Monday, November 14, 2016

ஸ்டெதஸ்கோப் முனீஸ்வரர்- மலேசியா

முனீஸ்வரனின் ரூபங்கள் பொதுவாக பரிவார தெய்வங்களாகவே அமைந்திருக்கும். ஆனால், முனீஸ்வரரை மூலவராகக் கொண்டு அமைந்த ஆலயம் மலேசியாவில் செரிம்பன் நகரிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது.

கோயிலுக்குள் நுழைந்ததும் ஸ்ரீவாழ்முனி வனமா முனீஸ்வரர், கையில் திரிசூலமும், ஸ்டெதஸ்கோப்பும் கொண்டு, கம்பீரமாக காட்சியளிக்கிறார். கண்கள் பிரகாசமாக நம்மைப் பார்ப்பது போன்று உள்ளன. இவரை, ‘மருத்துவர் அப்பா’ என்று மக்கள் அழைக்கின்றனர். சுற்றிலும் பிற தெய்வங்களின் புகைப்படங்களும், சிலைகளும் உள்ளன.

உடல் மற்றும் மனம் ஆகிய இரண்டையும் பேணுபவராக விளங்குகிறார் இவர். உடல் நோய் தீர்க்க ஸ்டெதஸ்கோப்பும், மனம் மற்றும் பிற துன்பங்களை போக்க திரிசூலமும் அடையாளங்கள்.இவரை வணங்கினால் தீராத நோயும் குணமடையும் என்கிறார்கள் பக்தர்கள்
சுமார் 37 அடி நீளம் கொண்ட குழந்தை வடிவ பிரமாண்ட பாலசிவன், பள்ளி கொண்டு சயன நிலையில் உள்ளார். குழந்தை போன்ற பிரமாண்ட உருவத்தில் அவரைக் காணும்போது உள்ளத்தில் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது. இது உலகிலேயே மிகப்பெரிய சிவன் உருவம் என்றும் சொல்கிறார்கள். இவரைச் சுற்றிலும் பக்தர்களால் வழங்கப்பட்ட விளையாட்டு சாமான்கள் உள்ளன.
மற்றொரு இடத்தில், சுமார் 8 அடி உயரம் கொண்ட நரசிம்மர் சிலை உள்ளது. அதன் பின் பகுதியில் ஒரு அறை மிகப்பெரிய சிவ லிங்க சன்னிதி. சுற்றிலும் விநாயகர், மகா விஷ்ணு போன்றோரின் சிலைகள் காணப்படுகின்றன.

கோயிலின் நந்தவனப் பகுதியில் முருகருக்கும் விநாயகருக்கும் தனிச் சன்னிதிகள் உள்ளன. சுவர்களின் ஆங்காங்கே பிரம்மாண்ட வண்ண ஓவியங்கள்.தென்னை மரத்தின்கீழ், தாமரை மீது அமர்ந்த புத்தர் சன்னிதி. மங்குஸ்தன் மரத்தின் கீழ் சிவசங்கரி அம்மன், காளியம்மன் சன்னிதி என வியப்பூட்டும் அமைப்புகள்.

இந்தக் கோயிலில் மிகவும் பிரசித்திப் பெற்றது அருள்வாக்கு கூறுதல். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகளுடன் 9 மணிக்கு மேல் அருள்வாக்கு சொல்லப்படுகிறது. அருள்வாக்கு சொல்லும்போது, பூசாரி கூர்மையான இரண்டு வாள்கள் பதிக்கப்பட்ட ஊஞ்சலில் ஏறி நின்று ஆடுகிறார். திருவிழாவின்போது, தீமிதி நிகழ்ச்சியில் நெருப்பில் நடனம் ஆடுகிறார்கள். அருள்வாக்கு சொல்லப்படும் நாட்களில், பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் இங்கு வருகின்றனர்.

தொழில் வளர்ச்சி, குடும்பப் பிரச்னை, குழந்தை பாக்கியம் வேண்டுவோரும் வருகின்றனர்.உலக அளவில் புகழ்பெற்ற கோயிலாக இன்று விளங்குகிறது.

No comments:

Post a Comment