Friday, November 4, 2016

திருவாசகம் முதல் வரி ஆச்சரிய தகவல்

திருவாசகம் தொடக்கமே அசத்தல் தான்...சிவபுராணம் பகுதி தான் முதல் பாடல். அதன் முதல் வரி...

நமச் சிவாய வாஅழ்க, நாதன் தாள் வாழ்க...

மிக எளிதாக தெரியும் வரி...வார்த்தைகள் - நம சிவாய வாழ்க(வா அழ்க என்பது ஏன்?), நாதன் தாள் வாழ்க...எல்லாம் தனியாகப் பார்த்தால் எளிதில் பொருள் புரியும்...

சிவபுராணம் என்பது அவர் சிவனின் அநாதி முறைமையை பாடுகிற பகுதி...

ஒரு விஷயம் தொடங்கும் போது...அவரைச் சொல்லாமல், (சிவனே நீ வாழ்க என்று, அப்பனே என்றோ சொல்லாமல்), நமச்சிவாய வாஅழ்க என்கிறார், வாதவூரர்.

நமசிவாய என்பது திருவைந்தெழுத்து, அல்லது பஞ்சாக்ஷரம் என சைவர்களால் போற்றி கொண்டாடப்படுவது. அதுவே அவர், இறைவனாரே. பஞ்சாக்ஷரம், ருத்ராக்ஷம், விபூதி(திருநீறு), அடியார்கள் - இவை சிவஸ்வரூபங்கள். சிவனாரே இந்த ரூபம் தாங்கி பூவுலகில் நம் பொருட்டு வலம் வருகிறார்.

வேதத்துக்கு இருதயம் போன்றது ஐந்தெழுத்து. நம் உடலுக்கு இருதயம் பிரதானம். மூளை செயல் இழந்தாலும், VEGETATED எனப்படும் நிலையில் உயிர் மட்டும் ஆவது இருக்கும், உடலில். ஆனால் இருதயம் பழுது பட்டாலோ...? மரணம் தான்.

நால்வேதங்களில் யஜுர் வேதம். அதன் நடுநாயகம் ஸ்ரீ ருத்ரம். அதற்கு மத்தியில் இருப்பது இந்த பஞ்சாக்ஷரம்.

'நமசிவாய ச சிவதராய ச'...

எல்லோராலும் வேதம் சொல்ல முடியாது? அதற்கென்று பயிற்சிகள், தீக்ஷை இருக்க வேண்டும். ஆனால், சிவநாமம் எல்லோராராலும் எங்கும் எப்போதும் சொல்லப் பட முடியும், சொல்லப் பட வேண்டும். தாயின் பெயரைச் சொல்ல எந்த பயிற்சி எந்த வகுப்புக்கு செல்ல வேண்டும்? அன்பு மேலீட்டால் வருவதற்கு குழந்தைகள் நமக்கு தானே உரிமை?

சிவப் பரம்பொருள் நாதாதீதம். சப்தத்துக்கும் அப்பாற்ப்பட்டது. பின், அதே பொருள் சப்த ரூபம் கொண்டு, நாத பிரம்மமாய், இருக்கிறது. பிரபஞ்சமே ஓசையில் தான் துவங்கிற்று...

ஓசை ஒலி எல்லாம் ஆனாய் நீயே...

மழை வர வருண ஜபம். அதே போல், அக்னி மந்திரம் என்று...மந்திரங்கள் சரியாக உச்சரிக்கப் படும் போது நமக்கு பலன்கள்... ஆதலால், வேதத்தின் உட்ப்பொருள் 'நமசிவாய' மந்திரம்...வேதப் பொருள்...

அதனை ஓதி உய்வு உற்ற பெருந்தகை... அதனை நம்மோடு பகிர்கிறார்...முதல் வார்த்தையிலேயே...

ஆத்மசாதகனுக்கு நாம ஜபம் மிக எளிதானது. ஆனால், மிக மிக அபரிமிதமான பலன்களைக் கொடுக்க கூடியது. எங்கேயும் எப்போதும், யார் வேண்டுமானாலும், பிற அலுவல்களுக்கு இடையேயும் இதனை ஓதிக் கொண்டே இருக்கலாம். இருக்க வேண்டும். மூச்சுக் காற்று போல...

அதாவது அறிவியலில் ஒன்று சொல்வார்கள். தெரிந்த ஒன்றில் இருந்து தெரியாத, புரியாத ஒன்றை நோக்கி போய், அதனை நிரூபிப்பது அல்லது பார்ப்பது என்பது போல...

தெரிந்த நாமம், விடாமல் பிடித்துக் கொண்டால், தெரியாத ரூபம்...நிச்சயம் தெரியும்...

ஒரு சின்ன விஷயம், நாம் எல்லோரும் அறிந்தது தான்...வங்கிக்கு சென்று " நான் தான்...., நான் தான்...." என்று தொண்டைத் தண்ணீர் வற்ற கத்தினாலும் பணம் கிடைக்குமா? அதுவே, ஒரு காசோலையில், உங்கள் கையொப்பம் இருந்தால், யார் போனாலும் கேள்வி கேட்காமல் பணம் கிடைத்து விடும். நீங்களே செய்ய முடியாததை, உங்கள் நாமம்(கையொப்பம்) செய்கிறதே, அது போல...

வீட்டில் நிறைய தங்கம் இருக்கும். கட்டியாக இருந்தாலும் மதிப்பு குறியாது. ஆனாலும், சங்கிலி, வளையல், தோடு என்று ஆபரணமாய் இருந்தால் தானே நாலு பேர் கூடும் விசேஷங்களுக்கு மாதரசிகள் போட்டு போக முடிகிறது...அது போலத் தான்...

கட்டிப் பொன் அவன், அணிப்பொன் அவன் திருநாமம்...

அதெல்லாம் சரி, நமசிவாய வாஅழ்க என்றால்?...

வா......ழ்க என்று சொல்ல பிரியப் பட்டாராம் பெருந்தகை...பார்த்தார், புதியதாக எதுவும் செய்வோம் என்று நீட்டி...வாஅழ்க என்று சொல்லிவிட்டார் என்று சொல்வார்கள் பெரியோர் சிலர்...

எப்போதும் நீண்டு நீடித்து இருக்கக் கூடியது. பிரபஞ்ச சத்தியம்....என்றும் நிலைத்து இருப்பது அவன் நாமம்...

வாதவூராருக்கு அப்படி ஒரு பிரியம்...நாமத்தின் மேல்...

ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற் காயிரம்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணங் கொட்டாமோ.

நமசிவாய வாழ்க....

No comments:

Post a Comment