Monday, November 14, 2016

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள இடங்கள்

மக்கள் நலன் கருதி குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை ஏற்கும் சலுகையை மத்திய அரசு மேலும் நீட்டித்துள்ளது.

ஐநூறு மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த 8 ஆம் தேதி அறிவித்தது. இந்த பழைய ரூபாய் நோட்டுகளை வங்கி மற்றும் அஞ்சலகங்களில் மாற்றிக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இருந்தும் இந்த தீடீர் அறிவிப்பால் மக்கள் தங்கள் அத்யாவசிய தேவைகளுக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் பழைய ரூபாய் நோட்டுகளை இன்று (நவ.14) வரை பெட்ரோல் பங்க்குகள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தலாம் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் இந்த கால அவகாசத்தை நீட்டித்து வரும் 24 ஆம் தேதி வரை பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.

அதன்படி, பால் விற்பனை நிலையங்களில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வழங்கலாம். இதே போல ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள்,‌ விமான நிலையங்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துகளிலும் பழைய ரூபாய் நோட்டுக்களை வழங்கி பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்ப‌ட்டுள்ளது.

வீடுகளுக்கான மி்ன்சார கட்டணங்கள், சிலிண்டர் கட்டணங்கள், உள்ளாட்சிகளுக்கான வரிகளையும் பழைய ரூபாய் நோட்டுகளில் செலுத்தலாம். ‌ மருத்துவர் பரிந்துரை சீட்டுகளுடன் ‌அரசு மற்றும் தனியார் மருந்துக்கடைகளில் பழைய நோட்டுகள் ஏற்கப்படும். இடுகாடுகள், சுடுகாடுகள் ஆகிய இடங்களிலும் 24ம் தேதி நள்ளிரவு வரை பழைய 500, 1000 ரூபாய் ஏற்றுக் கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதேபோல நாடுமுழுவதும் உள்ள சுங்கச் சாவடிகளில் வரும் 18 ஆம் தேதி வரை பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தலாம் என மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment