Tuesday, November 17, 2020

கந்தசஷ்டி விரதம் அபூர்வத் தொகுப்பு

மனிதனைப் பரம்பொருளுடன் ஐக்கியப்படுத்துவதற்கு ஆன்றோர்கண்ட சிறந்த நெறிகளில் குறிப்பிடத்தக்கவை விரதங்கள். `வரிக்கப்படுவது விரதம்’, ‘உடலளவு விரதம்’, `காப்பது விரதம்’ என்பதெல்லாம் ஆன்றோர் வாக்கு. பரமனிடத்தில் பக்திகொண்டு தன்னைப் பக்குவப்படுத்திக்கொள்ள விரதங்களைப் போன்று வேறெதுவும் துணைபுரிவதில்லை. இப்படி, இறைவனுடன் நம்மைப் பிணைக்கும் அற்புத விரதங்களில் ஒன்று கந்தசஷ்டி விரதம்.


சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் பெறவும், குழந்தை வரம், கல்விப் பேறு, தேக ஆரோக்கியம், பொருளாதார வளம் முதலான சகல வரங்களைப் பெற்று மகிழவும், மனதில் வரிக்கும் நற்காரியங்கள் அனைத்தும் கந்தனருளால் நல்லபடி நிறைவேறவும் வேண்டி நாம் கடைப்பிடிக்க வேண்டிய இந்த ஒப்பற்ற விரதம் குறித்து வசிஷ்ட மகரிஷி, முசுகுந்தனுக்கு உபதேசித்துள்ளார்.
ஸ்ரீசுப்ரமணிய கடவுளுக்குரிய விரதங்களில் மிகவும் மகத்தானது கந்தசஷ்டி விரதம் என்பது வசிஷ்டரின் திருவாக்கு. நாமும் அதன் மகத்துவங்களையும் கடைப்பிடிக்க வேண்டிய நியதிகளையும் அறிந்துகொள்வோம்.


கந்தசஷ்டி விரத நியதிகள்...
******************************
ஐப்பசி மாதமாகிய துலா மாதத்தில், சுக்ல பட்ச பிரதமை அதாவது ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி சஷ்டி திதிநாள் வரை ஆறு நாள்கள் இந்த விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.
இந்த ஆறு நாள்களும் காலையில் நீராடி திருநீறணிந்து, தோய்த்து உலர்ந்த ஆடைகளை அணிந்து கும்பத்திலும், பிம்பத்திலும் முருகப்பெருமானை ஸ்தாபித்து வழிபாடு செய்ய வேண்டும்.
திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், சண்முகக்கவசம், குமார ஸ்தவம், முதல்வன் புராண முடிப்பு, கந்தர்கலி வெண்பா, கந்தசஷ்டி கவசம் போன்ற பாமாலைகளைப் பாடி இரவிலும் முருகப்பெருமானைப் பூஜிக்க வேண்டும். வெல்லம் சேர்த்து நெய்யில் சமைத்த மோதகத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். அதேபோல் இந்த விரத நாள்களில் கந்தபுராணத்தைப் பாராயணம் செய்வது மிகவும் விசேஷம்.
ஏழாம் நாளான சப்தமி தினத்தில் முருகப்பெருமானை விதிப்படி பூஜித்து, அடியார்களுடன் சேர்ந்து பாரணை செய்தல் வேண்டும்.
விரதம் தொடங்கி ஆறு நாள்களும் உமிழ்நீரையும் உள்ளே விழுங்காதபடி நோன்பு இருப்பது ஒருமுறை. அவ்வாறு இருக்க இயலாதவர்கள் ஆறு மிளகையும், ஆறு கை நீரையும் அருந்தலாம். உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. உப்புநீர், எலுமிச்சைப் பழச்சாறு, நார்த்தம் பழச்சாறு, இளநீர் போன்றவற்றை இவ்விரதம் இருப்போர் அருந்தக் கூடாது என்பர். கந்தசஷ்டி விரத நாள்களில் திருச்செந்தூருக்குச் சென்று, இந்த முறைப்படி மிகச் சிரத்தையுடன் விரதம் இருக்கும் அன்பர்கள் தற்போதும் உண்டு.
எளிய முறையாக... முதல் ஐந்து நாள்கள் ஒருபொழுது மட்டும் பச்சரிசி சாதம் சாப்பிட்டு, கந்தசஷ்டியன்று நாள் முழுக்க உண்ணாநோன்பிருந்து முருகப்பெருமானை வழிபடுவதுடன், அன்று மாலை சூரசம்ஹார வைபவத்தைத் தரிசிப்பதோடு விரதத்தைப் பூர்த்தி செய்வார்கள் அன்பர்கள்.
எந்த முறையில் விரதம் கடைப்பிடிப்பதாயினும் முருகப்பெருமானுக்கு நம்மை முழுமையாக அர்ப்பணிக்கும் உணர்வுடன் பக்தி செய்து வழிபடுவதால், வந்த வினைகளும் வரவிருக்கும் வல்வினைகளும் நம்மைவிட்டு விலகியோடும். கந்தனருளால் நம் வாழ்க்கைச் செழிக்கும்.
ஐப்பசி மாதத்து சுக்லபட்ச சஷ்டியன்று சூரசம்ஹாரம் நிகழ்ந்த நாளாகும். நம் உள்ளத்தில் வாழும் - ஆட்சி செய்யும் காமம் முதலான சூரபத்மாதியரை முருகப்பெருமானின் ஞானவேல் அழித்து, ஞானவெற்றி பெற்று வாகை சூடி பேரின்பம் பெறுவதன் குறிப்பே சூரசம்ஹாரத் திருவிளையாடலின் அருள்குறிப்பாகும். அதற்குரிய ஆன்மிக வீரத்தைப் பெற உதவுவது சஷ்டி விரதம் ஆகும். தேவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து இழந்த பதவியைப் பெற்றனர். நாமும் கந்தசஷ்டி விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து எல்லா இன்பங்களையும் பெற்று மகிழ்வோம்.


பாம்பன் சுவாமிகள் காட்டும் வழி!
************************************
சஷ்டி வழிபாட்டு முறை குறித்து ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் தரும் விளக்கம் அற்புதமானது. அதுபற்றி தெரிந்துகொள்வோமா?
அபிஷேகம்...
மந்திரங்களை முறைப்படி ஓதி முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யத் தொடங்க வேண்டும்.
பால், தயிர், கருப்பஞ்சாறு, இளநீர், நல்ல வாசனை திரவி யங்கள் சேர்க்கப்பட்ட நீர் ஆகியவற்றைக்கொண்டு அபிஷேகிக்கும்போது ஒருமுகப்பட்ட மனதுடன் செய்ய வேண்டும். முருகனுக்கு விருப்பமான பழங்களை அபிஷேகம் செய்தல் விசேஷமானது.
மேலும், அனைவரும் அலங்காரமாகக்கொள்ளும் திருநீறு (விபூதி) அபிஷேகம் செய்து பிறகு தக்க வஸ்திரங் களை அணிவிக்க வேண்டும்.
அலங்காரம்...
மார்பில் வாசனை வீசும் சந்தனக் கலவைகளை மிகுதியாகப் பூசி அலங்காரம் செய்விக்க வேண்டும். மல்லிகை, வில்வம், கடம்பு, அசோகம், செங்கழு நீர், தாமரை முதலான வாசனையுடைய பூக்களைக்கொண்டு தொடுத்த மாலையை அணிவித்து, மஞ்சள் பூசிய அட்சதையை சிறிது தூவ வேண்டும்.
தீப-தூபங்கள் நைவேத்தியங்கள்...
வாசனை மிக்க தூபப் புகையைக் காட்ட வேண்டும். குத்து விளக்கை ஏற்றி பொலியச் செய்தல் வேண்டும்.
வாழைப்பழம், பலாப்பழம், விளாம்பழம், முதிர்ந்த கிச்சிலி (நாரத்தம்பழம்), மாதுளை, அத்தி, மாம்பழம், முந்திரிப்பழம், புளிப்பே இல்லாத இலந்தைப்பழம் போன்ற பலவகைக் கனி களைப் படைக்க வேண்டும்.
எள் உருண்டை, பொரி வடை, அதிரசம், இடியாப்பம், மோதகம் (கொழுக்கட்டை), அடைப் பணியாரம், அவல், பிட்டு, மாவு, தயிர்க்களி (ததியோதனம்), கடலை, பல பயறு வகைகள் முதலான அறுசுவையும் நிரம்பிய நைவேத்தியங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
அடுத்து, முருகப்பெருமானுக்குச் சமர்ப்பிக்க வேண்டிய கறி வகைகளைக் கூறுகிறார் பாம்பன் சுவாமிகள்.
காய்கறி வகைகள்...
வெள்ளை நிற பாகற்காய், செவ்வாழைக்காய், நீண்ட அவரைக்காய், கத்திரிக்காய், துவரங்காய், புடலங்காய், பூச்சுணை (பூசணிக்காய்), வெள்ளரிக்காய் ஆகிய காய்களை நன்கு நறுக்கித் திருத்த வேண்டும். அவற்றை பொருத்தமான செப்புக்குடத்திலிட்டு, அடுப்பில் வைத்து பதமாகச் சமைத்துப் படைக்க வேண்டும்.
கீரை வகைகள்...
கீரை வகைகளில் பசலைக்கீரை, பொன்னாம் காணிக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, முளைக்கீரை, தண்டுகீரை முதலிய யாவையும் செப்புப் பாத்திரத்தில் இட்டு வதக்கி நன்றாக மூடிவைக்க வேண்டும். சிறுமணி அரிசி, மிளகு, சீரகம் ஆகியவற்றைக்கொண்டு ஆக்கிய பொங்கலையும் படைத்து, எல்லாவற்றையும் அழகாக வகைப்படுத்தி, பக்தி சிரத்தையோடு நிவேதித்து, நல்ல பாக்கு, வெற்றிலை வைத்து வாசனைமிக்க மலர்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும்.


சந்தோஷம் அருளும் சஷ்டி வகுப்பு!
*************************************
திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, கந்தரந்தாதி, திருவகுப்பு, வேல், மயில், சேவல் விருத்தங்கள் முதலியன அருணகிரிநாத சுவாமிகள் அருளிய நூல்களாகும். `திருவகுப்பு’ எனும் தொகுப்பில் 25 வகுப்புகள் உள்ளன. சீர்பாத வகுப்பு, வேல் வகுப்பு, வேல்வாங்கு வகுப்பு, தேவேந்திர சங்க வகுப்பு, சித்து வகுப்பு, புயவகுப்பு முதலான 25 வகுப்புகள் அவை.
அருணகிரிநாத சுவாமிகளை தன் குருவாகக்கொண்டு, முருகப்பெருமான்மீது 6666 பாடல்களை அருளிச்செய்தவர் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள். அவர் பாடியுள்ள பதிகங்கள் ஒவ்வொன்றின் கடைசி பாடலிலும் அருணகிரிநாத சுவாமிகளைக் குறிப்பிட்டு பதிகத்தை நிறைவு செய்துள்ளார். இது, அருணகிரியாரிடம் பாம்பன் சுவாமிகள் கொண்டிருந்த பக்தியும் மதிப்பும் என்பதை உணரலாம்.
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய நூல்களில் குறிப்பிடத்தக்கது சஷ்டி வகுப்பு.
சுவாமிகள் சென்னையில் இருந்தபோது, 1903-ம் ஆண்டு (சோபகிருது வருஷம் ஐப்பசி மாதம்) இதை அருளினார். இப்பாமாலை நான்கு அடிகளில் 64 கண்ணிகளைக் கொண்டு அமைந்துள்ளது.
முதல் அடியான 16 கண்ணிகளும் 16 வகை சந்தக் குழிப்பில் அமைந்துள்ளது, அருணகிரிநாதருக்குப் பின் சந்தப்பா பாடும் அவரது அருளாற்றலுக்கு எடுத்துக் காட்டாகும்.
இந்தச் சஷ்டி வகுப்பின் மூன்றாம் அடியிலுள்ள 16 கண்ணிகளில் (அதாவது கண்ணி 33 முதல் 48 வரை), சஷ்டித் திருநாளில் குமரனுக்கு நிகழ்த்த வேண்டிய அபிஷேகம், அலங்காரம், நிவேதனம், அர்ச்சனை, ஆராதனை ஆகியவற்றைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
அடுத்த 16 கண்ணிகளில் (49 முதல் 64 வரை ) முருகன் உலா வருவதை வர்ணிக்கிறார். இந்திரன், பிரம்மன், விஷ்ணு மற்றும் தேவர்கள், முனிவர்கள் சூழ்ந்து வர, பலவகை வாத்தியங்கள் முழங்க, வெண்குடை, சாமரம், ஆலவட்டம் முதலிய அரச சின்னங்களோடு உலாவரும் குமரக்கடவுள், கந்தசஷ்டியன்று பூசிக்கும் அன்பர் திருவுள்ளத்தில் எழுந்தருளியிருப்பதைக் கூறி, நிறைவாக தம்மை ஆதரித்து ஆண்டருள வேண்டுகிறார்.


சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்!
********************************************
`சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்' என்றொரு பழமொழி நம் நாட்டில் உண்டு. மேலோட்டமாகப் பார்த்தால், பானையில் ஒரு பொருள் இருந்தால்தான் அதை அகப்பையில் எடுக்க முடியும் என்று பொருள்கொள்ளத் தோன்றும். இதில் கந்தசஷ்டி தத்துவமே அடங்கியிருப்பதை உணரும்போது நமக்கு ஆச்சர்யம் ஏற்படும். திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகள் எனும் மகான் இதற்கு
அருமையான விளக்கம் கொடுப்பார்.
சஷ்டி என்பது தமிழில் ‘சட்டி’ என வரும். ‘சஷ்டியில் விரதம் இருந்தால் அகப்பையாகிய கருப்பையில் மகப்பேறு வாய்க்கும்’ எனும் நுட்பமான பொருள் அந்த வாக்கியத்தில் அடங்கியுள்ளது.
'சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் - இதய குகையில் இறைவன் குடிகொள்வான்' என்று பொருள் கொள்வதும் சிறப்புடையதாகும்.
தமிழாசிரியர் ஒருவர் தம் மாணவருடன் வீதியில் நடந்துகொண்டிருந்தார். அந்த வீதியில் குயவர்கள் பானை செய்து கொண்டிருந்தார்கள். அங்குள்ள குடம், சட்டி ஆகியவற்றைப் பார்த்ததும் தமிழாசிரியர் தன் மாணவனிடம் விளையாட்டாக, ‘குடத்தைப் பிடித்தவன் சட்டியை நோக்கக் குறையில்லையே’ எனும் ஓர் ஈற்றடியை உள்ளத்தில் உருவாக்கி அதை அமைத்து ஒரு செய்யுள் இயற்றும்படி கட்டளையிட்டார். மாணவரும் அந்த ஈற்றடிக்கு ஏற்ப செய்யுள் அமைத்துப்பாட முற்பட்டார்.
கந்தர் சஷ்டி விரதத்தைக் கடைப் பிடித்து முருகனை வழிபட்டால், நமக்கு எல்லா நலன்களும் உண்டாகும் எனும் பொருளில் செய்யுளைப் பாடினார்.
கடத்தைப் பழித்துக் களபம்
திமிர்ந்து கனகமணி
வடத்தைத் தரித்து சுணங்கு
படர்ந் தொளிர் வள்ளிதன
தடத்தைத் தழுவும் தனது
மலர்க்கைத் தலத்தினில் குக்
குடத்தைப் பிடித்தவன் சட்டியை
நோக்கக் குறைவில்லையே
- என்பதுதான் அந்தப் பாடல்.
குக்குடத்தைப் (கோழிக் கொடியை) பிடித்தவன் முருகன். அவனுக்குரிய சஷ்டி விரதத்தை நோக்க (அனுஷ்டித்து வழிபட), குறைவில்லை (நமக்குக் குறையேதும் நேராது) எனும் அழகிய இனிய கருத்தினைப் புலப்படுத்தி அமைந்த மேற்காணும் செய்யுளைப் படித்து நாமும் இன்புறுவோம்.


குழந்தைகளைக் காக்கும் சஷ்டி தேவி!
*****************************************
சஷ்டி தேவி எனும் அம்பிகை தெய்வானை அம்மையின் ஆறில் ஓர் அம்சமாக அவதரித்தவள். ஆறில் ஒரு கூறாகத் தோன்றியதால் இந்த தேவி `சஷ்டி தேவி' என அழைக்கப்படுகிறாள். இத்தேவியின் வரலாறு தேவி பாகவதத்தில் விரிவாகக் கூறப்படுகிறது. இத்தேவியின் விசேஷ குணமானது பெற்ற தாய் தன் குழந்தையைக் கவனிக்காது இருக்கும் காலத்திலும், அக்குழந்தையைப் பாதுகாத்து வளர்க்கும் கருணை நிறைந்தவள் என்பதுதான்.
பிரியவிரதன் என்ற அரசன் ஒருவன் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லாமல் வாழ்ந்து வந்தான். இல்லற வாழ்வில் அவனுக்கு ஈடுபாடு இல்லை. தினமும் பிரம்மதேவனை வழிபாடு செய்து வந்தான். அவரது விருப்பப்படியும், அறிவுரைப்படியும் மாலினி என்னும் பெயருடைய நங்கையைத் திருமணம் செய்து கொண்டான். மணமாகி பல ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்கு குழந்தைப்பேறு கிடைக்கவில்லை.
எனவே, காசியப முனிவரைக்கொண்டு பிள்ளைப்பேறு வரம் வேண்டி ‘புத்திர காமேஷ்டி என்னும் யாகத்தைச் செய்தான் பிரியவிரதன். பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து மாலினிக்குப் பிள்ளைப்பேறு கிடைக்கப்பெற்றது. ஆனால், அது குறைப் பிரசவமாகி, குழந்தை உருத்தெரியாமல் இறந்துவிட்டது. இதனால் பெரிதும் மனவேதனை அடைந்த பிரிய விரதன், தானும் மரணத்தைத் தழுவ முற்பட்டான். அப்போது ஒரு தெய்வப் பெண்மணி அங்கு தோன்றி உயிரற்ற அக்குழந்தையின் உடலைத் தொட, அக்குழந்தை உயிர் பெற்று அழத் தொடங்கியது.
இந்த அதிசயத்தைக் கண்ட பிரியவிரதன், ‘`அம்மையே! என் குழந்தைக்கு உயிர்கொடுத்த தாங்கள் யார்?'' என்று கேட்டான் ‘`என் பெயர் சஷ்டிதேவி. தேவசேனையின் அம்சமான நான் பிரம்மாவின் விருப்பமான மகள். குழந்தைகளை மிகவும் விரும்பி பாதுகாப்பேன் நான். குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு அதை அளிப்பவள். கணவன்மார்களுக்கு இல்லற இன்பத்தையும் செல்வச் செழிப்பையும் கொடுப்பவள். மாங்கல்ய பலத்தை வேண்டுவோருக்கு அதை அளிப்பவள்” என்று விளக்கிக் கூறியவள், உயிர்ப்பெற்ற அக்குழந்தைக்கு ‘சுவிரதன்’ என்று பெயரும் சூட்டினாள்.
தேவிபாகவதம் சஷ்டி தேவியின் பெருமைகளைப் பற்றி மேலும் குறிப்பிடுகிறது. குழந்தைகளின் அருகிலேயே இருந்து கொண்டு அதற்கு உடல்நலத்தையும், வளமான வாழ்வையும் அருளும் தேவி இவள். குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டி மகிழ்வாள். மாத்ரு தேவதைகள் எட்டு பேரில் முக்கியமானவள் சஷ்டி தேவி. குழந்தை பிறந்த ஆறாம் நாளிலும், 21-ம் நாளிலும் சஷ்டிதேவியை வழிபடல் வேண்டும் என்று தேவி பாகவதம் குறிப்பிடுகிறது.
தேவயானை அம்மையின் ஆறில் ஒரு கூறு சஷ்டி தேவி என்பதால், அம்மையின் சஹஸ்ரநாமாவளியில் ‘ஓம் ஷஷ்டியை நம: ஓம் ஷஷ்டீச்வர்யை நம: ஓம் ஷஷ்டி தேவ்யை நம:' என்னும் நாமாக்களால் அர்ச்சிக்கப்படுகிறாள்.
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள், தான் அருளிய குமார ஸ்தவம் என்னும் தோத்திரத்தில் `சஷ்டி தேவியின் பதி' என்ற பொருளில் `ஓம் ஷஷ்டீபதயே நமோநம:' என்று முருகனைப் போற்றுவார்.
ஆயுஷ்யஹோம மந்திரங்களில் ஆயுஷ்ய சூக்தத்தில் ‘சஷ்டி’ என்று சொன்னாலே ஆயுள் விருத்தியாகும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அதில் வரும் ‘இந்த்ரசேனா’ எனும் பெண் தெய்வம் தெய்வயானை (தேவசேனா) என்று அறியலாம்.


ஷட் கோணம்
***************
முருகனுக்குரிய சக்ரம் - யந்திரம் ஷட்கோணம் (அறுகோணச் சக்ரம்). மஹா ஷட்கோணச் சக்ரமும் உண்டு. ஆசனம் அல்லது இருப்பிடம் என்பதை `கோணம்' என்று கூறுவார்கள். ஆசனங்களில் விமலாசனம் என்பது அறு கோண வடிவுடையது.
அறுகோண சக்ரத்தில் சிவன், நாராயணன், சக்தி, கணபதி, சூரியன், பைரவர் ஆகிய பீடாதிபர்களைக் குறிப்பிட்டு வணங்குவர். அறுகோணச் சக்ரம் இருக்கும் வீட்டைத் துன்பங்கள் அணுகாது.


ஷட் கோசம்
************
வேதங்களின் அங்கங்களாகக் கருதப்படும் சீட்சை, வியாகரணம், சந்தஸ், நிருத்தம், ஜோதிஷம், கல்பம் என்பன அறுவகை சாத்திரங்கள். இந்த ஆறு சாத்திரங்களையும் தோற்றுவித்தருளியவர் குகப்பெருமான் என்பது பாம்பன் சுவாமிகள் கொள்கை.
ஷட் கோசம் என்பது முருகனுக்கு உகந்த ஆறு அருள் நூல்களைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அநுபூதி, கந்தர் அந்தாதி, திருவகுப்பு என்பனவாகும். கோசம் என்பதற்கு புண்ணியத்தலங்கள் என்றும் பொருள் கூறுவர். அவ்வகையில் ஆறு தலங்கள் - ஷட்கோசங்கள்: திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன் குடி (பழநி), திருஏரகம் (சுவாமிமலை) குன்று தோறாடல் (திருத்தணிகை), பழமுதிர்ச்சோலை.


வினைகள் தீர்க்கும் வேல் வகுப்பு!
************************************
அருணகிரிநாதர் அருளிச்செய்த இப்பாடலை கந்தசஷ்டி விரத நாள்களில் பாடி, முருகனை வழிபட்டால், வேண்டிய வரங்கள் கிடைக்கும்.
பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்த இதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும்
பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை
தெறிக்க வரம் ஆகும்
பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
இடித்துவழி காணும்
பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள் புசிக்க அருள் நேரும்
சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும் உறும் இடுக்கண் வினைசாடும்
சுடர்ப்பரிதி ஒளிப்ப நிலவொழுக்குமதி
ஒளிப்ப அலை அடக்குதழல் ஒளிப்பஒளிர் ஒளிப்பிரபை வீசும்
துதிக்கும்அடி யவர்க்கொருவர் கெடுக்க இடர்
நினைக்கின் அவர் குலத்தைமுதல் அறக்களையும் எனக்கொர்துணை ஆகும்
சொலற்கரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்தெறிய உறுக்கிஎழும் அறத்தை நிலைகாணும்
தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை கழற்கு நிகர் ஆகும்
தலத்தில் உள கணத் தொகுதி களிப்பின்உண
வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்கவளை வாகும்
தனித்துவழி நடக்கும் எனதிடத்தும் ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு கடுத்திரவு பகற்றுணைய தாகும்
சலத்துவரும் அரக்கர் உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை எனச்சிகையில் விருப்பமொடு சூடும்
திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிரம் நிறைத்துவிளை யாடும்
திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்ததென முகட்டின் இடை பறக்கஅற விசைத்ததிர ஓடும்
சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி விழித்தலற மோதும்
`திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தன் என துளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்துகுகன் வேலே!'
குறிப்பு: இப்பாடல் ஒவ்வோர் அடியின் முடிவிலும் `திருத்தணியில்' எனத் தொடங்கும் கடைசி அடி முழுவதையும் கூறுவது வழக்கம்

நன்றி 

Swami Sadasivananda Sarasvathi

Tuesday, November 10, 2020

சாஸ்திரத்தில் பட்டாசு கொளுத்தச் சொல்லப்பட்டுள்ளதா?

தீபாவளி

தீபாவளிக்கு ஏன் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று பலருக்கும் சந்தேகம் இருக்கிறது.
மற்ற வெடிகளை வெடிப்பது பற்றி சாஸ்திரத்தில் ஏதும் இல்லாவிட்டாலும், அவசியம் மத்தாப்பு கொளுத்த வேண்டும் என்று சொல்கிறது.
"ஸ்மிருதி கௌஸ்" என்ற ஸ்தோத்திரத்தில், இதுபற்றி சொல்லப்பட்டுள்ளது. ...
*"துலா ஹம்ஸ்தே ஸஹஸ்ராம்சௌ ப்ரதோஷே பூத தர்ஸ்யோ:*
*உல்கா ஹஸ்தா நரா:குர்யு:பித்ரூணாம் மார்க தர்சனம்"*
என்ற இந்த ஸ்லோகத்தில் "துலா மாதமான ஐப்பசியில், அதாவது தீபாவளியன்று, "உல்கா' எனப்படும் நெருப்பை கையில் பிடியுங்கள் என்கிறது.
அதாவது, மத்தாப்பு கொளுத்த வேண்டும். இதில் வரும் "பூத' என்ற வார்த்தை சதுர்த்தசியைக் குறிக்கும்.
அதாவது, நரக சதுர்த்தசி எனப்படும் தீபாவளி.
'தர்சம்' என்ற வார்த்தை "அமாவாசை'யைக் குறிக்கும். ஐப்பசி மாத அமாவாசை.
இந்த இரண்டு நாட்களும் நெருப்பைப் பிடிப்பது கட்டாயம்.
காரணம் என்ன? "பித்ரூணாம்" என்ற வார்த்தை இதை வெளிப்படுத்துகிறது.
பித்ருக்கள் எனப்படும் நமது முன்னோர், நாம் காட்டும் இந்த வெளிச்சத்தைப் பயன்படுத்தி தங்கள் வழியில் (சொர்க்கம் நோக்கி) முன்னேறிச் செல்வார்கள்.
இந்த வருடத்தில் இருந்து, பட்டாசை விரும்பாதவர்கள் கூட, கண்டிப்பாக மத்தாப்பாவது வாங்கி விடுங்கள், நம் முன்னோருக்காக
"ப்ரதோஷ-காலத்தில் *"உல்காதானம்"* செய்வோம்.
உல்கா=நெருப்புடன்-கூடிய-கட்டை; (தற்காலத்தில்=மத்தாப்பு)
மேலும் மூன்று நாட்களும் தீபங்களாலும், வாண வேடிக்கைகளாலும் பல தீபங்களை ஏற்றி லக்ஷ்மி தேவிக்கு விசேஷ நீராஜனம் செய்தால் ஐஸ்வர்யத்தை நிரம்பப் பெற்று வாழலாம் என்பதை,
நீராஜிதோமஹாலக்ஷ்மீ மர்ச்சயன்ச்ரியமச்னுதே தீபைர் நீராஜிதா யத்ர தீபாவளிரிதிஸ்ம்ர ௭ன்ற வரிகள் தெளிவாக்குகின்றன.

இலையில் சாப்பாடு - அறிவியல் உண்மை

ஐயா, சாப்பிட வாங்க...என மாணவர்கள் ஆசிரியரை அழைத்தனர். என்னடா , இன்னிக்கு விசேஷம்? என்றவாறே தனது அறைக்குள் மதிய உணவு உண்பதற்கு உள்ளே நுழைந்தார் ஆசிரியர்.
அப்பொழுது ஓர் மாணவன் இலையை மாத்திப் போடவே அதனைக் கண்ட ஆசிரியர், இலையை இப்படி போடக்கூடாது என வசதியாக இலையை போட்டு கொண்டார்.
ஐயா, நான் இலை போட்ட முறை தப்பா ? எப்படி போட்டால் என்ன ஐயா... இலையில் தானே சாப்பாடு போடப் போறேன் என்றான் மாணவன். இதற்கு ஏதாவது சடங்கு, சம்பிரதாயம் இருக்கா ஐயா?..
சடங்கெல்லாம் ஒன்றும் கிடையாது..ஆனால், ஒரு அறிவியல் உண்மை இருக்கிறது என்று கூறியவாறே வாழையிலையில் நீர் தெளித்து இலையை நன்கு சுத்தப்படுத்தினார்.
ஐயா தண்ணீரில் கழுவியது தான் என்றான் மாணவன்.
நாம் இலையில் தண்ணீர் விட்டாலே கழுவியதாகட எண்ணக்கூடாது...அதில் படிந்திருக்கும் தூசும் சரி , பறவைகளின் எச்சமும் சரி எளிதில் நீங்காது. எப்பொழுது இலையை போட்டாலும் தண்ணீர் வைத்த பிறகு விருந்தினர் அமர்ந்து இலையை கழுவிய பிறகுதான் உணவு பரிமாற வேண்டும். இதனால் விருந்தினர் திருப்தியாக உண்பார்கள் உணவு வீணாகாது,. சரியா.. ?
அது சரி ஐயா , இலையை ஏன் மாத்திப் போட்டுக்கிட்டிங்க ?
சொல்றேன். நுனி இலை இடது பக்கமும் , வலது பக்கம் அடி இலை இருக்க வேண்டும். சாப்பிடும் பகுதி இலை அகலமாக இருப்பது மட்டுமல்லாமல் முற்றி இருப்பதால் சூடாக சோறு வைத்தாலும் வெந்து போகாது. நம் எதிர் பகுதியில் பதார்த்தஙகளை வைக்க வேண்டும். சாப்பிடுவதற்கு வலது கை உபயோகிப்பதால் எளிதில் சாப்பிட ஏதுவாக இருக்கும் என்றார். கொழுந்து இலையில் சூடாக சாப்பாடு வைத்தால் இலையானது வெந்து உணவோடு சாப்பிட நேரும் என்றார் ஆசிரியர்.
ஐயா , சாப்பாடு வைக்கட்டுங்களா..
இனிப்பை முதலில் வை என்றார் ஆசிரியர்.
ஏன் ஐயா..?
விருந்தின் போது முதலில் இனிப்பைச் சாப்பிடுவதால் நம் வாயிலிருந்து உமிழ்நீர் சுரக்கும். இந்த உமிழ்நீர் தான் நாம் சாப்பிடும் உணவு ஜீரணமாக உதவும். சாப்பிடுவதற்கு பத்து நிமிடத்திற்கு முன் நீர் அருந்த வேண்டும். சாப்பிட்டு முடித்து சுமார்15 நிமிடத்திற்கு பிறகு தான் நீர் அருந்த வேண்டும். இடையில் நீர் அருந்தக்கூடாது. அவ்வாறு அருந்தினால் உமிழ்நீர் சுரப்பது நின்று வயிற்று கோளாறு ஏற்படும்.
சரிங்க ஐயா ரசம் போடட்டுமா ? என்றான் மாணவன்.
பொறு..முதலில் சாம்பார் ,அடுத்து குழம்பு, ரசம் போட்டு , பாயாசம் பரிமாறிய பிறகு மோர் போட்டு சாப்பிட வேண்டும்.
' மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் '
முன் உண்ட உணவு செரித்த பின்னரே மீண்டும் உண்ணும் பழக்கமுடையோருக்கு வாழ்நாளில் மருந்து உண்ண வேண்டிய அலசியம் இராது என வள்ளுவப் பெருமான் கூறுகிறார்.
திட உணவு அரை வயிறும் , திரவ உணவான நீர் , பால் , மோர் கால வயிறும் , மீதம் கால் வயிறு காலியாகவும் இருக்க வேண்டும். காலை வேளையில் அரசனை போலவும், மதியம் வீரன் போலவும் , இரவில் ஏழை போல அளவோடு உண்ண வேண்டும் என முன்னோர்கள் கூறியிருக்கின்றனர் என்றார் ஆசிரியர்.
விருந்தோம்பலில் இவ்வளவு விஷயமிருக்கா ஐயா என்றான் மாணவன்.
இன்னும் இருக்கு. சரியாக உணவு உண்ணாமல் போனால் குடற்புண் ஏற்பட வாய்ப்புண்டு. உணவு சாப்பிடவிட்டால் வயிற்றில் ஹைடரோ குளோரிக் அமிலம் உற்பத்தியாகி உடலை விட்டு வெளியேறாமல் தொந்தி விழ காரணமாகிறது. நமக்கு ஆரோக்கியம் குன்ற இதுவும் ஒரு காரணமாகும். விருந்தின் போது ஆறு சுவையான வகையில் பரிமாறப்பட வேண்டும். விருந்தில் பரிமாறப்படும் உணவில் இருக்கிற கறிவேப்பிலை ,
கொத்தமல்லித் தழை என ஒதுக்காமல சாப்பிட வேண்டும். ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு, சீரகம் , பூண்டு எதையும் ஒதுக்காமல் உணவோடு சேர்த்து நொறுங்க தின்றால் நூறு ஆண்டுகள் வாழலாம் என முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். விருந்து முடிந்த பின் இலையை நல் விருந்து என்றால் நம் பக்கமாக மூட வேண்டும். கெட்ட காரிய விருந்து என்றால் , வேண்டாமென்பது போல எதிர்புறமாக மூட வேண்டும். இது குறிப்பால் உணர்த்தும் முறை. நம் முன்னோர்கள் வகுத்த வழி.
அருமை ஐயா...இதுதானா இன்னும் இருக்கா ஐயா . .
அவசரப்படாதே..விருந்தை தரையில் சம்மணமிட்டு அமர்ந்து உண்ண வேண்டும். பூமியின் ஈர்ப்பு சக்தியால் காலை மடக்கி சம்மணமிட்டு சுக ஆசனத்தில் சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகும். விருந்துக்கு பிறகு , தாம்பூலம் தரிப்பார்கள்.
தாம்பூலம்னா என்ன ஐயா?
அதுவா வெற்றிலை , பாக்கு , சுண்ணாம்பு சேர்ந்தது தான் தாம்பூலம். இது ஜீரணமாவதற்கு
அருமையான மருத்துவம். பாக்கில் கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தையும் , வெற்றிலையில் உள்ள காம்பை நீக்கிட அதிலுள்ள உரைப்பு கபத்தையும் , சண்ணாம்பிலுள்ள காரம் வாதத்தையும் போக்கும் தன்மையுடையது. அதனால தான் வெற்றிலைச் செல்வம் என கூறுகின்றனர். புகையிலையை எக்காரணத்தை கொண்டும் சேர்க்க கூடாது , போதுமா?
அருமை ஐயா.. நீங்கள் சாப்பிடாமலே விவரமாக சொல்லி விட்டீர்கள்.. இனி நீங்கள் சாப்பிடுங்கள் ஐயா, என்றான் மாணவன். அது சரி ஐயா...வயதானவர்கள் மட்டுமே தாம்பூலம் தரிக்கிறார்கள்...பல பேர் போடுவதில்லை ஐயா...என் போன்றோர் வெற்றிலை பாக்கு போடுவதில்லை ஐயா...
நல்ல கேள்வி ! இளையோர் ஓடியாடி விளையாடுவதால் எளிதில் செரிக்கும். முதியோர்களால் இயலாத காரணத்தால் தான் தாம்பூலம் தரிக்கிறார்கள்...புரிந்ததா ?
அருமையோ அருமை ஐயா. பள்ளியில் படிக்கும் பாடத்தை எப்பொழுது வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால் , இது போன்ற சமூக அனுபவங்களின் பாடத்தை உங்களை தவிர வேறு யாரும் சொல்ல முடியாது ஐயா... நன்றி ஐயா..
விருந்தோம்பல் என்பது மிகப்பெரிய கலை. அதை எவரும் முறையாக பின் பற்றுவதில்லை எனகூறியவாறு பேசாமல் உணவருந்தினார் ஆசிரியர்.

நன்றி -

Sunday, November 1, 2020

உங்களுக்கு தெரிந்து நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைப்படி நடவடிக்கை எடுக்கலாம்.

அரசாணை எண் : 540-ன் கீழ் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற கோரும் மனு.
அனுப்புனர் :
உங்கள் முகவரி
பெறுநர் :- வட்டாட்சியர் அவர்கள்,
...... வட்டம்.......மாவட்டம்
பொருள் : அரசுக்குச் சொந்தமான வருவாய்த்துறை அரசாணை எண் : 540 -ன் படி அகற்றிய பொதுமக்கள் பயன் பெற செய்ய கோருதல்
பார்வை : அரசு நிலங்களை பாதுகாக்கவும் ஆக்கிரமிப்புகள் கண்டறிந்து அவற்றை அகற்றவும் கீழ்க்காணும் சட்டங்களின் வழிவகை செய்யப்பட்டுள்ளன.
1.தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905
2.தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920
3.தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து சட்டம் 1958
4.தமிழ்நாடு பொது கட்டிடம் (அனுமதிக்கப்படாத ஆக்கிரமிப்பு) சட்டம் 1975
5.தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994
6.தமிழ்நாடு நெடுஞ்சாலைகளில் சட்டம் 2001
7.தமிழ்நாடு நீர் நிலைகள் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் சட்டம் 2007
8.அரசாணை (நிலை) எண் 41 வருவாய் துறை நாள்: 20.01.1987
9.அரசாணை (நிலை) எண் 186 வருவாய் துறை நாள்: 29.04.2003
10.மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிப்பேராணை என் 20186-2000 ல் வெளியிட்ட தீர்ப்பின்படியும்,
11.மாண்புமிகு உச்ச நீதிமன்ற சிறப்பு விடுப்பு மனு எண் 3109-2011 மற்றும் சிவில் மேல்முறையீட்டு எண் 1132-2011ஆகியவற்றின் மீது வழங்கப்பட்ட உத்தரவுகளின்படியும்,
12.மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிப் பேராணை எண் 26722-2013 மற்றும் பலவகை மனு எண் 1-2013 ன் மீது 11.08.2014 அன்று வழங்கப்பட்ட தீர்ப்புரையின் படியும்,
13.மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிப் பேராணை எண் 26722-2013 ன் மீது 08.10.2014 ன் படி வழங்கப்பட்ட உத்தரவின்படி அரசாணை (நிலை) எண் 540 வருவாய் (நி.மு.6(2) ) துறை நாள் 04.12.2014 ன் படியும்,
14.மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிப் பேராணை எண் 4614 -2015 இன் மீது 31.03.2015 அன்று வழங்கிய தீர்ப்புரையின்படியும்,
15.அரசாணை (நிலை) எண் 148 வருவாய் (நி.மு. 6(2) ) துறை நாள் 24.03.2016 ன் படியும்,
_________________ மாவட்டம் , _____________ வட்டம் , ______________ கிராமத்தில் உள்ள சர்வே எண் ______-ல் உள்ள __________ பொதுமக்களின் பொது பயன்பாட்டிற்கும் நீர் ஆதாரமாகவும் விளங்கி வருகிறது.
இது ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் அரசாணை எண் 540 -ன் படி ____________ மீட்டு தரும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நீண்டகால நீர்நிலை என்பதால் ஏரி குளங்களை மற்றும் அரசு சொத்துக்களை ஆக்கிரமிக்க அரசு அனுமதிக்கக்கூடாது என 30.10.2015 அன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் திரு S.K. கவுல் நீதியரசர் திரு. சத்தியநாராணா நீதியரசர் திரு. சிவஞானம் ஆகியோர் அமர்வு உத்தரவில் W.P.NO 1294/2009ல் கூறியுள்ளதை தங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
இந்தநிலையில் தமிழக அரசுக்குச் சொந்தமான நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி பார்வை 5-ல் காணும் அரசாணையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வட்டாட்சியருக்கு மனு செய்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மேலே குறிப்பிட்டுள்ள நீர்நிலைகள் மற்றும் அதன் நீர் வழி பாதைகளை உள்ள ஆக்கிரமிப்புகளை 1950ம் ஆண்டுக்கு முன் உள்ள வருவாய் பதிவேடு அளவுகளின்படி அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றிடக் கோருகிறேன்.
அரசாணை 540-ன் படி 60 தினங்களுக்குள் முழுமையாக அகற்றி நிலத்தடி நீர்மட்ட உயர்வும் சுற்றுச்சூழலைப் பேணி பாதுகாத்து அந்நீர் நிலைகளை பொதுமக்கள் கால்நடைகள் பயன்படுத்திட உரிய நடவடிக்கை எடுத்து அதன் விவரங்களை பதிவஞ்சலில் எனக்கு அளிக்குமாறு பொது நலம் கருதி கோருகின்றேன்.
தவறும் பட்சத்தில் உரிய நீதிமன்றத்தின் உதவியை நாடவுள்ளேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அரசியல் சாசன பிரிவு 51A ன் படிஇயற்கை வளங்களை மீட்டு பேணிக்காப்பது கடமையாக கருதுகிறேன்.
இப்படிக்கு.
60 நாட்களில் நடவடிக்கை இல்லையெனில் முதல் மேல் முறையீடு கோட்டாட்சியருக்கும், அடுத்த 30 நாட்களில் நடவடிக்கை இல்லையனில் இரண்டாம் மேல் முறையீடு மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்ப வேண்டும்.
மாவட்ட ஆட்சியரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை ( Writ) வழக்கு

நன்றி
- அம்பத்தூர் நீர் நிலைகள் பாதுகாப்பு இயக்கம்.

Friday, August 21, 2020

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்:

அருகம்புல்லும் பிள்ளையாரும்
*********************************
சுலபன் என்ற மன்னன் ஜம்பா என்ற தென்னா ட்டு நகரம் ஒன்றை பெருமையுடன் ஆட்சி புரிந்து வந்தான். அவனும் அவன் மனைவி சுபமுத்திரையும் தினமும் நகரில் நடைபெறும் கதாகாலட் சேபத்தைக் கேட்கச் செல்வதை வழ க்கமாகக் கொண்டிருந்தனர். ஒரு நாள் ஒரு கோயிலில் கதாகாலட்சேபம் நடக்கும் அரங்கி ல் ஏழை அந்தணன் ஒருவர் அமர்ந்திருந்தார்.

வறுமையின் கொடுமையினால் குறைந்த அளவு உடையுடனே அவர் காணப்பட்டார். தர்ம நெறியோடும், கருணையுள்ளத்தோடும் அரசாளும் மன்னன் அன்று ஏனோ விதியின் காரணமாக அந்த அந்தணரைப் பார்த்து சிரித்து விட்டார்.

மன்னரின் சிரிப்பால் மேலும் அவமானமடை ந்த அவர் கூனிக்குறுகி அந்த அரங்கத்தின் ஒரு மூலையில் போய் நின்றார். அந்த நிலை மன்னனை மேலும் சிரிப்புக் குள்ளாக்கியது. அதைக் கண்டு அந்தணருக்குக் கோபம் தலைக்கேறியது.

மன்னரைப் பார்த்து, 'ஏழ்மையில் வாழும் என்னைப் பார்த்து எள்ளி நகையாடும் அறிவு கெட்ட அரசே ! பல்லைக்காட்டி என்னைக் கேலி செய்ததால் நீ ஒரு எருதாக மாறக் கடவாய்' என்று சாபமிட்டு விட்டார். அடுத்த கணம் மன்னன் எருதாக உருமாறினான்.

தன் கணவர் எருதாக மாறியதைக் கண்ட அரசி அந்தணன் மீது கோபமுற்று, மன்னர் என்றும் பாராமல் கோபமுற்று 'என் கணவரை எருதாக மாறிட சாபம் கொடுத்த நீ பொதி சுமக்கும் ஒரு கழுதையாக மாறக் கடவாய்..' என்று சபித்தாள். அந்தணர் அடுத்த கணம் கழுதையாக மாறினார்.

கழுதையாக மாறினாலும் நெறி தவறாது அந்தணன் வாழ்ந்ததால் அவர் மீண்டும் அரசி யாரை புல் சுமக்கும் பெண்ணாக சபிக்கவே அவ்வாறே அரசியாரும் உருமாறினாள்.

புல் சேகரித்துக் கொண்டு ஒரு நாள் மாலை வீடு திரும்பும்போது காற்றும் மழையும் வேகத்தோடு துவங்கியது. மழையிலிருந்து தப்பிக்க அருகிலிருந்த ஆலயத்துக்குள் நுழை ந்தாள் புல் சுமக்கும் பெண்ணாகிய அரசி.

அதே கோயிலுக்குள் அடைக்கலம் பெற கழுதையான அந்தணரும், எருதாக மாறிய மன்னனும் நுழைந்தார்கள். புல்லைத் தின்று பார்ப்போமே என்றெண்ணி இருவரும் புல் கட்டை வாயைக் கொண்டு இருவருமாக அவிழ்த்தார்கள். சுவைத்து சற்று உண்டனர்.

அப்போது காற்று பலமாக வீச ஆரம்பித்தது. புல் கட்டிலிருந்த அருகம்புல் கோயிலில் அரு ளாட்சி புரியும் விநாயகர் மீது பரந்து சென்று விழுந்தது. அன்று விநாயக சதுர்த்தியாதலால் விநாயகர் சன்னதி திறந்திருந்தது. பெருங்கூ ட்டமும் சன்னதிக்கு முன்னால் இருந்தது.

பூஜை நேரத்தில் கோயிலுக்குள் நுழைந்த கழுதையையும், எருதையும் மக்கள் விரட்டி அடித்தனர். புல்கட்டையும் அவை இழுத்துச் சென்றதால் புல் சுமக்கும் பெண்ணும் கோயிலைச் சுற்றிச் சுற்றி வந்தாள். தன்னைச் சுற்றி சுற்றி வந்ததாலும், அவர்கள் மூலம் அருகம்புல் தன் மீது விழுந்ததாலும் விநாயகர் பேரானந்தம் கொண்டார்.

அம்மூவருக்கும் சுய உருவத்தை மீண்டும் அளி த்து அழகிய வாகனத்தில் தேவலோகத்திற்கு அழைத்துச் சென்றார். விநாயகருக்கு மிக உயர்ந்த நிவேதனங்களைப் படைக்க வேண்டி ய அவசியமில்லை. எல்லா இடத்திலும் கிடை த்திடும் அருகம்புல்லினால் மனதார அர்ச்ச னை செய்தால் போதும், எந்தத் தீவினையும் நீங்கி விடும் என்ற மாபெரும் தத்துவத்தை உணர்த்துகிறது இக்கதை..

Thursday, August 20, 2020

உலகில் சிறந்த 10 என்ஜிஓ நிறுவனங்கள்..!

1. விக்கிமீடியா அறக்கட்டளை விக்கிமீடியா 2003 ஆம் ஆண்டில் இணையத் தொழில் முனைவோர் ஜிம்மி வேல்ஸால் நிறுவப்பட்ட ஒரு அமெரிக்க அரசு சார்பற்ற நிறுவனமாகும். இந்த நிறுவனமானது அதன் தலைமையகத்தைச் சான் பிரான்சிஸ்கோவில் கொண்டுள்ளது. மேலும் 280 க்கும் அதிகமான மக்களைப் பணியில் அமர்த்தியுள்ளது மற்றும் 75 மில்லியன் அமெரிக்க டாலர் வருடாந்திர வருவாயைக் கொண்டுள்ளது. விக்கிமீடியா விக்கிபீடியா போன்ற வலைத்தளங்களைச் சொந்தமாகக் கொண்டுள்ளது. இது பன்மொழி மற்றும் பன்மொழி உள்ளடக்கத்தை உருவாக்கி இலவசமாக மக்களுக்கு விநியோகிக்கிறது. இந்த அறக்கட்டளை அனைத்துப் பெரிய பத்திரிகைகளாலும் உலகில் ஒரு சிறந்த அரசு சாரா நிறுவனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

2. க்யூர் வயலன்ஸ் க்யூர் வயலன்ஸ், முன்னர்ச் சீஸ்பயர் (Ceasefire) என அழைக்கப்படும் சிகாகோவை சேர்ந்த அமைப்பாகும். இது சமுதாயத்தில் வன்முறைகளைக் குறைப்பதற்காகவும், அதிக ஆபத்துள்ள நபர்களைக் கண்டறிந்து சமூக நெறிமுறையை மாற்றுவதற்கும் உலகம் முழுவதிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுகிறது. இந்த அமைப்பு 2000 ஆம் ஆண்டில் டாக்டர். கார்ரி ஸ்லட்கின் என்பவரால் சிகாகோ ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தில் நிறுவப்பட்டது. மேலும் நிறுவப்பட்ட முதல் ஆண்டிலேயே 67 சதவிகிதம் துப்பாக்கி சூடுகளைக் குறைத்துள்ளது. க்யூர் வயலன்ஸ் உலகின் சிறந்த அரசு சாரா நிறுவனமாகப் பாராட்டப்பட்டது.

3. அகுமன் உலகெங்கிலும் உள்ள வறுமை, உடல்நலம் மற்றும் பசி போன்ற சமூகப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தொழில் முனைவோர் அணுகுமுறையைப் பயன்படுத்தும் நோக்கத்துடன், 2001 ஆம் ஆண்டில் ஜாகுலின் நோவோக்ராட்ஸினால் அகுமன் நிதி நிறுவப்பட்டது. ஏழை மக்களுக்கு ஏற்ற நலன்கள் மற்றும் சேவைகளை விநியோகிக்கும் நிறுவனங்களுக்கு இது உதவுகிறது. அகுமன் ஆப்பிரிக்கா, பாக்கிஸ்தான், லத்தீன் அமெரிக்கா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றில் 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் 110 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளது. இந்த நிறுவனங்களின் முதலீடுகள் 100 மில்லியன் மக்களுக்கு நன்மை செய்கிறது. அகுமன் தனது தலைமை அலுவலகத்தை நியூயார்க் நகரத்தில் கொண்டுள்ளது. மேலும் இந்தியாவில், கொலம்பியா, சான் பிரான்சிஸ்கோ, பாக்கிஸ்தான், கென்யா மற்றும் கானா ஆகிய நாடுகளில் பிராந்திய அலுவலகங்கள் உள்ளது. 2015 ஆம் ஆண்டில், உலகின் முதல் 10 மிகச் சிறந்த இலாப நோக்கமற்ற நிறுவனங்களில் ஒன்றாக அகுமன் பெயரிடப்பட்டது.

4. ப்ராக் முன்னர்ப் பங்களாதேஷ் புனர்வாழ்வளிப்பு உதவிக் குழுவாக அறியப்பட்ட ப்ராக் (BRAC), 100,000 க்கும் அதிகமான ஊழியர்களுடன் உலகின் மிகப்பெரிய அரசு சாரா அமைப்பு ஆகும். ப்ராக் ஆனது 1972 ஆம் ஆண்டில் உலகிலிருந்து வறுமையை ஒழிப்பதற்கான ஒரு நோக்கத்துடன் நிறுவப்பட்டது. ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கக் கண்டங்களில் 14 க்கும் மேற்பட்ட நாடுகளில் ப்ராக் (BRAC) இடம்பெற்றுள்ளது. ப்ராக் (BRAC) சமூக நிறுவனங்கள் மற்றும் முதலீடுகளின் சொந்த வலைத்தளத்தின் மூலம் கிட்டத்தட்ட முற்றிலும் தன்னிறைவுடையது. இந்த அமைப்பானது, அரசு சாரா நிறுவனத்தின் தற்போதைய தலைவரான சர் பஸ்ஸெல் ஹசன் அபேட் அவர்களால் நிறுவப்பட்டது. இது உலகின் சிறந்த அரசு சாரா நிறுவனங்களில் ஒன்றாகும்.


5. கேர் இன்டர்நேஷனல் கேர் (CARE) என்பது ஒரு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனமாகும். இது உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், உலகளாவிய வறுமையை ஒடுக்குவதற்கும் மற்றும் பெண்கள் மீது கவனம் செலுத்தும் அமைப்பாகும். கேர் இன்டர்நேஷனல் 1945 இல் நிறுவப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான மனிதாபிமான உதவி நிறுவனங்களில் ஒன்றாகும். 94 க்கும் மேற்பட்ட நாடுகளில் கேர் வேலை செய்கிறது. 950 க்கும் மேற்பட்ட வறுமை-எதிர்ப்புத் திட்டங்கள் மற்றும் மனிதாபிமான உதவித் திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் 80 மில்லியன் மக்களுக்கு நேரடியாகவும், 256 மில்லியன் மக்கள் மறைமுகமாகவும் பயன் அடைந்துள்ளனர். கேர் அமைப்புப் பாதுகாப்பு அவசரநிலை, நீர் மற்றும் சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி, உணவு பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்துகிறது.

6. மெடிசின்ஸ் சான்ஸ் பிரான்டியர்ஸ் மெடிசின்ஸ் சான்ஸ் பிரான்டியர்ஸ் அமைப்பு 1971 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு சர்வதேச மனிதாபிமான அரச சார்பற்ற நிறுவனமாகும். இது ஒரு சிறு பிரெஞ்சு மருத்துவர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் குழுவால் நிறுவப்பட்டது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அதன் தலைமையகம் உள்ளது. இது எம்எஸ்எப் (MSF) என உலகின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக அறியப்படும் ஒரு மருத்துவ மனிதாபிமான அமைப்பாகும். இது கனடாவிலும் அமெரிக்காவிலும் எல்லைகளற்ற மருத்துவர்கள் என்று குறிப்பிடப்படுகிறது. இது 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் மருத்துவ உதவி வழங்குகிறது. இதில் 30,000 க்கும் அதிகமான செவிலியர்கள், மருத்துவர்கள், போக்குவரத்து வல்லுநர்கள், சுகாதாரம் மற்றும் நீர்வழி பொறியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் உள்ளனர். இது உலகின் சிறந்த 10 அரசு சாரா நிறுவனங்களில் ஒன்றாகும்.

7. மக்களுக்கு நீர் மக்களுக்கு நீர் (Water for people) என்பது அமெரிக்க அடிப்படையிலான அரசு சாரா அமைப்பு ஆகும். இது 1991 ஆம் ஆண்டில் அமெரிக்கன் நீர் வழங்கல் சங்கம் மூலம் நிறுவப்பட்டது. மக்களுக்கு நீர் அமைப்பானது வளரும் நாடுகளில் உயர்தரக் குடிநீர் மேம்பாட்டுக்காகவும் மற்றும் துப்புரவு சேவைகள், சுகாதாரம் மற்றும் சுகாதாரம் சார்ந்த கல்வித் திட்டங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காகவும் வேலை செய்கிறது. இந்த அமைப்பின் நோக்கம் என்னவென்றால், உலகில் யாரும் நீராலோ அல்லது துப்புரவு சேவைக்குறைப்பாட்டாலோ இறக்கக் கூடாது என்பதாகும். மக்களுக்கு நீர் அமைப்பு ஏற்கனவே 9 நாடுகளில் 4 மில்லியன் மக்களுக்குப் பாதுகாப்பான நீர் மற்றும் துப்புரவு வசதிகளை வழங்கியுள்ளது.

8. மெர்சி கார்ப்ஸ் 1979 ஆம் ஆண்டில் மெர்சி கார்ப்ஸ் நிறுவப்பட்டது முதல், உலகெங்கிலும் உயிர்காக்கும் உதவியில் $3.7 பில்லியனுக்கும் அதிகமாக வழங்கியுள்ளது. இந்த அரசு சாரா நிறுவனத்தின் நோக்கம் என்பது மக்கள் தங்கள் சமூகத்தை வலுப்படுத்துவதற்குத் தேவையான வளங்களை இணைப்பதன் மூலம் துன்பம், வறுமை மற்றும் அடக்குமுறையைத் தடுத்தல் ஆகும். இன்று சிரியா நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள 2.5 மில்லியன் மக்களுக்கு உதவுவதில் எட்டு நாடுகளில் அவர்களின் உறுப்பினர்கள் உள்ளனர்.

9. சர்வதேச மீட்புக் குழு சர்வதேச மீட்புக் குழு என்பது 1933 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் கோரிக்கையால் நிறுவப்பட்ட ஒரு சர்வதேச மனிதாபிமான அரசு சாரா அமைப்பாகும். இந்த அமைப்பு அகதிகள் மற்றும் போர் அல்லது இயற்கை பேரழிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி மற்றும் நீண்டகால உதவி வழங்குவதாக அறியப்படுகிறது. தற்போது 40க்கும் மேற்பட்ட நாடுகளில் வேலை செய்து உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு உதவுகிறது. இந்த அமைப்பு உலகில் முதல் 10 சிறந்த அரசு சாரா நிறுவனங்கள் என்ற எங்கள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

10. கிளின்டன் உடல்நலம் அணுகல் முயற்சிகள் கிளின்டன் உடல்நலம் அணுகல் முயற்சி (CHAI) அமைப்பானது உலகில் மிகவும் பிரபலமான அரசு சாரா நிறுவனங்களில் ஒன்றாகும். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனால் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு ஏராளமான சுகாதார மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் ஏழை மக்களுக்கு மலிவான விலையில் மருந்துகளை வழங்குகிறது. இந்த அமைப்பு 33 வளரும் நாடுகளில் வேலை செய்கிறது. மேலும் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் சிஎச்ஏஐ அணுகி பேச்சுவார்த்தை மூலம் விலை குறைப்புக்கள், மருந்துகள், மருத்துவச் சாதனங்கள், தடுப்பூசிகள் மற்றும் நோயறிதல்களைப் பெற முடியும். இந்த அமைப்பு தி குளோபல் பத்திரிகையால் பட்டியலிடப்பட்டுள்ளது.

நன்றி - https://tamil.goodreturns.in/

அசீசி (தொண்டு நிறுவனம்)

அசீசி என்பது இந்தியாவில் கேரளா மாநிலத்தைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஒரு தொண்டு நிறுவனமாகும். இது, வாழ்க்கையில் உற்றார், உறவினர்களை இழந்து தெருவோரங்களில் வாழ்ந்து வருபவர்களையும், சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவர்களையும் பாதுகாக்கும் நோக்கத்துடன் அசீசி அன்பு இல்லங்கள் எனும் பெயரில் சிறப்பு இல்லங்களை அமைத்து வருகின்றன.

அசீசி இல்லங்கள்

அசீசி தொண்டு நிறுவனம் மூலம் கேரளாவில் இடுக்கி மாவட்டத்திலும், தமிழ்நாடு மாநிலத்தில் தேனி மாவட்டத்திலும் அசீசி இல்லங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

கேரளா இல்லங்கள்

கேரளா மாநிலத்தில் கீழ்க்காணும் ஊர்களில் அசீசி அன்பு இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 


கட்டப்பனா
மூலமாற்றம்
குமுளி,
தோப்புராங்குடி
நரியம்பாரா
நெடுங்கண்டம்

 
கட்டப்பனா இல்லம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள கட்டப்பனா எனும் ஊரில் 1996 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அமைக்கப்பட்ட இந்த இல்லத்தில் 125 பயனாளர்கள் உள்ளனர்.

மூலமாற்றம் இல்லம்

கேரள மாநிலத்தில் உள்ள மூலமாற்றம் எனும் ஊரில் 1998 ஆம் ஆண்டு மே 31 ஆம் நாள் அமைக்கப்பட்ட இந்த இல்லத்தில் 100 பயனாளர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் பாலியல் பலாத்காரத்தால் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

குமுளி இல்லம்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலுள்ள குமுளி எனும் ஊரில் 2000 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதியில் அமைக்கப்பட்ட இந்த இல்லத்தில் 100க்கும் அதிகமான பயனாளர்கள் உள்ளனர். 

தோப்புராங்குடி இல்லம்

கேரள மாநிலம் தோப்புராங்குடி எனும் ஊரில் 2000 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதியில் அமைக்கப்பட்ட குழந்தைகளுக்கான இல்லத்தில் 50க்கும் அதிகமான குழந்தைப் பயனாளர்கள் உள்ளனர். 

நரியம்பாரா இல்லம்

கேரள மாநிலம் நரியம்பாரா எனும் ஊரில் 2000 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் தேதியில் அமைக்கப்பட்ட இந்த இல்லத்தில் பல பயனாளர்கள் உள்ளனர். 

நெடுங்கண்டம் இல்லம்

கேரள மாநிலம் நெடுங்கண்டம் எனும் ஊரில் அமைக்கப்பட்டுள்ள இல்லத்தில் 100க்கும் அதிகமான ஊனமுற்ற மற்றும் மனநிலை பாதிக்கப்பட்ட பயனாளர்கள் உள்ளனர். 

தமிழ்நாடு இல்லம்

தமிழ்நாட்டில் கீழ்க்காணும் ஊரில் அசீசி அன்பு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. 

வடபுதுப்பட்டி தேனி

 வடபுதுப்பட்டி இல்லம்தமிழ்நாட்டிலுள்ள தேனி மாவட்டம், வடபுதுப்பட்டி எனும் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள இல்லத்தில் 50க்கும் அதிகமான மனநிலை பாதிக்கப்பட்ட மற்றும் ஊனமுற்ற பயனாளர்கள் உள்ளனர்.

நன்றி -Wikipedia

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் & சுய உதவிக் குழுக்கள் :

திட்டங்கள்

மகளிர் திட்டம்
மத்திய நல்கை திட்டம் மகளிர் திட்டம்

மாநில அளவில, மகளிர் திட்டம் ஏழை மக்களைக் கொண்டு குழுக்கள் அமைத்து செயல்படுகின்றன. இத்திட்டம் பெண்களுக்கான சமூக பொருளாதார மேம்பாடு திட்டமாக, தமிழ்நாடு பெண் மாநகராட்சி மேம்பாடு நிறுவனத்தின் மூலம் இயக்கப்படுகிறது.



தமிழ்நாடு பெண் மேம்பாடு திட்டம் மகளிர் திட்டம் என்ற பெயரில் கிராம மற்றும் நகர பகுதிகளில் மாநில நிதியைக் கொண்டு 1.4.2000-ல் ஆறு முக்கிய நகரம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 10 லட்ச ஏழை பெண்களை கவர்ந்துள்ளது. மேலும் இத்திட்ம் ஏழை பெண்களி்ன பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக அந்தஸ்தை சுய உதவிக் குழுக்களை அரசு சாரா நிறுவன ஆதரவுடன் அமைத்து ஊக்குவிக்கின்றனர்.

தமிழ்நாடு மாநகராட்சி பெண்மேம்பாடு நிறுவம் (டிசம்பர் 9, 1983 ஆம் ஆண்டு) நிறுவன சட்டம் 1956-ன் படி () இணைக்கப்பட்டது. இவற்றின் பதிவு அலுவலகம்டிசன்னையில் அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின்முக்கிய நோக்கம் அனைத்து ஏழை பெண்கள் குறிப்பாக விதமைார்கள், ஆதரவற்றவர்கள், மூன்று ஆண்டுகளில் இணைக்கப்படுவர். இந்நிறுவனத்தின் முக்கிய தொற்றம் பாதெனில் வலிமையான சுய உதவிக் குழுக்களை 10 கிராம் பங்சாயத்து, வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் மாநிலங்களில் உருவாக்குதே ஆகும்.

மகளிர் திட்டம் தற்போதைய நிலை
3,58,251 சுய உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன
57,56,026 பெண்கள் உறுப்பினர்கள் ஆவர்
குழுவின் மொத்த சேமிப்பு தொகை ரூபாய் 161,569.03 ஆகும்
சுமார் 628 அரசு சாரா நிறுவனங்கள் பங்குதாரர்களாக உள்ளனர்
மூலதனம்

மகளிர் திட்டத்தின் கீழ் உள்ள திட்ட பணிகள்

மகளிர் திட்டத்தின் கீழ் சில முக்கயி திட்டங்கள் மற்றும் திட்ட பணிகள் பின்வருவன :
ஐஎஃப்ஏடி ஆதரவு அளிக்கும் தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு திட்டம்
பங்காரு அம்மையார் நினைவு மகளிர் திட்டம்
தொழில்வளர்ச்சி மேம்பாட்டு திட்டம்
வாழ்க்கை தொழில் மற்றும் திறம் மேம்பாட்டு திட்டங்கள்

திறமேம்பாடு பயிற்சியை அளித்து செயல்படுத்தப்படுகிறது. மேலும் வங்கிகளின் மூலம் நிதி உதவி, அடிப்படை , வசதிகள் மற்றும் விற்பனை ஆதரவுகளை தருவதாகும். இந்தியஅரசு மற்றும் மாநில அரசுகள் நிதிகளை 75:25 என்ற விகதத்தில் பங்கிட்டு கொள்கிறது.
ஐஎஃப்ஏடி தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு திட்டம் : இத்திட்டத்தை கீரிடத்தின் மேல் தங்கம் என்று கூறலாம். முதலில் வேளாண் மற்றும் நில திட்டமாக 1989 ஆம் ஆண்டு கூறப்பட்டது. அரசு சாரா நிறுவனத்தின் உதவியுடன் பெண்கள் முன்னேற்றத்திற்காக முனைந்து செயல்படுகிறது. இந்தியன் வங்கி கூட்டு செயலாளர்களாக சுமார் ரூபாய் 800 மில்லியன்களை கடனாக 9 வருடத்தில், 1,20,960 பெண்களைக் கொண்டு 5207 சுய உதவிக் குழுக்களை அளித்துள்ளது. இத்திட்டம் 3.12.1998 ஆம் ஆண்டு முடிவு பெற்றது.

பங்காரு அம்மையார் நினைவு மகளிர் திட்டம்

மேற்கூறிய திட்டத்தின வெற்றிக்கு அடுத்து. மாநில அரசு 1996-97 ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகளை அறிவித்துள்ளது. அவற்றின் மூலம் இத்திட்டத்தை மாநிலங்களில் அனைத்து கிராமப்புற மாவட்ட பகதிகளில் (சென்னையை தவிர) விரிவுபடுத்த தீர்மானித்துள்ளனர். 1996 ஆம் ஆண்டில் இத்திடம் விரிவுபடுத்தப்பட்டு, தற்பொழுது 28 கிராமபுற மாவட்டங்களில் செயல்படுத்தப்படுகின்றன.

தொழில்வளர்ச்சி மேம்பாட்டு திட்டம் :

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பெண்களுக்கு ஆதரவு அளிப்பதாகும். ஆயினும், வாரிய இயக்குனா்கள் தொழில்வளர்ச்சி திட்டங்களை பெண்களிடையே அறிமுகப்படுத்தி அவர்களை சுயமாகதொழில் மேற்கொள்ள உறுதுணை புரிகின்றனர்.

இத்திட்டம் 1989-99 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும். இத்தகைய திட்டங்களை சென்னை மற்றும் மதுரையில் தொழில் மற்றும் வர்த்தக நடத்துகின்றன.
வாழ்க்கைத் தொழில் மற்றும் திற மேம்பாட்டு திட்டம்: மாநகராட்சி வாழ்க்கை தொழில் மற்றும் திற மேம்பாட்டு திட்டங்களை அமுல்படுத்தியுள்ளனர். இத்திட்டத்திற்கு தேவையான நிதிகளை மாநில அரசு வழங்குகிறது.

மத்திய நல்கை திட்டம் :

சுவர்ண ஜெயந்தி கிராம் சுவரஜ்கார்யோஜனா () இத்திட்ம் ஏப்ரல் மாதம் 1999 ஆம் ஆண்டு, ஏழைகளின் வறுமையை ஒழிக்க சுய உதவிக் குழுக்களாக அமைத்து
சுய உதவிக்குழு – அடிப்படை வசதிகள்
பயிற்சி விற்பனை வாய்ப்பு வசதிகள்
வெகுமதிகள் விருதுகள்

சுய உதவிக் குழுக்களின் பங்கு

திட்டம் 1. : தமிழ்நாடு பெண்கள் மேம்பாடு திட்டமானது (மகளிர் திட்டம்) மற்ற அரசு திட்டத்திலிருந்து வேறுபடுகிறது. ஏனெனில் அவற்றை செயல்படுத்தும் முகரமான (அரசு சாரா நிறுவனம் மற்றும் வங்கிகள் ) பல விதமான கொள்கைகள், 4ட்டு மற்றும் முயற்சி மற்றும் திட்ட இலக்குகளை பற்றி தெளிவாக அறிய வேண்டிய கட்டாயம் உள்ளது.

தலைவர்கள், பிரதிநிதிகள், குழு அளவிலான பிரதிநிதிகள், குழு அளவிலான பிரதிநிதிகள் மேலும் புத்துணர்வு தரும் பயிற்சி மற்றம் பார்வை சுற்றுலா ஆகியவை இவற்றுள் உள்ளடக்கிய பயிற்சி ஆகும் அரசு சாரா நிறுவன ஊழியர்களுக்கும் சிறு சிறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

நன்றி -தவேப வேளாண் இணையதளம்

அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் தொடங்குவது எப்படி?

பல்கலைக்கழகம் / நிகர்நிலைப் பல்கலைக்கழகம், சங்கங்கள், அறக்கட்டளைகள், சேவை அமைப்புகள் ஆகியவை அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் (Non Government Organisation-NGO) என்று உலகம் முழுவதும் அழைக்கப்படுகின்றன.

மத்திய - மாநில அரசு ஆகியவற்றின் மொத்த செலவில் 60% இந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் செலவிடப்படுகிறது. இந்தியா முழுவதும் 44 லட்சம் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. அதில் 1.60 லட்சம் தொண்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

கல்வி, சட்ட ஆலோசனை, ஊனமுற்றோருக்கு உதவி, குழந்தைகள் / முதியோர் இல்லங்கள், குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு, எய்ட்ஸ் விழிப்புணர்வு, திறன் மேம்பாட்டு பயிற்சிகள், தொழில் முனைவோருக்கு ஆலோசனை, மருத்துவம், சொட்டு மருந்து, ரத்த தானம், உறுப்பு தானம், மருத்துவ முகாம்கள், மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப், சுய உதவிக் குழுக்கள், விவசாயிகளுக்குப் பயிற்சி/வழிகாட்டல், மகளிர் தொழில் முனைவோர் மேம்பாடு, ஆராய்ச்சி, சுய தொழில் பயிற்சிகள், கண்காட்சிகள், இயற்கை வேளாண்மை, விளையாட்டுப் போட்டிகள், இளைஞர் நலம், வேலைவாய்ப்பு முகாம்கள், மூளை வளர்ச்சி குன்றியோருக்கு உதவிகள்/மருத்துவ உதவி, கலை மேம்பாடு, நாட்டுப்புறக் கலைகளில் பயிற்சிகள், தொழில்களில் பயிற்சி / மேம்பாடு என 150க்கும் மேற்பட்ட பொதுச் சமூகப் பணிகள்/ சேவைகளை இந்த அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன.

மத்திய அரசு, மாநில அரசுத் துறைகள், நிறுவனங்கள், வாரியங்கள், பெரிய சங்கங்கள், அறக்கட்டளைகள், அகில இந்திய ஆராய்ச்சி மையங்கள், காமன்வெல்த் செயலகம், ஐக்கிய நாடுகள் சபை, உலக வங்கி, வெளிநாட்டு அரசுகள், சங்கங்கள், தூதரகங்கள் இந்த NGOக்களுக்கு ஆலோசனை, கடனுதவி, மானியம், பயிற்சிகள் என பல உதவிகளைச் செய்து வருகின்றன.

சமீபத்தில் பல தொண்டு நிறுவனங்கள் மீது புகார்கள் வந்ததைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட், சரிவரக் கணக்கு காட்டாத சங்கங்கள் கணக்கு காட்டவும், தங்கள் வருமான வரிப் பதிவை நீட்டிப்பு செய்யாத அறக்கட்டளைகளை ரத்து செய்யவும் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து மாநில அரசுகளும், வருமானத் துறையும் சரிவர இயங்காத நிறுவனங்களை ரத்து செய்து வருவதால், முறையாகக் கணக்குகளை பராமரிக்கும், சரியாக செயல்படும் சங்கங்களும், அறக்கட்ளைகளும் மிகச் சிறப்பாக அரசுகளின் உதவிகளைப் பெற்று பெரிய அளவில் பலருக்கும் உதவிவருகின்றன.

பல்லாயிரம் சங்கங்கள், ஜாதிச் சங்கங்கள், பல்வேறு பொருட்களைத் தயாரிப்போர் சங்கங்கள், வியாபாரிகள் சங்கங்கள், கல்விப் பணி, இலக்கியப் பணி மற்றும் ஊனமுற்றோருக்கான உதவிகளைச் செய்து வருகின்றன. பல்கலைக்கழகங்களைத் தொடங்குவது என்றால்தான் பல கோடிகள் செலவிட வேண்டும்.

ஆனால், இந்த சங்கங்கள் தொடங்க பதிவுச் சட்டப்படி (Indian Societies Registration Act 1982) பதிவு செய்ய சில ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும். மாவட்டப் பதிவாளரிடம் சென்று அதற்குரிய விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து குறைந்தது 9 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு ரூ.555 கட்டணம் செலுத்தினால் போதும் பதிவுச் சான்றிதழ் பெற்றுவிடலாம்.

இதை வைத்து சங்கத்தின் பெயரில் PAN கார்டு வாங்கி வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும். வருமான வரித் துறையில் பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் அது சரியான சங்கமாக செயல்பட முடியும். அனைவரின் உதவி, மானியம், நன்கொடை பெறலாம். ஒவ்வொரு வருடமும் மாவட்டப் பதிவாளரிடம் கணக்கு காட்டி சங்கத்தை புதுப்பிக்க வேண்டும்.

அதேபோல் அறக்கட்டளை தொடங்குவது மிக மிக எளிதாகும். அறக்கட்டளைகளில் குடும்ப அறக்கட்டளை, தனியார் அறக்கட்டளை, பப்ளிக் (Public) அறக்கட்டளை, சாரிட்டேபிள் அறக்கட்டளை என்று பல வகைகள் உண்டு. தொடங்க விரும்பும் நிர்வாக அறங்காவலர், தேவையான DEED எனப்படும் அறக்கட்டளை ஆவணத்தை வழக்கறிஞர் அல்லது ஆடிட்டர் மூலம் டைப் செய்து அறங்காவலர் வசிக்கும் பகுதிக்கான சார் பதிவாளரிடம் சென்று பதிவு செய்ய வேண்டும்.

பதிவு பெற்றதும், அந்த ஆவணத்தைக் கொண்டு PAN கார்டு அந்த ‘அறக்கட்டளை’ பெயரில் வாங்க வேண்டும். பின் அறங்காவலர் சேர்ந்து வங்கியில் கரன்ட் அக்கவுன்ட் தொடங்கி, பிறகு வருமான வரித்துறையில் 10A எனப்படும் பதிவு எண் பெற்று, ஒவ்வொரு வருட இறுதியிலும் கணக்கு காட்டி ரினிவல் செய்ய வேண்டும்.

85G சட்டப்படி வருமான வரி விலக்கும் பெறலாம். 150க்கு மேற்பட்ட சமூக சேவைகளை அறக்கட்டளை / சங்கங்களால் செய்ய முடியும். யாரும் இந்த NGOக்களைத் தொடங்கலாம். மேலும் இது பற்றி அறிய www.karmayog.org, www.nabard.org, www.tamilnaduwomen.com, www.ngosindia.com ஆகிய இணையதளங்களைப் பாருங்கள். 

நன்றி - குங்கும சிமிழ்

நீர்நிலைகளை தூர் வாரும் தமிழ்நாட்டு தனியார் தொண்டு நிறுவனம்

சென்னை

டிவிஎஸ் நிறுவனத்தின் ஸ்ரீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் என்னும் தொண்டு நிறுவனம் தமிழ்நாட்டிலும் மகாராஷ்டிராவிலும் பல நீர்நிலைகளை தூர் வாரி சுத்தப்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பல நீர்நிலைகள் தூர் வாறி சுத்தப் படுத்தப் படாமல் உள்ளது. இதனால் வண்டல்மண் அதிகரித்து மழைக்காலங்களில் இந்த நீர்நிலைகளில் முழு அளவு நீர் நிரம்புவது இல்லை. இதையொட்டி அரசு சில இடங்களில் தூர் வாறி வருகிறது. திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் கோவில் குளம் போன்ற இடங்களில் தூர் வாறி சுத்தம் செய்து வருகின்றன.

இந்நிலையில் தனியார் தொண்டு நிறுவனமான ஸ்ரீனிவாசன் சர்வீசஸ் டிரஸ்ட் நிறுவனமும் இந்தப் பணியை செய்து வருகிறது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் இயக்கி வரும் நிறுவனமாகும், இந்த தொண்டு நிறுவனம் இதுவரை தமிழ் நாட்டில் சுமார் 104 குளங்கள் மற்றும் ஏரிகளையும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 15ஏரிகளையும் தூர் வாறி உள்ளது.

இந்த தொண்டு நிறுவன தலைவர் அசோக் ஜோஷி, “ இந்தப் பணியின் மூலம் 9.35 லட்சம் டன் வண்டல் மண் அள்ளப்பட்டுள்ளது. இதனால் நீர்நிலைகளில் 26.66 கன அடி அதிகரித்துள்ளது. அதனால் மேலும் 75.492 கோடி லிட்டர் தண்ணீரை அதிகம் சேமிக்க முடியும். இது தமிழ்நாட்டுக்கு 90 நாட்களுக்கான தண்ணீர் தேவையின் அளவாகும்.
இவ்வாறு எடுக்கப்பட்ட வண்டல் மண்ணில் 69% நீர்நிலைக்ளின் கரைகளை பலப்படுத்தவும், மீதமுள்ள 31% விவசாயிகள் நிலத்தில் உபயோகிக்கவும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த தூர் வாறிய இடங்களில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் இதனால் 5 முதல் 7 அடி வரை உயர்ந்துள்ளது. எங்கள் பணி வரும் மார்ச் மாதத்துடன் முடிவடையும் என எதிர்பார்க்கப் படுகிறது” என தெரிவித்துள்ளார்

நன்றி PATRIKAI.COM

Friday, May 8, 2020

கிருஷ்ணர் ஏன் கீதையை அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தார்

அர்ஜுனனுக்கு ஏற்பட்ட எண்ணற்ற சந்தேகங்களுக்கு பகவான் கண்ணன் கூறிய விளக்கங்கள் கீதை என்ற புனித நூலாக மனித சமுதாயத்திற்குக் கிடைத்திருக்கிறது. கிருஷ்ணர் அந்த கீதையை உபதேசித்தது பற்றிய ஒரு சந்தேகத்தை அர்ஜுனன் கிருஷ்ணரிடம் எழுப்பினான். மனிதகுலம் முழுவதற்குமான மாபெரும் தத்துவச் சுரங்கமாக கீதையை சொல்ல ஏன் என்னை தேர்ந்தெடுத்தாய். பிதாமகர் பீஷ்மரிடம் சொல்லி இருக்கலாம். தத்துவ உபதேசங்களுக்குத் தகுதி வாய்ந்தவர் அவர். அண்ணன் யுதிஷ்டிரர் இருக்கிறார். ஐவரில் மூத்தவர் தர்ம நீதிகளை உணர்ந்தவர். அண்ணன் பீமன் மிகச் சிறந்த பக்திமான் பூஜா நியமங்களை ஒழுங்காகச் செய்து வருபவர். இவர்களை விட்டு என்னை புனித உபதேசங்களைக் கேட்கத் தகுதி உள்ளவனாக தேர்ந்தேடுத்தது ஏன் என்று அர்ஜுனன் கிருஷ்ணரிடம் கேட்டன்.

அர்ஜுனா நீ என்னோடு நெருங்கிப் பழகுபவன். என் மீது தோழமை கலந்த அன்புடன் இருப்பவன் என்பதால் நான் உனக்கு கீதையைச் சொல்லவில்லை. பீஷ்மர் அறங்கள் சாஸ்திரங்கள் அனைத்தும் உணர்ந்தவர். சாஸ்திரங்கள் உணர்வதால் மட்டும் ஒரு மனிதனுக்கு சிறப்பு வந்துவிடாது கடைப்பிடித்தால் தான் சிறப்பு. கௌரவர்கள் அதர்மம் புரிகிறார்கள் என்று தெரிந்தும் பீஷ்மர் அவர்கள் பக்கமே இருக்கிறார். அதேசமயம் பாண்டவர்களை தனியே பார்க்க நேரும் போது தர்மம் வெல்ல ஆசிர்வதிப்பதாகவும் கூறுகிறார். இது இரட்டை வேடம். எண்ணம் சொல் செயல் இவை ஒன்றாக எவனிடம் இணைந்திருக்கிறதோ அவனே உத்தமன். பீஷ்மர் அப்படிப்பட்டவராக இல்லை. யுதிஷ்டிரர் கீதை கேட்கத் தகுதியானவர் என்பது உன் எண்ணம். அவர் நல்லவர் தான். ஆனால் முன்யோசனை இல்லாதவர். தவறு செய்துவிட்டுப் பிறகு வருந்திக்கொண்டிருப்பது அவர் இயல்பு. யுதிஷ்டிரர் நீதியையும் தருமத்தையும் கடைப்பிடிப்பவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவரால் தக்க நேரத்தில் தன் கடமை என்னவென்று உணர இயலவில்லை. பீமன் அளவற்ற பலசாலி. பக்திமானும் கூட ஆனால் அவனிடம் மனோபலமும் இல்லை வீண் கோபத்தில் அவன் விளைவித்த விபரீதங்கள் அதிகம்.

அர்ஜுனா நீ இவர்களைப் போன்றவனல்ல மகாவீரன். அதிநுட்பம் வாய்ந்த அஸ்திர வித்தை பல கற்றவன் என்ற போதும்கூட நீ முன் யோசனை உள்ளவனாய் இருக்கிறாய். அதுதான் உன் தனிச்சிறப்பு. உன்னைவிட வயதான அறிவிலும் பெரியவர்களான பலரையும் மதித்து அவர்களுக்காக நீ என்னிடம் வாதிடுகிறாய். போர்க்களத்திலே நின்றபோதும் உற்றார் உறவினர் மதிப்பிற்குரிய பெரியோர்களையெல்லாம் எப்படிக் கொல்வது தேவைதானா இந்த யுத்தமும் இழப்பும் என்றெல்லாம் நீ யோசித்தாய். அத்தனை பேரையும் இழந்து அரசாட்சியைப் பெறுவதால் என்ன பெருமை இருக்க முடியும் என்று கலங்கினாய். பிச்சை எடுத்து வாழவும் நான் தயார் என்று என்னிடம் கூறினாய். நீ பதவி வெறியனல்ல. பழைய விரோதங்களுக்குப் பழி வாங்க வேண்டுமென்று முன்பு நினைத்திருந்தபோதும் களத்தில் அவர்களை மன்னித்து போரே வேண்டாம் என்று எண்ணுகிற உள்ளம் உன்னிடம் இருக்கிறது. ஓரளவு நீதி எது அநீதி எது என்று சிந்திக்கிறனாகவே நீ எந்த தருணத்திலும் இருந்திருக்கிறாய். நீதியான வழியில் நடக்க அனைத்தையும் தியாகம் செய்ய மனவலிமை தேவை. தன்னுடைய புனிதமான கடமையை உணர்பவனுக்குத்தான் கீதை கேட்கும் தகுதி உண்டு. இதெல்லாம் தான் நான் உனக்கு கீதையை உபதேசிக்கக் காரணங்கள் தனிச்சலுகை எதுவுமில்லை என்றார் கிருஷ்ணர். அர்ஜுனன் அகந்தை எதுவுமற்றவனாய் அடக்கத்தோடு ஸ்ரீகிருஷ்ணரை நோக்கி வணங்கி நின்றான்.

பிரம்ம முகூர்த்தத்தில் செய்யும் காரியங்கள் ஜெயமாகுமா?

பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணி வரை.

பெரும்பாலும் இந்துக்கள் தேதி, கிழமை, நல்ல நாள், யோகம் ஆகிய அனைத்தும் சரியாக இருந்தால் தான் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்குவார்கள். நல்ல நாள் கிடைத்தால், நல்ல நேரம் கிடைக்காது, அதனால் நாம் செய்ய நினைக்கும் காரியங்கள் அனைத்தும் ஏதாவது தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இவற்றைத் தவிர்க்க நாம் பிரம்ம முகூர்த்தத்தைத் தேர்வு செய்யலாம்.

அமாங்க....பிரம்ம முகூர்த்தத்தில் செய்வதாக இருந்தால் நல்ல நாள் பார்த்தால் மட்டும் போதும் நேரம் பார்க்க தேவையில்லை. எந்த ஒரு நல்ல காரியத்தையும் பிரம்ம முகூர்த்தத்தில் தொடங்கலாம். இந்த அதிகாலை நேரத்துக்கு அவ்வளவு மகிமை.

அதிகாலை வேலையில் எழுவது பல நன்மைகளைத் தரும் என்று சாஸ்திரங்களும், விஞ்ஞானமும் கூறுகின்றன. வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந்தடையும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்குப் புதுத்தெம்பையும், உற்சாகத்தையும் கொடுக்கின்றன.

கண்கள் ஆரோக்கியத்தையும், உடல் வலிமையையும் பெறுகின்றன. அதனால் தான், சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். சனிக்கிழமை அன்று அதிகாலை நேரத்தில் சனி பகவானுடைய கிரகண சக்தி பலம் பெற்றிருப்பதால், அன்றைய தினம் நல்லெண்ணெய் குளியல் செய்வது மிகவும் சிறப்புடையது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இந்த அதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படையும், ஆரோக்கியமாக இருக்கும். மனஅழுத்தம் இல்லாமலும், பரபரப்பில்லாமலும் காரியங்கள் சிறப்பாக முடியும். உடலுக்கும், உள்ளத்துக்கும் ஊட்டம் தருவது காலையில் கண் விழிப்பதாகும். உஷத்காலம் உஷஸ் என்னும் பெண் தேவதையைப்பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவள் தோன்றிய பின்பே சூரியன் உதயமாகிறான்.

இதனாலேயே விடியற்காலை நேரம் உஷத் காலம் எனப்படுகிறது. இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கிப்பாய்வதால் தான் அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுவது விஷேசமாக சொல்லப்படுகிறது. இதனால்தான் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாகக் காணப்படுகிறது. அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில்எழுந்திருக்க வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

தொழில் தொடங்குதல், கணபதி ஹோமம், கிரகப்பிரவேசம், திருமணம், என எந்த ஒரு காரியத்தையும் பிரம்ம முகூர்த்தத்தில் செய்யலாம். அது கட்டாயம் வெற்றியில் முடியும். கிரக தோஷம், ராகு, கேது தோஷம், களத்திர தோஷம் இருப்பவர்கள் தோஷ பரிகாரம் செய்வதுமட்டுமல்லாமல், இவர்களுக்கு அதிகாலை அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் செய்தால் தம்பதிகளுக்கிடையே பிரிவினை ஏற்படாது, அவர்களின் வாழ்வு சிறக்கும் என்று சாஸ்திரம் கூறுகிறது