சக்கணக்கில் துளசிச் செடியை நட்டு வைக்கப் போகிறார்கள். ஏனெனில் தாஜ்மஹாலைச் சுற்றி காற்று மாசுபடுவது தடுக்கப்படுவதால் அந்த பழம்பெருமை வாய்ந்த கட்டடம் வேகமாக அழிவதிலிருந்து காப்பாற்றப்படும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். ஒரு கல்லால் கட்டிய கட்டிடத்தையே துளசிச் செடி காக்குமென்றால் இரத்தமும் சதையும் கொண்ட மனிதனையும் காக்கும் என்பது உண்மைதானே.

 இந்துக்கள் வழிபடும் துளசியை தாஜ்மஹால் முன்பு நடக்கூடாது என்று எந்த முஸ்லீமும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஏனேனில் இது அறிவியல் ரீதியான விளக்கத்துடன் நட்டு வைக்கப்படப்போகிறது. இந்து தர்மத்தில் இது நல்லது என்று சொல்லப்பட்டிருக்கிறது அதனால் நட்டுவைக்கிறோம் என்று சொல்லியிருந்தால் பெரிய பிரளயமே வந்திருக்கும் என்பது வேற விஷயம்.

அது மட்டும் அல்ல, ம‌ருத்துவ‌த்திலும் துள‌சிக்கு மிக‌ முக்கிய‌மான‌ இட‌ம் உண்டு. துள‌சி இல்லாத‌ ஆயுர்வேத‌ ம‌ற்றும் சித்த‌ ம‌ருத்துவ‌மே கிடையாது. இப்ப‌டியான‌ அற்புத‌ச் செடியை க‌ண்ட‌றிந்து அத‌ன் ப‌ல‌னையும் அனைத்து ம‌க்க‌ளும் ஆழ‌மாக‌ அனுப‌விக்க‌ வேண்டும் என்ப‌ற்க்காக‌ அதை ஒரு வ‌ழிபாட்டுச் ச‌ம்பிர‌தாய‌மாக‌வே ந‌ம் இந்து த‌ர்ம‌த்தில் வைத்துள்ளார்க‌ள். வேறு எந்த‌ ம‌த‌த்திலும் இவ்வாறு செடி கொடிக‌ளை கூட‌ பூஜிக்கும் உண்ண‌த‌ப்ப‌ழ‌க்க‌ம் கிடையாது என்ப‌தை எல்லோரும் யோசிக்க‌ வேண்டும்.

எந்தப் பெருமாள் கொயிலுக்கு போனாலும் ம‌ன நலனுக்கு பெருமாளைக் கும்பிட்டால் உட‌ல் ந‌ல‌த்திற்கு துள‌சி தீர்த்த‌த்தையும் பிர‌சாத‌மாக‌ வாயில் போட்டு சுவைக்க‌ துள‌சியும் கையில் கொடுப்ப‌துண்டு. ஆக‌ ம‌னோவிய‌லும் அறிவிய‌லும் ஒருங்கே சேர்ந்து தான் இந்து த‌ர்ம‌ம் ந‌ம் எல்லோரையும் வ‌ழி நட‌த்திவ‌ருகிற‌து என்ப‌தை ந‌ன்றாக‌ப் புரிந்து கொள்ள‌ வேண்டும். பெருமாள் கோவிலுக்கு வார‌ம் ஒரு முறை போங்கள். துளசிப்பிரசாதம் சாப்பிடாமல் வராதீர்கள் சரியா!.

த‌ற்கால‌த்தில் வீட்டில் ம‌ணிபிளான்ட் வைத்தால் ப‌ண‌ம் வ‌ரும் என்று ந‌ம்புகிறார்க‌ள், காசு குடுத்து ம‌ணிபிளான்ட் செடி வாங்கி வீட்டில் வைத்து ப‌ண‌ம் கூரையைப்பிய்த்துக் கொண்டு கொட்டாதா என்று வான‌த்தைப் பார்த்துக் கொண்டு இருப்பார்க‌ள். ஆனால் துள‌சி மாட‌ம் வைத்து அதை வ‌ண‌ங்குவ‌து ப‌த்தாம் ப‌ச‌லித்த‌னம், மூட‌ந‌ம்பிக்கை என்று அதை ம‌திக்க‌ மாட்டார்க‌ள். இனி ரோஜாச்செடி வைக்க‌ ஆசைப்ப‌டும் முன் முத‌லில் தொட்டியில் ஒரு துள‌சிச் செடி வ‌ள‌ர்க்க‌ ஆசைப்ப‌டுங்க‌ள். உங்க‌ள் ந‌ல‌னுக்கும் ந‌ல்ல‌து சுற்றுச்சூழ‌ல் மாசு த‌டுக்க‌ப்ப‌டுவ‌தால் ச‌மூக‌த்திற்ற்கும் ந‌ல்ல‌து.

விரதங்களும் நன்மைகளும் - 1

மனிதன் என்பவன் மற்ற எல்லா ஜீவராசிகளையும் போல இயற்கைத்தாயின் கருப்பைக்குள் இருக்கும் சிறிய அணு தான். இயற்கையின் இறுக்கமான தாக்கத்திலிருந்து மனிதன் என்றும் விடுபட்டுவிட முடியாது. விஞ்ஞானத்தாலும் அதனை சாதிக்க முடியாது. நம் உடல் இந்த பூமி மற்றும் பூமியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் மற்ற கிரகங்களின் ஆதிக்கத்தையும் பொறுத்தே தன் இயக்கத்தை நடத்துகிறது.

கிரகங்களின் தாக்கம் இல்லையென்றால் நம் உடற்சுழற்சியே மாறுபட்டு விடும். அவற்றை நன்றாகப் புரிந்து கொண்டிருந்த நம் முன்னோர்கள் கிரகங்களின் சுழற்சிக்க்கேற்ப உடலில் ஏற்படும் மாறுபாட்டை உணர்ந்து கொண்டார்கள். கிரகங்களின் தாக்கத்திற்கு வளைந்து கொடுத்து வாழத்துவங்கினார்கள். அதன் ஒரு பகுதி தான் விரதங்கள்.

விரதங்களில் பல வகைகள் உண்டு. அவற்றில் முக்கியமானவை உண்ணாமல் இருக்கும் விரதம், பேசாமல் இருக்கும் மௌன விரதம், ஒரு நாள் முழுவதும் உப்பில்லாமல் சாப்ப்டும் விரதம் போன்றவைகள் ஆகும்.

முதலில் உண்ணா விரதம் பற்றி பார்ப்போம். ஒரு குறிப்பிட்ட நாளில் அந்த நாளின் தன்மைக்கேற்ப நீர்மமாகவோ, கூழாகவோ, அல்லது காலையில் மட்டும் உண்டு மற்ற நேரங்களில் நீர்மமாகப் பருகி வயிற்றுக்கு அதிகம் வேலை கொடுக்காமல் இருக்கும் விரதம்.

காரணம் நாம் சாப்பிடும் உணவு செரிமானம் ஆவதற்கு புவி ஈர்ப்பு விசை முக்கியக் காரணம். புவிஈர்ப்பு விசையினால் ஏற்படும் கீழ் நோக்கிய அழுத்தம் இல்லையென்றால் நம் உடற்கழிவுகள் வெளியேறவே செய்யாது. ஆக வயிற்றிலிருக்கும் உணவு செரிப்பதும், கழிவுகள் வெளியேறுவதும் புவி ஈர்ப்பு விசை சார்ந்தே இருக்கிறது.

வீட்டுப் பெரியவர்கள் முக்கியமாக விரதம் இருக்கும் நாள் ஏகாதசி. குறிப்பிட்ட இந்த நாளில் என்ன விஷேஷம் என்று தோன்றலாம். இந்த குறிப்பிட்ட நாளில் புவி ஈர்ப்பு விசை அதிகமான இருக்கும் நாளாக கருதப்படுகிறது. காரணம் சூரியனிலிருந்து சந்திரன் அதிக தூரம் விலகி வரும் நாட்களில் பூமியில் அதன் ஈர்ப்பு சக்தி அதிகரிப்பதாக விஞ்ஞானம் கூறுகிறது.

உதாரனமாக அமாவாசையிலிருந்து ஒவ்வொரு நாளும் 12 டிகிரி தூரம் சந்திரன் சூரியனிலிருந்து விலகுகிறது. அவ்வாறு தினம் தோறும் பிரிந்து அமாவாசையிலிருந்து 11 ஆம் நாளான ஏகாதசியன்று சூரியனிலிருந்து சந்திரன் 132 டிகிரியில் விலகியிர்ப்பதால் அந்நாளில் பூமியில் குறிப்பிட்ட அளவு புவியீர்ப்பு விசை அதிகரிக்கிறது என்கிறார்கள்.

ஆக புவியீர்ப்பு விசை அதிகமாக இருக்கும் பட்சத்தில் உடலில் ஜீரண மண்டலம் அதிக கீழ் நோக்கிய விசையால் ஈர்க்கப்படும். உண்ணும் உணவை செரிமானம் செய்யும் பொருட்டு அதிகமான விசையுடன் இயங்கும். அந்த நாளில் நாம் அதிகமாக உணவு உட்கொண்டால் ஈர்ப்பு விசையின் வேகத்திற்கு உணவு செரிக்காமல் அஜீரணக் கோளாறு மற்றும் வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படலாம். வாயுத்தொல்லைகள் பெருகலாம்.

என்றைக்கும் ஒரே மாதிரியான உணவு உட்கொண்டாலும் ஒரு சில நாட்களில் நம்மை அறியாமல் வயிற்றுக்கு உபாதைகள் நேர்வதை நில நேரங்களில் நாம் உணரமுடியும். வித்தியாசமாக எதுவும் சாப்பிடவில்லை, ஆனாலும் என்னவோ வயிறு சரியில்லை என்று உணவைத் தவிர்க்க நேரிடும். காரணம் இது போன்ற சில நாட்களை நாம் கவனத்தில் கொள்ளாமல் எல்லா நாட்களிலும் ஒரே மாதிரியாக உணவை உள்ளே தள்ளுவதால் நாளடைவில் உண்டாகும் வயிற்றுக் குறைபாடாக அது தெரியவருகிறது.

ஆகையால் நம் செரிமான மண்டலங்களுக்கு அவ்வப்போது ஓய்வு கொடுக்கும் விதமாகவே ஏகாதசி போன்ற நாட்களில் உண்ணா நோன்பாகவோ அல்லது நீர்மமாகவோ , கூழ்மாமாகவோ மட்டும் உணவருந்தி வயிற்றையும் செரிமான உறுப்பையும் பாதுகாக்கும் ஏற்பாட்டை நம்முன்னோர்கள் செய்து வந்திருக்கிறார்கள் எனலாம். இயந்திரங்களை அவ்வப்பொழுது கழுவி சர்வீஸ் செய்வது போலே வயிற்றுக்குள் உணவு போடாமல் கழுவி செய்யப்படும் சர்வீஸ் எனக்கொள்ளலாம்! உடலும் ஒரு இயந்திரமே! அதற்கும் முறையான சர்வீஸ் தேவை. அத்தகைய 'periodical service' தான் விரதங்கள்!

ஆனால் ஒரு விஷயம், எதைத் தின்றாலும் செரிமானம் ஆகிவிடும் அளவு உடல் உழைப்பைக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு ஏகதசியாவது, அமாவாசையாவது!

ஆடி மாதம் வைக்கப்படும் கூழ்

நம்முடைய முன்னோர்கள் உருவாக்கிய பழக்க வழக்கங்கள் அனைத்திற்கும் காரணங்கள் பல உண்டு..

அது போல், ஆடி மாதம் வைக்கப்படும் கூழிற்கும் காரணம் உண்டு.. தினத்தந்தி யின் ஆன்மீக இதழில் இருந்து…

சூரியன் தன் கதிர்வீச்சு திசையை ஆறு மாதத்திற்கு ஒரு முறை மாற்றுகிறது. அதன்படி ஆடி மாதத்தில் சூரியக் கதிர்கள் திசை மாறுகிறது. இந்தியாவை பொறுத்தவரை உஷ்ணம் நிறைந்த கோடைக் காலம் ஈரப்பதம் நிறைந்த குளிர் காலமாக மாறுகிறது.. இத்தருணத்தில் வைரஸ் போன்ற கிருமிகளால் ஏற்படும் நோய்கள் அதிக அளவில் பரவும் என்பது அறிவியல் சொல்லும் செய்தி..

அதன்படி ஆடி ஆடிமாதத்தில் சின்ன அம்மை, தட்டம்மை அதிக அளவில் பரவும். அப்படி வரக்கூடிய கிருமிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதற்கே கேழ்வரகு கூழ் உற்றும் வழக்கத்தை கொண்டு உள்ளனர்.
இந்த கூழ் உடலை குளிர்விக்க கூடிய உணவு மற்றும் அருமருந்தும். இரும்பு சத்தும் ,கால்சியம், நார்ச்சத்து ஆகியவை இதில் உள்ளது..

அம்மைகளில் இருந்து காக்கும் கடவுளாக நாம் நம்புவது மாரியம்மனை. இவரை வணங்கி கூழ் உற்றுவதின் மூலம் அம்மை உஷ்ணத்தில் இருந்து காத்துக்கொண்டுள்ளனர். மேலும், கூழ் பானையை சுற்றி மஞ்சளும் வேப்பிலையும் வைப்பார்கள்.. இவையும் கிருமி நாசியே.. நோய் பரவாமல் தடுக்கும்.

நம் முன்னோர்களின் பழக்கங்கள் ஏதும் கண்மூடித்தனமானது அல்ல. காரணங்களை அலசினால் விளக்கங்கள் ஆச்சரியமூட்டும்..

நன்றி தினதந்தி

ரூபாய் நோட்டுக்கள் செல்லாது குறித்த அறிவிப்புக்கு ஆர்.டி.ஐ மூலம் கேள்வி

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா, ரூபாய் நோட்டுக்கள் செல்லாது குறித்த அறிவிப்புக்கு ஆர்.டி.ஐ மூலம் கேள்விகளை கேட்டுள்ளார். அதன் விவரம்..

* ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் எந்த அடிப்படையில், எந்த சட்டத்தின் கீழ் அறிவித்துள்ளார் என்பதன் விவரம் தர வேண்டும்.

* ரூபாய் நோட்டுக்களானது ரிசர்வ் வங்கி கவர்னரால் கையொப்பமிட்டு நாட்டு மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு வழங்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் அறிவிப்பதற்கு எந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டது அதன் விவரம் தர வேண்டும்.

* ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை முடிவு எடுக்கப்பட்டு அந்த முடிவானது ரிசர்வ் வங்கி கவர்னர் அவர்களுக்கு பரிந்துரை செய்யும் அதிகாரம் மட்டுமே பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளது எனில் மேற்படி ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த பிரதமருக்கு எந்த அடிப்படையில் எந்த சட்டத்தின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்ற விவரம் தர வேண்டும்.

* ரூபாய் நோட்டுகள் மக்கள் பயன்பாட்டில் உள்ளதை பிரதமர் தடை செய்து உத்தரவிட்டதை ரிசர்வ் வங்கி கவர்னர் எந்த அடிப்படையில் அந்த உத்தரவினை ஏற்பளிப்பு செய்தார் என்ற விவரம் தர வேண்டும்.

* ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டது தொடர்பாக என்னென்ன கோப்புகளில் பிரதமர் அவர்கள் கையொப்பமிட்டு ரிசர்வ் வங்கி கவர்னருக்கு அனுப்பியுள்ளார் அந்த கோப்புகளின் நகல் தர வேண்டும்.

* ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்படுவதற்கு கவர்னர் ஒப்புதல் அளித்து கையொப்பமிட்ட உத்தரவின் நகல் தர வேண்டும்.

* ரூபாய் நோட்டுகள் மக்கள் பயன்பாட்டில் உள்ளதை தடை செய்யும் அதிகாரம் சட்டத்தில் யார், யாருக்கெல்லாம் வழங்கப்பட்டுள்ளது என்ற விவரம் தர வேண்டும்.

* இந்த அறிவிப்பானது பிரதமரால் நாட்டு மக்களுக்கு எத்தனை மணிக்கு எந்த தேதியில் தொலைக்காட்சி மூலம் தெரியப்படுத்தப்பட்டது என்ற விவரமும், தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மேற்படி ரூபாய் தொடர்பாக அறிவித்த அறிவிப்பின் சி.டி நகல் தர வேண்டும்.

* அறிவிப்பு வெளியிடப்பட்ட 4 மணி நேரத்தில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் செல்லாது என மக்களுக்கு ஏற்பட்ட கஷ்ட, நஷ்டங்களுக்கு எடுக்கப்பட்ட முன்எச்சரிக்கை நடவடிக்கைகள், ஏற்பாடுகள் என்னென்ன என்ற அதன் தொடர்பான ஆவண நகல் தர வேண்டும்.

* அறிவிப்பு வெளியிடப்பட்ட உடன் மக்கள் என்னென்ன சிரமங்கள் மேற்கொண்டர்கள் என்பதை பற்றிய உளவுத்துறை மற்றும் நுகர்வோர் அமைப்புகள், பத்திரிகைகள் பதிவு செய்த சிரமங்கள் பற்றிய விவரங்கள் குறிப்பாணைகள் ஆவணங்களின் நகல் தர வேண்டும்.

* ரூபாய் நோட்டுக்கள் மக்களிடமிருந்தும் பயன்படுத்த முடியாத நிலையிலும் பொருட்கள் வாங்க முடியாத நிலையிலும் சிரமப்பட்டுள்ளார்கள். எனில் அதனால் நுகர்வோருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டுமெனில் புகார் யார் மீது கொடுக்க வேண்டும் என்ற விவரம் தர வேண்டும்.

* அறிவிப்பினை பிரதமர் அறிவித்திருப்பது விளம்பரம் தேடும் யுக்தியாக மக்களை ஏமாற்றும் செயலில் தன்னிச்சையாக பிரதமர் செயல்பட்டுள்ளார் எனில் புகார் மனு யாரிடம் கொடுக்க வேண்டும் என்ற விவரம் மற்றும் அவர்களின் முகவரி தர வேண்டும்.

* அறிவிப்பினை கால அவகாசம் கொடுத்து அறிவிக்கப்பட்டு இருந்தால் 9.11.2016 அன்று இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை விட வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது. இது வங்கியில் கணக்கு வைத்துள்ள நுகர்வோருக்கு மிகப்பெரிய பாதிப்பையும் பொதுமக்களுக்கு மிகப் பெரிய இடையூறையும் செய்யும் நோக்கில் பிரதமர் செயல்பட்டுள்ளார் எனில் அவர் மீது நடவடிக்கை எடுக்க புகார் மனு யாரிடம் கொடுக்க வேண்டும் அதன் முகவரி தர வேண்டும்.

* ரூபாய் நோட்டுகள் செல்லுபடி ஆகாது என்று இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் பிரதமராக இருந்த முராஜிதேசாய் எந்த தேதியில் எந்த ஆண்டு அறிவித்தார் என்ற விவரம் தர வேண்டும்.

* முன்னாள் பிரதமர் முராஜிதேசாய் எந்தெந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என தடை செய்யப்பட்டது. அவ்வாறு அறிவிக்கப்பட்ட போது என்னென்ன நடைமுறைகள் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது என்ற விவரம் தர வேண்டும்.

* முன்னாள் பிரதமரின் அறிவிப்பின்போது ரிசர்வ் வங்கி கவர்னராக பணிபுரிந்த அதிகாரியின் பெயர் மற்றும் தடை செய்யப்பட்ட பணம் தொடர்பாக அதாவது பணம் செல்லாது என அறிவிக்கப்பட்ட நிலையில் என்னென்ன விதிமுறைகளை ரிசர்வ் வங்கி கவர்னர் பின்பற்றியுள்ளார் அதன் தொடர்பான ஆவணங்களை கோப்புகள் அனைத்தும் தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, November 8, 2016

கையில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவது எப்படி?


500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கையில் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் குறித்து தெரிந்து கொள்வோம்..

* நாடுமுழுவதும் இன்று வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளதால் தங்கள் கைகளில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை நாளை முதலே மக்கள் வங்கிகள் அல்லது அஞ்சல் நிலையங்களில் மூலம் மாற்ற முடியும்.

* 500, 1000 ரூபாய் நோட்டுகள் எவ்வளவு மதிப்பில் இருந்தாலும் வங்கிகள், அஞ்சல் நிலையங்களில் அவற்றைக் கொடுத்து அதே மதிப்புள்ள வேறு ரூபாய் நோட்டுகளைப் பெறலாம். ஆனால் 4,000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை மாற்ற முயன்றால், 4,000 ரூபாய் ரொக்கமாகவும், மீதமுள்ளவை வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்படும்.‌

* நோட்டை மாற்றும்போது புதிய 500 மற்றும் 2000 நோட்டுக்களாகவும் பெறலாம். 500, 1000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட்டும் செய்யலாம். பணத்தை மாற்றும்போதோ, டெபாசிட் செய்யும்போதோ அடையாள அட்டைகளில் ஒன்று அ‌‌வசிய‌ம். அடையாள அட்டை விவரங்களை வங்கி பதிவு செய்யும். இதற்காக வங்கிகளில் கூடுதல் கவுன்ட்டர்கள் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* 500, 1000 ரூபாய் நோட்டுக்களைத் திரும்பப் பெற கூடுதல் வேலை நேரம் செயல்படவும் வங்கிகள் ஒப்புக் கொண்டிருக்கின்றன.‌ 4,000 ரூபாய் என்பது போதாது என்றால், அதற்கு மேற்பட்ட தொகையை காசோலை, இணைய தள வங்கிச் சேவை, டெபிட் கார்டு ஆகிய வழிகளில் செலவிட‌லாம். வங்கிக் கணக்கு இல்லாதவர்களிடம் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் இருந்தால், புதிய வங்கிக் கணக்கு தொடங்கி மட்டுமே மாற்றிக் கொள்ள முடியும்.

* ரிசர்வ் வங்கிக் கிளைகள், தனியார், பொதுத் துறை மற்றும் கூட்டுறவு வங்கிகள், அஞ்சல் நிலையங்களில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். 4,000 ரூபாய் வரை மாற்ற, எந்த வங்கி அல்லது அஞ்சல் நிலையத்தையும் அணுகலாம். அதற்கு மேல் தொகையை மாற்ற, கணக்கு வைத்துள்ள வங்கியை மட்டுமே அணுக வேண்டும்.

* கணக்கு வைத்துள்ள வங்கியின் எந்தக் கிளையிலும் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். வங்கிக்கு நேரடியாக செல்ல இயலாதவர்கள்‌ பிரதிநிதியை அனுப்பி அத்தாட்சிக் கடிதம் தர வேண்டும். பணத்தை செலுத்துபவர் தனது அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.

* புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்மில் வழங்குவதற்கான தொழில்நுட்பம் வர சில நாட்கள் ஆகலாம். அதன் பிறகு 18-ம் தேதி வரை நாளொன்றுக்கு அதிகபட்சம் 2,000 ரூபாயும், 1‌9-ம் தேதி முதல் 4,000 ரூபாயும் எடுக்க அனுமதிக்கப்படும். அதன் பிறகு இந்த உச்ச வரம்பு 10,000அதிகரிக்கப்படும்.

*அதேபோல, வரும் 24-ம் தேதி வரை வங்கிகளில் பணமெடுக்கும் விண்ணப்பத்தில் 10,000 ரூபாய் வரையும், காசோலையில் 20,000ரூபாய் வரையும் மட்டுமே பணம் பெற முடியும். அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பு வரை வழக்கம்போல ஏடிஎம்களில் பணம் டெபாசிட் செய்யலாம்.

* ரொக்கம் தவிர்த்து, மொபைல் பேங்க்கிங், இன்டர்நெட் பேங்க்கிங், ஃபண்ட் டிரான்ஸ்ஃபர் ஆகிய மின்னணு பரிமாற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. டிசம்பர் 30-ம் தேதி வரை 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், விமா‌ன டிக்கெட் ஆகியவை 11-ம் தேதி வரை 500, 1000 ரூபாய் ஏற்கப்படும்.

கூடுதல் விவரங்களுக்கு ரிசர்வ் வங்கி இணைய தளத்தில் தகவல்கள் உள்ளன. சந்தேகங்கள் இருந்தால் ரிசர்வ் வங்கியின் மும்பை அலுவலக எண்களான 02‌ -22602201, 22602944 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்பது முதல் முறை அல்ல...!

ஃபேஸ்புக், ட்விட்டர் என சமுகவலைதளங்களின் ஆதிக்கம் ஊடுருவியுள்ள இந்த டிஜிட்டல் காலத்திலும் 1000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதை பிரதமர் மோடியின் அரசு ரகசியமாக வைத்திருந்து இன்று அறிவித்துள்ளது. 2017-ம் ஆண்டு புத்தாண்டு தொடக்கத்தில் மக்களிடம் பழைய, ரூ 500, ரூ 1,000 நோட்டுகள் புழக்கத்தில் இருக்காது. திடீரென இப்படி ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவிப்பது தற்போதைய தலைமுறைக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால், இதற்கு முன்பு இதே போல இரண்டு அதிர்ச்சி சம்பங்களை இந்தியா சந்தித்துள்ளது.
''ஊழல் மற்றும் கறுப்பு பணம், வறுமை, பயங்கரவாதம் ஆகியவை நம் நாட்டை பின்நோக்கி இழுப்பதை நான் உணர்ந்தேன்" .1000,500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்த போது, கூறிய உணர்வுப்பூர்வமான வார்த்தைகள் இவை. மோடியின் இந்த முயற்சியால், கருப்புப்பண முதலைகள் ஆட்டம் கண்டுள்ளன. ரூபாய் நோட்டுகள் செல்லாது என அரசு திடீரென அறிவிப்பது புதிதல்ல. இதற்கு முன் இந்தியாவில் ஆட்சி செய்த பிரிட்டிஷ் அரசும், அதற்குப் பின் மொரார்ஜி தேசாய் அரசும் இதை செய்து இருக்கின்றன.

1946 ஆம் ஆண்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் கணக்கில் வராத பணங்களை தடுக்கும் நோக்கில் ரூ1,000 மற்றும் ரூ 10,000 ரூபாய் நோட்டுகளை தடை செய்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1954-ல் மக்களில் வசதிகளுக்காக 5,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. ஆனால், மீண்டும் அரசுக்கு தலைவலியே மிஞ்சியது, கடத்தல்காரர்கள் லட்ச லட்சமான பணத்தைச் சுலபமாகக் கடத்க்ச் சென்றனர். வேறு வழியின்று 1978-ல் 5000 ரூபாய் நோட்டுகளுக்கும் தடை விதிக்கப்பட்டன. அதன்பிறகு தற்போது தான் ரூபாய் நோட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

தற்போது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பிண்ணனியில் மோடி அரசின், நம்பகத்தன்மை அடங்கியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. 1946 மற்றும் 1978-ல் இந்தியவின் வளர்ச்சியை தடுக்கும் மலையளவு கருப்பு பணம் இல்லை. ஆனால் 1990க்கு பிறகு கருப்புப்பணம் பதுக்கல் என்பது புதுப் பரிமாணத்துடன் வளர்ந்தது. ஆட்சிக்கு வந்தவுடன் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப்பணத்தை மீட்டு, ஒவ்வொரு இந்தியருக்கும் 15 லட்சம் வழங்குவோம் என்கிற வாக்குறுதியை 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மோடி முன்வைத்தார். மோடி அரசின் மிக முக்கியமான வாக்குறுதியாக கருதப்பட்டது இது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு இந்த வாக்குறுதியை மோடி மறந்துவிட்டார் என்று நாடு முழுவதிலும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் அதிரடி நடவடிக்கையால், தனது செல்வாக்கை மீட்டிருக்கிறார் மோடி.

தர்ப்பையின் மகிமை

தர்ப்பை புல்லுக்கு இன்னொரு பெயர் ‘குசா’ என்பதாகும். இராமபிரானின் இரண்டாவது மகனின் பெயர் குசா. அவருடைய பெயரைக் குறிக்கும் அளவில் இந்தப் புல்லின் பெயரை வைத்துள்ளார்கள்.

* தர்ப்பைப்புல் உஷ்ணத்தை அகற்றி உடலைக் குளுமை செய்கிறது.

* பாலும், சிறுநீரும் அதிகளவில் சுரக்கச் செய்கிறது.

* சிறுநீரக வலிக்குக் குணமளிக்கிறது.

* பாம்புக் கடி விஷத்தை அகற்றுகிறது.

* தர்ப்பை புல் பித்தம், வாதம், கபம் ஆகிய மூன்று தோஷங்களை சுத்தம் செய்கிறது.

* சிறநீரக கற்களைக் கரைக்கிறது. இரத்தத்தில் தேங்கும் யூரியா, கிரியாட்டினின் கழிவுப் பொருட்களை அகற்றகிறது.
* உடல் எடையைக் குறைக்கவும் பயன்படுகிறது. மொத்தத்தில் இது சிறுநீரக நோய் நிவாரணி என்று வேதங்கள் கூறுகின்றன.

உயிரைக் குடிக்கும் நோய்களில் கிட்னிஃபெயிலியர் தான் மோசமானது. ஆயுர்வேத, யுனானி மருத்துவர்கள் தர்ப்பை புல்லை பதப்படுத்தி மருந்தாகத் தருகின்றனர். அதனால் டயாலிஸிஸ் செய்யத் தேவையில்லை. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் தேவைப்படுவதில்லை.

50 வருடங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை இல்லாத காலக்கட்டத்தில் மக்கள் இறைவனை வணங்கிவிட்டு வைத்தியர் தரும் தர்ப்பைப்புல் மருந்தைத்தான் பயன்படுத்தியதாக வேதங்கள் கூறுகின்றன.

இந்து சமுதாயத்தில் நன்றியைச் செலுத்தும் பழக்கம் அதிகளவில் இருப்பதால் தனக்கு வாழ்வளித்த தர்ப்பைப்புல்லை வணங்கும் பழக்கம் உள்ளது.

யுனானி மருத்துவத்தில் தர்ப்பைப்புல் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை முறையாகப் பதப்படுத்தி கிட்னி ஃபெயிலியர், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாகத் தரப்படுகிறது.

தர்ப்பையின் மகிமை, இந்துக்களின் நம்பிக்கை:
-----------------------------------------------------------
தர்ப்பையை தேவ காரியங்களுக்கு கிழக்கு நுனியாகவும், பித்ரு காரியங்களுக்கு தெற்கு நுனியாகவும் பயன்படுத்துவார்க. தர்ப்பை உஷ்ண வீரியமும், அதிவேகமும் கொண்டது.

மேலும் பஞ்ச லோகங்களில் தாமிரத்தில் உள்ள மின்சார சக்தி தர்ப்பையிலும் உண்டு. எனவேதான் கோவில் கும்பாபிஷேகங்களி தங்க, வெள்ளி கம்பிகளின் இடத்தில் அருளைக் கடத்த தர்ப்பையைப் பயன்படுத்துவார்கள்

தர்ப்பையின் சாம்பலால் தான் கோவிலில் உள்ள விக்ரங்களையும், பாத்திரங்களையும் துலக்குவார்கள். எல்லா விதமான ஆசனங்களையும் விட தர்ப்பாசனம் சிறந்தது என்பார்கள். பிரேத காரியங்களில் ஒரு தர்ப்பையாலும், கப காரியங்களில் இரண்டு தர்ப்பைகளாலும், பித்ரு காரியங்களில் மூன்று தர்ப்பைகளாலும் தேவகாரியங்களில் ஐந்து தர்ப்பைகளாலும் சாந்தி, கர்மா போன்றவற்றில் ஆறு தர்ப்பைகளாலும் மோதிரம் போல் முடிய வேண்டும்.

இறைவழிபாடு, ஜபம், ஹோமம், தானம், பித்ரு தர்ப்பணம் முதலியவற்றில் கையில் தர்ப்பை மோதிரம் போட்டுக் கொள்ளாமல் செய்வது உரிய பலனைத் தராது என்பார்கள்.

கிரகண காலங்களிலும், அமாவாசையிலும் தர்ப்பைக்கு வீரியம் அதிகம். எனவேதான் கிரகண காலங்களில் உணவுப் பண்டங்களில் நுண்ணிய கிருமிகளால் கெடமாமலிக்க தூய்மையான தர்ப்பையைப் பரப்புகிறார்கள். தர்ப்பை மோதிரத்தை அணிந்துதான் பிராணாயாமம் செய்ய வேண்டும் என்பதும் வழக்கமாக உள்ளது.

சூரிய சக்தியில் இயங்கும் எக்கோ ஃப்ரி ரிக்ஷா

திருப்பூர்: திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சூரிய சக்தியில் இயங்கும் எக்கோ ஃப்ரி ரிக்ஷா ஒன்றினை தயாரித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்.

சாதனைக்கு சொந்தக்காரரின் பெயர் சிவராஜ். எம்.பி.ஏ படித்துள்ள இவருக்கு ஆட்டோமொபைல் துறையில் ஆர்வம் அதிகம். 2012ல் இவர் கண்டுபிடித்துள்ள, பெட்ரோல் தேவைப்படாத சூரிய சக்தியால் இயங்கும் 'எக்கோ ஃப்ரி கேப் தான் திருப்பூரின் ஹைலைட்.

பார்க்க மூன்று சக்கர ரிக்க்ஷாபோல இருந்தாலும் கிட்டத்தட்ட காரின் ரிச் லுக்கோடு இருக்கிறது இந்த ரிக்ஷா.


இந்தியா புக் ஆப் ரெகாட்ஸ்
புவி வெப்பமயமாதல் என்கிற அசுரப் பிடியில் சிக்கி இருக்கும் பூமிக்கு இவர் கண்டுபிடித்து இருக்கும் வாகனம் உண்மையில் ஒரு வரப்பிரசாதம். 'இந்தியா புக்ஸ் ஆஃப் ரெக்கார்ட்ஸ் இவருடைய கண்டுபிடிப்பை அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் அங்கீகரித்து இருப்பது இன்னும் ஒரு சிறப்பு.

எளிதான எகோ ஃப்ரி கேப்
'எகோ ஃப்ரீ கேப் பார்க்க ரிக்ஷாவின் தோற்றத்தில் இருக்கும். இதில் மூன்று பேர் வரை பயணிக்கலாம் என்கிறார் சிவராஜ்.

சூரிய சக்தி, பேட்டரி, மனித சக்தி மூலம் இது இயங்குகிறது. மனித சக்தி என்றதும் கடின உழைப்பாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம். சைக்கிளைப் பெடல் செய்வதுபோல் எளிதாகத்தான் இருக்கும். சூரிய ஒளியில் மூன்று மணி நேரம் சார்ஜ் செய்தால், சுமார் 150 கி.மீ. தூரம் வரை இதில் பயணிக்கலாம். மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும்.

இந்த வண்டியை வடிவமைத்ததும் இதை முதல்முதலில் தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலாவின் பேத்தியும் உதயநிதி ஸ்டாலினும்தான் டெஸ்ட் டிரைவ் செய்தார்கள்.

மூன்று வருட உழைப்பு
இந்தக் கண்டுபிடிப்பைச் செய்து முடிக்க எனக்கு மூன்று வருடம் உழைப்பு தேவைப்பட்டது. பலமுறை வடிவமைத்தும் திருப்தி ஏற்படவில்லை. ஏதாவது ஒரு சிக்கல் இருந்தது. ஆனாலும், விடாமுயற்சியுடன், நான்கைந்து முறை வடிவமைத்த பின்புதான் திட்டம் வெற்றி பெற்றது என்பதால், லட்சக்கணக்கில் பணம் செலவானது. ஆனால், இப்போது சரியான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துவிட்டேன் என்பதால், எளிதில் வடிவமைத்துவிடுவேன்.

விலை அதிகமில்லை
இது மார்க்கெட்டுக்கு வரும்பட்சத்தில் விலை தோராயமாக ஒரு லட்சம் இருக்கும். ஆனால், பெட்ரோல் செலவு, பராமரிப்புச் செலவு எதுவும் கிடையாது. தினமும் துடைத்து, சுத்தமாகவைத்து இருந்தாலே போதுமானது.

உழைப்புக்குப் பலன்
என்னுடைய மூன்று வருட உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்து இருக்கிறது. எங்கள் தயாரிப்பை விளம்பரப்படுத்த சென்னை, கோவை போன்ற நகரங்களில் சில வண்டிகளை மட்டும் மக்கள் சேவைக்காக டிரைவர்களை நியமித்து இயக்க இருக்கிறோம். இதற்காக வட்டாரப் போக்குவரத்துத் துறையினரிடம் பேசிவருகிறேன்.

வெளிநாடுகளில் வரவேற்பு
இந்தக் கண்டுபிடிப்பை இணையத்திலும் வெளியிட்டு இருந்தேன். அதைப் பார்த்துவிட்டு, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து நிறையப் பேர் தொடர்புகொண்டார்கள்.

அரசு அங்கீகாரம் கிடைக்குமா?
பெட்ரோல் விலை உயர்வு என்பதைத் தாண்டி எரிபொருள் பயன்பாட்டால் பூமி வெப்பமயமாதலைக் குறைப்பதில் இந்த வாகனம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று பாராட்டினார்கள். விரைவில் அரசின் அங்கீகாரம் பெற்று இந்த வாகனத்தை விற்பனைக்கு விட இருக்கிறேன்'' என்கிறார் உற்சாகத்துடன்.
http://tamil.oneindia.in/…/tamilnadu-tirupur-youngster-s-in…

பவர்கட் பிரச்னையா...சோலாருக்கு மாறுங்க !

'பவர் கட் பிரச்னை, விரைவில் தீர்ந்துவிடும்' என்கிற நம் நம்பிக்கைதான், தீர்ந்துகொண்டே வருகிறது. ஒரு நாளைக்கு 3 மணி நேரம் என்று ஆரம்பித்தது... இன்று 12 மணி நேரம்... 16 மணி நேரம்... 18 மணி நேரம் என அதிகரித்துக் கொண்டே போகிறது. 'இனி, அரசாங்கத்தை நம்பி பலனில்லை' என்று உணர்ந்த மக்கள், 'இன்வர்ட்டர்'களை வாங்கினார்கள். ஆனால், அந்த இன்வர்ட்டரில் சேமிக்கும் அளவுக்கான மின்சார சப்ளைகூட இல்லாத நிலையில், அதுவும் பல வீடுகளில் பயனற்றுக் கிடக்கிறது.

மாற்று வழியாக, சூரிய ஒளி மூலம் அவரவர் வீடுகளுக்கான மின்சாரத்தை அவரவர்களே தயாரித்துக் கொள்ளும் சோலார் முறையை அரசாங்கம் பரிந்துரைத்து, மானியமும் வழங்குவதாக அறிவித்திருப்பது உருப்படியான யோசனை. இதையடுத்து, அங்கொன்று... இங்கொன்று என்று சில வீட்டு மாடிகளில் மின்னுகின்றன சோலார் தகடுகள். 'பவர் இருந்தாலும் இல்லைனாலும் எங்க வீட்டுல பிரச்னை இல்லைங்க...’ என்று அதை உபயோகிப்பவர்கள் சர்டிஃபிகேட் தருகிறார்கள். மக்கள் மத்தியில் சோலார் பிளான்ட் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறை பற்றிய விழிப்பு உணர்வு பெருக ஆரம்பித்திருக்கும் நிலையில், அதுகுறித்த விவரங்களைப் பெற, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை அலுவலகத்துக்குப் படையெடுத்தோம். அங்கே நம்மை எதிர்கொண்ட துணைப் பொதுமேலாளர் (சூரிய சக்தி அறிக்கை பிரிவு) சையத் அகமத், நமக்கு விளக்கங்களைத் தந்தார்.

''மின்பற்றாக்குறை பற்றிய புலம்பல்கள், புகார்களைவிட... மாற்று ஏற்பாடுகளுக்கு மக்கள் தயாராக வேண்டிய சூழல் இது! பூகோள அமைப்பின் சாதகத்தால், தமிழ்நாட்டில் சூரிய சக்தி அதிகளவில் கிடைக்கிறது. அதைக்கொண்டு மின்சாரம் பெறுவது நல்ல யோசனை. மக்களிடம் அந்த முயற்சியை முன்எடுப்பதற்கான தயக்கம் இருப்பதற்குக் காரணம்... அதற்கு தேவைப் படும் அதிகப்படியான ஆரம்ப கட்ட முதலீடுதான். அதனால்தான் மத்திய அரசாங்கம் அதற்கு அதிகபட்சம் 40 சதவிகிதம் வரை மானியம் வழங்க முடிவெடுத்துள்ளது.

ஒரு நாளைக்கு 4 டியூப் லைட், ஒரு மின் விசிறி, ஒரு டி.வி, ஒரு ஏ.சி, ஒரு கம்ப்யூட்டர், சிறிது நேரம் மின் மோட்டார் என மின் சாதனங்களை சுமார் 12 மணி நேரம் பயன்படுத்த, 1 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும். இதை சூரியஒளி மூலம் பெறுவதற்கு சோலார் தகடுகள் மற்றும் பேட்டரி என அமைப்பதற்கு சுமார் இரண்டு லட்ச ரூபாய் செலவு பிடிக்கும். மானியமாக 81 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். மீதமுள்ள 1.19 லட்சத்தை நீங்களே செலவு செய்ய வேண்டும்.

பேட்டரி இல்லாமல் நேரடியாக மின்சாரம் பெற்று உடனுக்குடன் பயன்படுத்தும் வகையிலான சாதனத்தை அமைப்பதற்கு 25 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும். லட்சங்களில்தான் அமைக்க வேண்டும் என்பதும் இல்லை. ஒரு ஃபேன், ஒரு லைட் என்று மின்சாரத் தேவையை சுருக்கிக் கொண்டால்... குறைந்தபட்சம் 20 ஆயிரத்தில் இருந்து சோலார் தகடுகள் அமைக்கலாம். கம்பெனிகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அதிகபட்சமாக 100 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும். இதற்கான சோலார் தகடுகள் அமைக்க 1.8 கோடி செலவாகும். மானியத் தொகையாக அதிகபட்சம் 72 லட்ச ரூபாய் கிடைக்கும்.

தற்போது... வீடுகளுக்கு சோலார் மின்இணைப்பு பொருத்தியிருக்கும் 189 பேர், எங்களுக்கு விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர். இவர்களில் சிலருக்கு மானியம் வழங்கவும் ஆரம்பித்துவிட்டோம். எனவே, நீங்களும் விரையுங்கள்...'' என்ற சையத், மானியம் பெற விண்ணப்பிக்கும் முறையையும் விளக்கினார்.

''சோலார் பிளான்ட்டை வீடுகளில் ஏற்படுத்தித் தர, இதுவரை 90-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளோம். இந்நிறுவனங்களை மக்கள் அணுகலாம். அவர்கள் மக்களின் விண்ணப்பங்களை எங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். மானியத் தொகையைக் கழித்துக் கொண்டு மீதித் தொகையை மட்டும் இவர்களிடம் செலுத்தினால் போதும். மானியத்தொகையை அவர்களிடம் நாங்களே செலுத்திவிடுவோம். மானிய அறிவிப்புக்கு முன்னதாக தாங்களாகவே சோலார் பிளான்ட்டை வீட்டில் நிறுவியிருப்பவர்கள், எங்களால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் அதை செயல்படுத்தியிருந்தால் அவர்களுக்கும் மானியம் உண்டு. உரிய முறையில் விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு மானியம் அனுப்பப்படும். அங்கிருந்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மானிய தொகையை பெற்றுக் கொள்ளலாம். இதில் முக்கியமான விஷயம், வருடத்தில் அக்டோபர் மாதம் மட்டுமே மானியம் பெற விண்ணப்பிக்க முடியும். அதுவும் ஆன்லைன் மூலமாக மட்டுமே!'' என்று தகவல்கள் தந்து முடித்தார் சையத் அகமத்.

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்று சென்னையிலிருக்கும் 'மாடர்ன் அல்ட்ரா சோலார் எனர்ஜி இந்தியா பிரைவேட் லிமிடட்'. இதன் இயக்குநர் வித்தியாம்பிகாவிடம் பேசியபோது, ''சென்னையில் மட்டும் இதுவரை 40 வீடுகளுக்கும் மேல் நாங்கள் சோலார் தகடுகள் பொருத்திஉள்ளோம். இனிவரும் நாட்களில் பெரும்பாலான வீடுகளிலும் நிச்சயம் இந்த சோலார் தகடுகள் மின்னும்!

வீடுகளில்... ஒரு எல்.ஈ.டி லைட், ஒரு ஃபேன், மொபைல் சார்ஜர் ஆகியவற்றை தினமும் ஆறு மணி நேரம் பயன்படுத்துவதற்கு, குறைந்தது 20 ஆயிரம் ரூபாய் செலவில் சோலார் தகடுகள் பொருத்த வேண்டும். ஒருமுறை செலவு செய்தால் போதும், குறைந்தது 20 ஆண்டுகளுக்கும் மேல் பயன்பெற முடியும். மழைக்காலங்களில் சோலார் தகடுகள் இயங்குமா என்ற தயக்கம் வேண்டாம். காரணம், சூரிய ஒளியில் இருக்கும் போட்டான் கதிர்களை கிரகித்துதான் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. எனவே, பகலில் மேகமூட்டமோ... மழையோ இருந்தாலும், சோலார் தகடுகள் போட்டானை கிரகித்து மின்சாரத்தை உற்பத்தி செய்துவிடும்'' என்று சொன்னார்.

எல்லாம் சரி... சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்துபவர்களின் ரியாக்ஷன் எப்படி?

அதைப் பற்றி பேசுகிறார் சென்னை, கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ், ''அரசாங்கம் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே என் வீட்டில் அமைத்தவன் நான். அப்படித்தான் சோலார் தகடுகளையும் எட்டு மாதங்களுக்கு முன்பே அமைத்துவிட்டேன். எங்கள் வீட்டுக்கான ஒரு நாளைய மின்சாரத் தேவை... சுமார் ஒரு கிலோ வாட். அதற்காக பத்து சோலார் தகடுகளைப் பொருத்தியுள்ளேன். கிடைக்கும் மின்சாரத்தை 10 இன்வெர்ட்டர் பேட்டரிகளில் சேமித்துப் பயன்படுத்துகிறேன். இதனால், பகல் மட்டுமின்றி, இரவிலும் சூரிய மின்சாரம் கிடைக்கிறது. இந்த எட்டு மாதங்களாக ஒரு நொடிகூட எங்கள் வீட்டில் பவர் கட் இல்லை. சூரிய சக்தி மின்சாரத்தை பயன்படுத்துவதால், கரன்ட் பில் கட்டணம் வெகுவாகவே குறைந்து விட்டது. இன்னும் கொஞ்ச நாட்கள் போனால்... மின் கட்டணம் செலுத்தவே தேவையிருக்காது.

இதற்காக கிட்டத்தட்ட இரண்டரை லட்ச ரூபாய் செலவு செய்திருக்கிறேன். இதற்கு 20 வருடங்கள் வரை ஆயுள் உள்ளது. மாதா மாதம் கட்டும் கரன்ட் கட்டணத்தை இருபது ஆண்டுகளுக்கு கணக்கிட்டுப் பார்த்தால்... (பார்க்க பெட்டிச் செய்தி) சூரிய சக்தி மின்சாரத்துக்கு செய்யும் செலவு குறைவுதான். ஆறு வருடங்களுக்கு ஒரு முறை பேட்டரிகளை மாற்றினால் போதும். இப்போது அரசாங்கத்தின் மானியத்தைப் பெற விண்ணப்பித்திருக்கிறேன்'' என்று குஷியோடு சொன்ன சுரேஷ்,

''இப்போது வீட்டுக்கு வீடு டிஷ் ஆன்டனா இருப்பதுபோல... இனி வரும் காலங்களில் சோலார் தகடுகளும் இருக்கும்!'' என்று தன் எதிர்பார்ப்பையும் சொன்னார்!

நல்ல திட்டம் நோக்கி நாடே நகரட்டும்!

சோலார் தரும் லாபம்!

மின் சாதனங்களின் ஒரு மணிநேர தேவைக்கான மின்சாரம்... டியூப் லைட்: 40-60 வாட்ஸ், சீலிங் ஃபேன்: 60-80 வாட்ஸ், டேபிள் ஃபேன்: 80-100 வாட்ஸ், டி.வி: 150-250 வாட்ஸ், எல்.சி.டி. டி.வி: 150-250 வாட்ஸ், டி.வி.டி: 40-60 வாட்ஸ், கம்ப்யூட்டர் சி.பி.யூ: 150-200 வாட்ஸ், மானிட்டர்: 100-150 வாட்ஸ், செல்போன் சார்ஜர்: 5 வாட்ஸ்.

மேற்கூறிய மின்சாதனங்களின் அதிகபட்ச மின்தேவையை வைத்து ஒரு மணி நேரத்துக்குக் கணக்கிட்டால் மொத்தம் 1,155 வாட்ஸ் ஆகிறது. இதற்காக நாம் செலுத்தும் மின்கட்டணம் 1 ரூபாய் 15 பைசா (யூனிட்டுக்கு குறைந்தபட்ச கட்டணம் 1 ரூபாய்). இதையே 12 மணி நேரத்துக்குக் கணக்கிட்டால்... சுமார் 14 யூனிட்கள் வரும். இரண்டு மாதங்களுக்கு (60 நாட்கள் கணக்கிட்டால்...) 840 யூனிட்கள் வரும். இதற்கான கட்டணம்... 3,745 ரூபாய் 25 பைசா (1 முதல் 200 வரையிலான யூனிட்களுக்கு 3 ரூபாய்; 201 முதல் 500 வரையிலான யூனிட்களுக்கு 4 ரூபாய்: 501 முதல் 5 ரூபாய் 75 பைசா என கணக்கிடப்படுகிறது).

இருபது ஆண்டுகளுக்கு கணக்கிடும்போது... 4 லட்சத்து 49 ஆயிரத்து, 430 ரூபாய். ஆனால், முதல் கட்டமாக 1 லட்சத்து 19 ஆயிரம் ரூபாயை செலவிட்டு சோலாருக்கு மாறிவிட்டால்... 'அடேங்கப்பா... நான் கரன்ட் பில்லே கட்டுறது கிடையாது' என்று தெம்பாக காலரை தூக்கிவிட்டுக் கொள்ளலாம்... மின்வெட்டு என்கிற பிரச்னையும் இருக்காது.

சூரிய மின்சாரம்... அசத்தும் குஜராத்!

ஆசியாவிலேயே மிக அதிகமான மின்சாரத்தை சூரிய ஒளி சக்தியின் மூலம் தயாரிக்க சோலார் பார்க் ஒன்றை 3,000 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கியுள்ளது குஜராத் அரசாங்கம். ஸ்வாத் பாலைவனத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சோலார் பார்க்கிலிருந்து 214 மெகா வாட் மின்சாரம் பெற முடியும். சீனாவில் உள்ள சோலார் பார்க்கில் 200 மெகா வாட் அளவே மின் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது, குறிப்பிடப்பட வேண்டிய ஒப்பீட்டுத் தகவல்.

தமிழகத்திலும் சோலார் பார்க் அமைத்தால்?!

சூரிய சக்தி மின்சாரம் தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு, www.teda.in என்ற வலைதளத்தை அணுகலாம்.

தொடர்புக்கு: தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை, ஈ.வி.கே. சம்பத் மாளிகை, ஐந்தாவது மாடி, 68, காலேஜ் ரோடு, சென்னை 6, தொலைபேசி: 044-28224830.

http://news.vikatan.com/article.php?module=news&aid=10743

நான் படித்ததில் உங்கள் பார்வைக்கு

திருவண்ணாமலையில் எட்டுக்கால் எந்திரன்!



இது ரோபோ யுகம். ரோபோக்களை அடிப்படையாகக் கொண்டு நாவல்கள் முதல் சினிமாக்கள் வரை உருவாக்கப்பட்டு சூப்பர்ஹிட் ஆகின்றன. மேலைநாடுகளில் தனிப்பட்ட பயன்பாடு தொடங்கி அறிவியல் ஆராய்ச்சிக்கு உதவும் வகையில் என்று பலதரப்பட்ட ரோபோக்கள் உருவாக்கப்படுகின்றன. ரோபோ உருவாக்கத்தில் இந்தியா சற்றுப் பின்தங்கி இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் குறையைச் சரிசெய்யும் வகையில் இந்திய மாணவர்களும் விஞ்ஞானிகளும் முயற்சித்துவருகின்றனர். அந்த வரிசையில் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி மெக்கானிக்கல் பிரிவு மாணவர்கள் உருவாக்கியுள்ள ரோபோவையும் சேர்த்துக்கொள்ளலாம்.

பார்க்க எட்டுக்கால் சிலந்தியைப் போல இருக்கும் இந்த ரோபோவை பி.இ. இறுதி ஆண்டு மெக்கானிக்கல் மாணவர் பாலாஜி வடிவமைத்து உள்ளார். தயாளன், ஆனந்த் மற்றும் ஆனந்த குமார் என்ற மாணவர்கள் குழு பாலாஜிக்கு உதவி இருக்கிறது. ரொம்பவே உற்சாகத்தோடு தங்கள் ரோபோ குறித்து பேசத் தொடங்கினார்கள் பாலாஜியும் தயாளனும்.

'' இப்போதுள்ள பெரும்பாலான ரோபோக்கள் சக்கரம் மூலமே இயங்கக் கூடியதாக உருவாக்கப்படுகின்றன. ஆனால், இந்த ரோபோவுக்கு எட்டு இரும்புக் கால்களை பொருத்தி அதன் மூலம் நகரும் வகையில் வடிவமைத்து உள்ளோம்.

இதுவரை கால்களுடன் உருவாக்கப்பட்டுள்ள சில ரோபோக்கள் மிகவும் பொறுமையாக நகரக்கூடியவை. அதேபோல், பல மோட்டார்கள் மற்றும் பல மின்சாரக் கருவிகளைக் கொண்டுதான் அவை இயங்குகின்றன. அதனால், பழுதடையும் வாய்ப்புகள் நிறையவே உண்டு. நாங்கள் தயாரித்துள்ள ரோபோவில் இரண்டு ஸ்டெப்பர் மோட்டார்கள் மட்டுமே பொருத்தியுள்ளோம். இதனால் பழுதடையும் வாய்ப்புகள் மிக மிகக் குறைவு.

இந்த ரோபோவை உளவு பார்க்கப் பயன்படுத்தலாம். நிலத்தின் அடிப்பரப்பிலும், சுரங்கத்திலும், கடலுக்கு அடியிலும், அபாயங்கள் உள்ள இடங்களிலும் அனுப்பி ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தலாம். இதில் பொருத்தப்படும் மோட்டாரின் தன்மைக்கு ஏற்ப ரோபோ பளு தூக்கும்.

கரடுமுரடான மலைப் பகுதியில் கூட சாய்ந்துவிடாமல் நடக்கக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்த ரோபோவை இன்னும் மேம்படுத்தி விண்வெளி ஆராய்ச்சிக்கும் பயன் படுத்தலாம்.

இந்த ரோபோவைத் தயாரித்துமுடிக்க 18 ஆயிரம் ரூபாய் செலவானது. இன்னும் இதை அட்வான்ஸ்டாக மாற்ற கூடுதலாகச் செலவழிக்க வேண்டி இருக்கும். இந்த ரோபோ உருவாக்கத்தில் எங்கள் ஹெச்.ஓ.டி. டாக்டர் ரவிச்சந்திரன் உறுதுணையாக இருந்து எங்களை ஊக்கப்படுத்தினார். இன்னும் கூடுதலான வசதிகளும் வாய்ப்புகளும் அமையும்போது இன்னும் சூப்பரோ சூப்பரான ரோபோவை உருவாக்கமுடியும்'' என்கிறார்கள் நம்பிக்கை யுடன்!

சூரிய ஒளி, காற்றில் இயங்கும் எளிய மின்விசிறி வடிவமைப்பு



தரங்கம்பாடி :
சூரிய ஒளி மற்றும் காற்றினால் இயங்கும் எளிய மின் விசிறியை தரங்கம்பாடி ஹைடெக் ஆராய்ச்சி மையத்தின் பயிற்சி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
நாகை மாவட்டம் தரங்கம்பாடி ஹைடெக் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர் ஜெயராஜ் கூறியதாவது: மாணவர்கள் புருசோத்தமன், மங்களராஜ், விவேக் ஆகியோர் பத்தாம் வகுப்பு மட்டுமே முடித்துள்ளனர். மேலும் வெல்டிங்கில் சிறந்த அனுபவம் பெற்றுள்ள இவர்கள் ஆராய்ச்சியாளர்களின் வழிகாட்டுதல்படி இந்த எளிய மின்விசிறியை வடிவமைத்துள்ளனர்.

சூரிய ஒளி இருக்கும் வரை எந்தவித செலவும் இல்லாமல் ஜீரோ பட்ஜெட்டில் மின் விசிறியை இயக்கலாம். சூரிய ஒளி மறைந்தாலும் இந்த மின் விசிறியின் இயக்கம் நின்று விடாது. சிறிய காற்றாலைகள் மூலம் இரவு நேரத்திலும் மின் விசிறி ஓடும் என்பது இதன் மிக முக்கிய சிறப்பம்சம். மிகச் சாதாரணமாக வீசும் காற்றின் வேகமே மின் விசிறியை சுழற்ற போதுமானது. எனவே பேட்டரியின் உதவியில்லாமலே இந்த மின் விசிறியை ஆண்டு முழுவதும் பயன்படுத்த முடியும்.

பகல் முழுவதும் சூரிய ஒளியில் இயங்கும். சூரிய ஒளி மங்கியவுடன் எல்டிஆர் எனப்படும் சிறப்பு அமைப்பின் மூலம் காற்றின் சுழற்சிக்கு மாறும் வகையில் வடிவமைத்துள்ளோம். கண்டுபிடிப்புகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காதததால் பல கண்டுபிடிப்புகள் இன்னும் கண்டுபிடிப்புகளாகவே உள்ளது என கூறினார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=60649

ரோபோ விவசாயி!

"ஆயிரம் பேருடைய அறிவும் திறமையும் சிட்டி ரோபோவுக்கு புரோகிராம் செய்யப்பட்டிருக்கு. இவனால எல்லா வேலையும் செய்ய முடியும்." - பாலாஜியின் அலைபேசியை அழைக்கும்போது எந்திரன் படத்தில் ரஜினி பேசிய வசனம் ரிங் டோனாக ஒலிக்கிறது. பேசத் தொடங்கினால் வார்த்தைக்கு வார்த்தை ரோபோ புராணம் பாடுகிறார். அடுத்த ஆண்டு மலேசியாவில் நடைபெற உள்ள, ‘உலக புத்தாக்கப் போட்டி’க்காக விவசாயம்செய்யும் ரோபோவை வடிவமைப்பதில் மூழ்கியிருக்கும் பாலாஜி ஓர் அசலான கிராமத்து இளைஞர். விழுப்புரம் அருகே உள்ள கண்டாச்சிபுரம்தான் இவரது சொந்த ஊர்.

"விவசாய நாடான இந்தியாவுல, 2020ஆம் ஆண்டுக்குள் விவசாயம்செய்யும் ரோபோவை அறிமுகப்படுத்த வேண்டும். அதுதான் என்னோட தற்போதைய லட்சியம்" என்னும் பாலாஜி, ரோபோ காதல் காரணமாக, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் எம்.டெக். ரோபோடிக்ஸ் பாடப் பிரிவை எடுத்துப் படித்து வருகிறார். ரோபோ படிப்பை எடுத்துப் படிப்பதற்குச் சிறு வயதிலேயே ரோபோ மீது ஏற்பட்ட ஆர்வம்தான் காரணம் என்கிறார் இவர்.

"பள்ளியில படிக்கும்போது பத்திரிகைகளில் வரும் ரோபோ படங்களைப் பார்த்து அட்டைகளில் விளையாட்டா ரோபோ செய்ய ஆரம்பிச்சேன். அதுவே எனக்கு ரோபோ மீது ஆசையைத் தூண்டியது. 9ஆம் வகுப்பு படிச்சபோது மினியேச்சர் புல்டோசர் செய்தேன். அதை மாவட்ட அளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் பார்வைக்கு வைத்தபோது, எனது படைப்பைப் பாராட்டி இளம் விஞ்ஞானி விருது கொடுத்தாங்க. இது எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது" என்று தன் ரோபோக் காதலுக்கான காரணம் கூறுகிறார் பாலாஜி.

பள்ளிப் பருவத்திலேயே ஆளில்லா விமானம் உள்பட குட்டி ரோபோக்களைச் செய்து அசத்தியுள்ளார் பாலாஜி. பிளஸ் 2 படிப்புக்குப் பிறகு, தச்சுத் தொழிலாளியான அவரது தந்தையால் இவரை உடனடியாக மேல்படிப்பு படிக்கு அனுப்ப முடியவில்லை. ஓராண்டுக்குப் பிறகே மயிலம் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் சேர முடிந்தது. படித்தது இயந்திரவியல் என்றாலும், இந்தக் கால கட்டத்திலும் உளவு பார்க்கும் ரோபோ, மினியேச்சர் ஜே.சி.பி., வெடிகுண்டு கண்டுபிடிக்கும் ரோபோ எனப் பலவற்றை செய்து இயக்கியும் காட்டியுள்ளார் பாலாஜி.

கல்லூரிப் படிப்பை முடித்ததும், நாவலர் நெடுஞ்செழியன் கல்லூரியில் ஆராய்ச்சியாளர் பணி கிடைத்தது. ரோபோ மீது பாலாஜிக்கு இருந்த பேராவலைக் கண்ட அக்கல்லூரி நிர்வாகம், பாலாஜியின் மேற்படிப்புக்கான அனைத்து செலவுகளையும் ஏற்று எஸ்.ஆர்.எம் கல்லூரியில் படிக்க அனுப்பியது.

ரோபோடிக்ஸ் தொழில்நுட்பங்கள் தெரியாமலேயே அசத்திக்கொண்டிருந்த பாலாஜி, இன்று ரோபோடிக்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் அவற்றைக் கச்சிதமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மிகச் சாதாரண குடும்பத்தில் பிறந்து தன் சுயமுயற்சியால் ரோபோடிக்ஸில் வெற்றிக் கொடிகட்டி வரும் பாலாஜிக்கு, வாய்ப்புகள் மட்டும் சரியாக அமைந்து விட்டால் சிறந்த ரோபோடிக்ஸ் விஞ்ஞானியாக வலம் வருவார் என்பதில் சந்தேகம் இல்லை.

வீணாகும் பணத்தின் (பொருட்களின்) மதிப்பு

நீங்கள் மாதம் 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பவரா? அப்படியானால் உங்களுக்கே தெரியாமல் 150 ரூபாய் குப்பைக்கு போகிறது. அது எப்படியென்று தெரியுமா? நீங்கள் உங்கள் பயன்பாட்டுக்காக வாங்கிய பெர்ப்யூம் அடங்கிய ஈயா கேன், கண்ணாடி பாட்டில்கள், தீர்ந்து போன ரீபிள்கள், டப்பாக்கள் என்று அவை தீர்ந்து போன பிறகு குப்பைக்கு போகிறதே…அது தான் உங்கள் பணம். மறைமுகமாக நீங்கள் உங்கள் பணத்தை குப்பையில் தூக்கி எறிகிறீர்கள்.

சரி…இப்படி காலியான பாட்டில், டப்பா,கண்ணாடி,பாலிதீன், காகிதங்கள் என்று அத்தனையையும் வீட்டின் மூலையில் ஒரு சாக்கில் சேமித்து வைத்து மாதம் ஒரு முறை பழைய பேப்பர் கடையில் போட்டால் எனன விலைக்கு போகும் என்று ஒரு பரிசோதனை செய்து பாருங்கள். அப்போது தான் தெரியும். இவ்வளவு நாளாக நீஙகள் எவ்வளவு பணத்தை இழந்திருக்கிறீர்கள் என்று!

பாலிதீன் பைகளை பயன்படுத்தக் கூடாது என்று அரசு தடைவிதித்தாலும், நம் அன்றாட வாழ்வில் பாலிதீன் பைகள் இணைந்து விட்டன. இந்த தொழிலை நம்பி பல லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன.

இப்போது இந்த பாலிதீன் பைகளை எல்லாம் ஒன்று சேர்த்து இயந்திரத்தில் போட்டு அரைத்து சிறுசிறு துகள்களாக ஆக்கி,பின்னர் வெப்பத்தில் உருக்கி ரோடு போட பயன்படுத்துகிறார் மதுரையை சேர்ந்த பேராசிரியர் ஒருவர்.

இப்போது…நாம் தூக்கி எறியும் இது போன்ற குப்பைகளின் மதிப்பு பற்றி பார்க்கலாம்.

தரமான பாலிதீன் பைகளில் இருந்து பிளாஸ்டிக் ஹோஸ்,பிளாஸ்டிக் டப்பாக்கள் தயாரிக்கிறார்கள். அதாவது சின்டெக்ஸ் தொட்டி போன்றவை தொடங்கி பைப்புகள் வரை தயாரிக்கிறார்கள். நாம் தூக்கி போடும் பாலிதீன் பைகளை இது போன்ற பொருட்கள் தயாரிக்க வாங்கிக் கொள்கிறார்கள். ஆக..பாலிதீன் பைகளை சேர்த்து வைத்தால் கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறார்கள்.

பிளாஸ்டிக்கில் ‘கடக்’ பிளாஸ்டிக் என்று ஒரு வகை. அதாவது கையால் உடைத்தால் உடைந்து போகும் ரகம். இது கிலோ ஒன்றுக்கு விலை 4 ரூபாய். இந்த பிளாஸ்டிக்கை இரண்டாம் தர பிளாஸ்டிக் என்கிறார்கள். இந்த வகை பிளாஸ்டிக்குகள் பெயிண்ட் பிரஷ் கைப்பிடி, குடம் தயாரிக்க போகிறது.
நீஙகள் டிவி.மிக்சி என்று பொருட்கள் வாங்கும் போது அட்டையில் சுற்றி பேக்கிங் செய்து வரும். இந்த வகை அட்டை பெட்டிகள் கிலோ 3 ரூபாய்க்கு போகிறது. இந்த அட்டைகள் மீண்டும் புதிய பேக்கிங் அட்டைகள் செய்ய பயன்படுகிறது.

சிகரெட் பெட்டிகள் கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் வரை விலை தருகிறார்கள். இந்த சிகரெட் பெட்டிகளை மறுசுழற்சி செய்து மீண்டும் அட்டைகள், பேப்பர் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள்.

பிளாஸ்டிக் வயர்களை துண்டுதுண்டாக கிடந்தால் அவற்றையும் குப்பையில் போடுவோம். ஆனால் அவற்றின் உள்ளே உள்ள காப்பர் கம்பியின் விலை கிலோ ரூ.80 க்கு வாங்கிக் கொள்கிறார்கள்.
தேங்காயை எடுத்து சட்னி அரைத்து விட்டு சிரட்டையை தூக்கி எறிந்து விடுவோம். இது போன்ற சிரட்டையின் மதிப்பு 1 டன் ரூ.2500க்கு விலை போகிறது. இந்த சிரட்டையை வைத்து செங்கல் சூளையில் விறகுக்கு பதிலாக செங்கலை சுட பயன்படுத்துகிறார்கள். இது தவிர கொசுவர்த்தி, தயாரிக்கவும் சிரட்டை பயன்படுகிறது.

பால் கவர்கள் கிலோ ரூ.10 முதல் 15 வரை கொடுத்து வாங்கி கொள்கிறார்கள்.
தகரம் கிலோ 4 ரூபாய்க்கும், பழைய இரும்பு கிலோ 12 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை கொடுத்து வாங்கிக் கொள்கிறார்கள்.

வீட்டில் தினமும் டீ தயாரித்து சாப்பிடுகிறீர்களா? வீணாகும் டீத்தூளை அப்படியே சேர்த்து வைத்திருங்கள். இவற்றை வைத்து உரம் தயாரிக்கிறார்கள். காபி தூளிலிருந்தும் தான் இப்படி உரம் தயாரிக்கிறார்கள். ஆக..வீணான இந்த டீ.காபி தூள்களில் விலை 10 கிலோவுக்கு 5 ரூபாய் தருகிறார்கள்.

பெட்பாட்டில் வாங்கி விட்டு தூக்கி போடாதீர்கள். வீணான பெட்பாட்டிலின் விலை கிலோ 8 ரூபாய்.

பழைய வெள்ளை பேப்பர் கிலோ ஒன்றுக்கு 6 முதல் 10 வரை கிடைக்கும்.
அரசு அலுவலகங்களிலிருந்து வரும் பேப்பர் கழிவுகள் மற்றும் பிரிண்டிங் பிரஸ் கழிவுகளிலிருந்து வெள்ளை பேப்பர் கழிவுகளை மறு சுழற்சி செய்து மீண்டும் பேப்பர்கள் தயாரிக்கிறார்கள்.

அலுமினியம் பாயில் பேப்பர்( உணவு பொருட்களை பார்சல் செய்ய பயன்படுவது) கிலோ 18 ரூபாய்க்கு வாங்குகிறார்கள். இதை மறுசுழற்சி செய்து அலுமினிய பேப்பராக மீண்டும் செய்கிறார்கள்.

தலைமுடி கிலோ 1 ரூபாய் முதல் 2 ரூபாய்க்கு எடுத்துக் கொள்கிறார்கள்.
நெர்லான் செருப்புகள் கிலோ 8 ரூபாய்க்கு விலை போகிறது.
வீணான டியூப்லைட் ஒன்றுக்கு 1 ரூபாய் விலை நிர்ணயித்து வாங்குகிறார்கள்.

ரப்பர் கழிவுகள்,டயர்களை மறுசுழற்சி செய்து ரப்பர் பொருளாக தயாரிக்கிறார்கள். எனவே வீணான டயர்கள், டியூப்களை வைத்திருங்கள். இவற்றை கிலோ 5 முதல் 10 வரை தருகிறார்கள்.

ஆக…இனி எதையும் வீட்டுக்கு வெளியே தூக்கி போடும் போது ஒரு முறை சிந்தியுங்கள். அது உங்கள் பணம். அப்படியே வைத்திருந்து மாதம் ஒரு முறை பழைய பேப்பர்காரரிடம் கொடுங்கள். அவர் உங்களுக்கு ரூபாய் நோட்டுக்களை திருப்பி தருவார். இந்த பழக்கத்தை பார்க்கும் உங்கள் குழந்தைகளும் எதையும் வீணாக்காமல் இருக்க கற்றுக் கொள்வார்கள்.

இத்துடன் ஒரு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை செய்தி.

நீங்கள் ஏன் குப்பைகளை வீணாக ரோட்டில் எறியக்கூடாது? பேட்டரி செல், பெயிண்ட் டப்பாக்கள்,பினாயில் பாட்டில், பேனாரீபிள் உள்பட சில கழிவுகளை அபாயகரமான கழிவுகள் பட்டியலில் சேர்த்திருக்கிறார்கள்.
காரணம், இவை பூமியில் தூக்கி எறியப்படும் போது, மக்காமல் அப்படியே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு இருக்கும் போது மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதாவது பால்பாயிண்ட் பேனாரீபிளில் பாலிவினைல் குளோரடு என்ற வேதிப்பொருள் இருக்கிறது. இந்த ரசாயனம் மண்ணை கடுமையாக பாதிக்கிறது. நிலத்தடி நீரை பூமிக்குள் செல்லவிடாமல் தடுக்கின்றன.

வீட்டில் ப்யூஸ் ஆன டியூப்லைட்டுகளை குப்பையில் போடும் போது அதை சிறுவர்கள் டமார் என்று கல்லை தூக்கி போட்டு உடைப்பார்கள். இந்த ட்யூப்லைட்டை உடைக்கும் போது வெளிப்படும் பாதரசம் பூமியில் 300 அடி தூரம் வரை போகுமாம்.இந்த பாதரசம் செடி,கொடிகள்,பயிர்கள் வளர பூமியில் இருக்கும் நைட்ரஜன் சத்தை இல்லாமல் ஆக்கி விடுமாம்.

மக்களை பற்றி எதுவும் அக்கறை இல்லாத சில மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிரிஞ்ச் மூலம் ஊசி போட்டு விட்டு அந்த சிரிஞ்சுகளை அப்படியே குப்பையில போடுகிறார்கள். சில மோசமான குணம் கொண்ட தொழில் நபர்கள் இந்த வகையான பிளாஸ்டிகள் சிரிஞ்சுகளை வெப்பத்தில் எரித்து தண்ணீர் குடங்கள் செய்வது தான் கொடுமை.

இவையெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் தற்போது பெய்த மழையில் நகரின் பல சாக்கடைகள் அடைத்துக் கொண்டதால் த்ான் தண்ணீர் முறையாக வெளியேற வழியில்லாமல் இந்த குப்பைகள் அடைத்துக் கொண்டதும் ஒரு காரணம்.

ஆக…இனியாவது குப்பைகளை வீண் என்று தூக்கி எறியும் முன் ஒரு நொடி சிந்திப்ப்போம். இதை உங்கள் வீட்டில் இருந்தே தொடங்குங்கள். நாளை உங்கள் குழந்தை எதையும் வீணாக்க துணியாது. காசின் மதிப்பை எதிர்கால சந்ததிக்கு கற்றுக் கொடுக்க இதுவும் ஒரு ஐடியா!

தடுப்பூசிகள் – கம்ப்ளீட் கைடு

தடுப்பு மருந்துகளால் மனித இனம் பெற்ற நன்மை சொல்லில் அடங்காதவை. தடுப்பூசிகள் போடாதவர்கள் தற்போது மிகமிகக் குறைவு என்றாலும், இத்தனை ஆண்டுகளாக, விழிப்புஉணர்வு ஏற்படுத்தியும் தடுப்பூசி குறித்த தவறான கருத்துகள் சமூகத்தில் உலவவே செய்கின்றன. ‘வந்த பின் அவதிப்படுவதைவிட வருமுன் காப்பதே மேல்’ என்ற அடிப்படையிலேயே இந்தத் தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. தடுப்பூசி பற்றிய பொதுவான சில நம்பிக்கைகளையும் உண்மையையும் பற்றிப் பார்ப்போம்.

நம்பிக்கை 1: ஆரோக்கியமான, சுகாதார சூழலே தொற்றுநோய்களைத் தடுத்துவிடும். இதனால், தடுப்பூசி போடுவது தேவையற்றது.

உண்மை 1: எவ்வளவு சுத்தமாக, சுகாதாரமாக இருக்கிறோமோ, அந்த அளவுக்கு தொற்றுநோய்கள் ஏற்படுதற்கான வாய்ப்பு குறைகிறது. ஆனால், முற்றிலுமாக வாய்ப்பு இல்லை என்று சொல்வதற்கு இல்லை. சில தொற்றுநோய்கள் மிக வேகமாக பரவிப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. ஏதாவது ஒரு சூழலில் தொற்றுநோய்க் கிருமி பரவி பாதிப்பை ஏற்படுத்தலாம். மேலும், தடுப்பூசி அளித்ததன் மூலமே, போலியோ, பெரியம்மை உள்ளிட்ட பல வியாதிகளை இல்லாமல் செய்திருக்கிறோம். தடுப்பூசி அளிக்கத் தவறினால், இந்த பாதிப்புகள் மீண்டும் ஏற்படலாம்.

நம்பிக்கை 2: தடுப்பூசிகள் மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். மேலும் உயிரிழப்பைக்கூட ஏற்படுத்தலாம். இதன் பக்கவிளைவுகளைப் பற்றி இன்னும்கூட முழுமையாக அறிந்திருக்கவில்லை.

உண்மை 2: இது முற்றிலும் தவறான கருத்து. தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை. பொதுவாக, தடுப்பூசி, மருந்துகள் பலதரப்பட்ட பரிசோதனைகளுக்குப் பின்னர்தான் பயன்பாட்டுக்கு வருகிறது. தடுப்பூசிகளால் பக்கவிளைவுகளே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், அவை மிகமிகச்சிறிய பாதிப்பு மற்றும் தற்காலிகமானது. மெல்லிய காய்ச்சல், வலி போன்றவை ஏற்படலாம். அதுவும் ஒரு சில நாட்களில் சரியாகிவிடும். தடுப்பூசி அளிக்காததால், நோய் ஏற்பட்டு, அதனால் வரக்கூடிய விளைவுகளுடன் ஒப்பிடுகையில், இது ஒன்றும் பெரியதே இல்லை.

உதாரணத்துக்கு, போலியோவை எடுத்துக்கொள்வோம். போலியோ பாதிப்பு வந்தால் கால்கள் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்படும். சில நோய்கள் உயிரிழப்பைக்கூட ஏற்படுத்தும். அதற்கு தடுப்பூசி, மருந்து போட்டுக்கொள்வதன் மூலம் நோய் பாதிப்பில் இருந்து தப்ப முடியும்.

நம்பிக்கை 3: நம் நாட்டில்தான் போலியோவை ஒழித்தாகிவிட்டதே. இனிமேல் எதற்கு போலியோ சொட்டு மருந்து போட வேண்டும்? ஒழிக்கப்பட்ட நோய்களுக்கான தடுப்பூசிகளைப் போடுவது தேவையற்றது.

உண்மை 3: அம்மை, போலியோ வருவதை முற்றிலும் தடுத்தி நிறுத்திவிட்டாலும் கிருமிகள் இன்னும் இருக்கலாம். இவை, உலகில் ஏதாவது ஒரு பகுதியில் இருக்கலாம். சர்வசாதாரணமாக எல்லைகளைக் கடந்து நாட்டுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு அதிகம். ஒருவர், உலகில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குப் பயணிப்பதை தடுக்க முடியாது. அவர், முறையான தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ளாதவர் என்றால், அவர் மூலம் கிருமி பரவும். இதைத் தவிர்க்க, ஒவ்வொருவரும் முறையான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது அவசியம்.

நம்பிக்கை 4: குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். எனவே, கூட்டு தடுப்பூசி அல்லது தடுப்பு மருந்துகளை போடுவதால் பாதிப்பு ஏற்படலாம்.

உண்மை 4: குழந்தையின் உடல், ஒவ்வொருநாளும் ஆயிரக்கணக்கான பாக்டீரியா, வைரஸ் கிருமிகளை எதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறது. இதனால், தடுப்பூசி போடுவதால் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடும் என்று சொல்வதில் உண்மைஇல்லை. முத்தடுப்பு, பென்டாவேலன்ட் போன்ற ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களை எதிர்க்கும் தடுப்பூசியைப் போடுவதால் பாதிப்பு வராது. டெட்டனஸ், கக்குவான் இருமல், போலியோ போன்ற பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு, உடல் உறுப்புக்கள் செயல்திறன் பாதிப்பு போன்றவை ஏற்படுவதைத் தவிர்க்க, மருத்துவர் பரிந்துரை அடிப்படையில், இந்த தடுப்பூசிகளைக் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும்.

நம்பிக்கை 5: காய்ச்சல், சளி போன்ற உடல்நலக் குறைபாடுகள் இருக்கும்போது குழந்தைக்கு தடுப்பூசி அளிக்கக் கூடாது.

உண்மை 5: சாதாரணக் காய்ச்சல், சளி இருக்கும்போது தடுப்பூசி போடுவதால் பாதிப்பு ஏற்படும் என்தற்கு இதுவரை மருத்துவரீதியான ஆய்வுகள் இல்லை. நாம் நினைப்பதைவிட, நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் ஆற்றல் மிக்கது என்பதை மக்கள் உணர்வதே இல்லை. அதேநேரத்தில், அதிகக் காய்ச்சல், தீவிர காதுத் தொற்று என்று பாதிப்பு இருக்கும்போது மருத்துவரே தடுப்பூசியை இப்போது போட வேண்டாம் என்று தெரிவிப்பார்.

நம்பிக்கை 6: தடுப்பூசியில் பாதரசம், பதப்படுத்திகள் உள்ளன. எனவே, அவை ஆபத்தானவை.

உண்மை 6: சில தடுப்பூசிகளில் பாதரசம் உள்ளது என்பது உண்மைதான். ஆனால், இவை எவ்வித பாதிப்பும் அற்றவை. எனவே, பாதரசம் கலந்துள்ளது என அச்சப்படத் தேவை இல்லை. மேலும், இந்த வகை மெத்தல் பாதரசத்தை நம்முடைய உடலே மிக எளிதாக வெளியேற்றிவிடும். அதனால், உடலில் தேங்கி பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று பயப்படத் தேவையில்லை.

நம்பிக்கை 7: தடுப்பூசிகள், கற்றல் குறைபாடு, ஆட்டிசம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

உண்மை 7: இது முற்றிலும் தவறான கருத்து. எம்.எம்.ஆர் தடுப்பூசிக்கும் ஆட்டிசத்துக்கும் உள்ள தொடர்பு பற்றி, பிரிட்டிஷ் மருத்துவக் குழு ஒன்று மேற்கொண்ட பரிசோதனையில், தடுப்பூசிகள் மூலம் உடலின் எதிர்ப்புத்தன்மையை அதிகரித்துக்கொள்ள முடியுமே தவிர, கற்றல் குறைபாடுகளோ ஆட்டிசம் போன்ற பாதிப்புகளோ ஏற்பட வாய்ப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

நம்பிக்கை 8: தடுப்பூசிகள் நோய்களை 100 சதவிகிதம் தடுப்பது இல்லை.

உண்மை 8: இது ஒருவரின் உடல்நிலையைப் பொறுத்து மாறுபடுகிறது. பொதுவாக, தடுப்பூசிகள் சிறப்பாகவே செயல்படுகின்றன. மிகச்சிலருக்கு மட்டுமே தடுப்பூசி போட்ட பிறகும் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால், இது மிக குறைவானவர்களுக்கே நேர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. யாருக்குமே தடுப்பூசி அளிக்கவில்லை என்றால் ஏற்படக்கூடிய பாதிப்பு மிகமிக அதிகமாக இருக்கும். இந்த ஒரு காரணத்துக்காகத்தான் தடுப்பூசி அனைவருக்கும் அளிக்கப்படுகிறது.

டீன் ஏஜ் மற்றும் முதியவர்களுக்கான தடுப்பூசி!

குழந்தைகளுக்கு இரண்டு வயது முடிவதற்குள், முறைப்படி தரவேண்டிய தடுப்பூசிகளைப் போட்டுவிட்டால், அந்தக் குழந்தைக்கு 15 வகைப்பட்ட கடுமையான குழந்தைப்பருவ நோய்கள் ஏற்படுவது இல்லை. மேலும், குழந்தையின் வயதுக்கு ஏற்ற வளர்ச்சியும் சரியாக இருக்கும்.

குழந்தைகள் மட்டும் இன்றி இளைய வயதினரும் முதியோரும்கூட தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டியது கட்டாயம் என்றும், ஆண், பெண் இருபாலரும் மஞ்சள் காமாலை தடுப்பூசிகளையும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் சின்னம்மை, அக்கி அம்மை, நிமோனியா, டிப்தீரியா, ஃப்ளு, கக்குவான் இருமல், டெட்டனஸ் ஆகிய நோய்களுக்கான தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் ‘உலக சுகாதார நிறுவனம்’ கூறுகிறது.

பொதுவான அறிகுறிகள்!

தடுப்பூசி போட்ட உடனே சிலருக்கு முகம் அல்லது தோல் சிவத்தல், லேசான காய்ச்சல், சோர்வு, ஊசி போட்ட இடத்தில் வலி, பசியின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படும். இவை பக்கவிளைவுகள் கிடையாது. தடுப்பூசி உடலினுள் சென்று செயல்புரிவதால், சிலரது உடல் இதுபோன்ற அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.