Monday, September 4, 2017

பரிகாரம் என்றால் உண்மையில் என்ன என்று தெரியாதவர்களுக்கு இந்தக் கதை

*“எல்லா பரிகாரமும் செஞ்சிட்டோம். ஒரு பிரயோஜனமும் இல்ல. எதுவும் நடக்கலே.. இதுக்கு மேல என்ன செய்றதுன்னே புரியலே…”* – பல நேரங்களில் ஜோதிட ஆலோசனைகளின் பேரிலும் அல்லது தோஷங்களுக்காக பரிகாரம் செய்பவர்கள் மனதிலும் தோன்றும் விரக்தி இது !

அவர்களுக்கு மட்டுமல்ல !
பரிகாரம் என்றால் உண்மையில் என்ன என்று தெரியாதவர்களுக்கு இந்தக் கதை !

*ஒரு ராஜா காட்டுக்கு வேட்டையாட சென்றார்.*
நேரம் போனது தெரியாமல் வேட்டையாடிக் கொண்டிருக்கும் போது மாலை நேரமாகி எங்கும் இருள் கவ்வத் தொடங்கியது !

அப்போது தூரத்தில் தெரிந்த ஒரு மரத்தின் மீது ஏதோ ஒரு மிருகம் அமர்ந்திருப்பதை போல இருந்தது.
மிகப் பெரிய உருவமாக இருந்தபடியால் *ஏதேனும் கொடிய மிருகமாகத் தான் இருக்கவேண்டும்* என்று கருதி, மரத்தை நோக்கி வில்லெய்தான் அரசன் !

அடுத்த சில வினாடிகளில் மரத்தின் மீதிருந்து *“ஐயோ… அம்மா”* என்ற குரல் கேட்டது.

ஏதோ ஒரு மிருகத்தின் ஓலம் கேட்கும் என்று எதிர்பார்த்தால் இப்படி மனிதனின் ஓலம் கேட்கிறதே… *யாரையோ தவறுதலாக கொன்று விட்டோமோ* என்று அஞ்சி மரத்தை நோக்கி விரைந்தான் அரசன் .

*அங்கு சென்று பார்த்தால் இருபது வயதையொத்த இளைஞன் ஒருவன் இவரின் அம்புக்கு பலியாகி வீழ்ந்து கிடந்தான்.*

*“இப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்துவிட்டதே”* என்று பதைபதைத்த அரசன், உடனே காவலாளிகளை கூப்பிட்டு, *“இவனுடைய பெற்றோர் அருகேதான் எங்காவது இருக்கவேண்டும். உடனே கண்டுபிடித்து அழைத்து வாருங்கள்”* என்று கட்டளையிட்டான்.

வீரர்கள் நாலாபக்கமும் விரைந்தனர்.

கடைசியில் ஒரு விறகுவெட்டும் தம்பதியினரை அழைத்து வந்தனர்.

*“இவர்கள் தான் அந்த இளைஞனின் பெற்றோர். காட்டில் விறகு வெட்டி பிழைப்பது தான் இவர்கள் தொழில்”* என்று மன்னனிடம் கூறினார்கள்.

மன்னன் அவர்களிடம் நடந்ததைக் கூறி, *“என்னை மன்னித்து விடுங்கள். நான் வேண்டுமென்று உங்கள் மகனை கொல்லவில்லை. அறியாமல் நடந்த தவறு இது.* போதிய வெளிச்சம் இல்லாததாலும் தூரத்திலிருந்து அம்பெய்ததாலும் மரத்தின் மீதிருந்தது ஏதோ ஒரு விலங்கு என்று எண்ணிவிட்டேன்….”

தான் சொன்னதைக் கேட்டு *அவர்கள் சமாதானாகவில்லை என்று யூகித்துக்கொண்டான் அரசன் .*

அடுத்தநொடி கைதட்டி தனது காவலர்களை அழைத்தவன் இரண்டு பெரிய தட்டுக்கள் கொண்டு வருமாறு கட்டளையிட்டான்.

அருகே நின்றுகொண்டிருந்த *அமைச்சரிடம், இரண்டு தட்டுக்களை அவர்கள் முன்பு வைக்கச் சொன்னான்.*

தட்டுக்கள் வைக்கப்பட்டபிறகு *அதில் ஒரு தட்டில் பொற்காசுகளை கொட்டி தான் அணிந்திருந்த விலைமதிப்பற்ற ஆபரணங்கள் நகைகள், நவரத்தின மாலை, முத்தாரம் என அனைத்தையும் வைத்தான்.*

*பின்னர் தன் இடுப்பிலிருந்த உடைவாளை உருவி, அதை மற்றொரு தட்டில் வைத்தான்.*

“மக்களை காக்கவேண்டிய நானே எனது குடிமகன் ஒருவன் உயிரிழக்க காரணமாகிவிட்டேன். நான் தண்டிக்கப்படவேண்டியவன். *பாதிக்கப்பட்ட உங்களிடமே தீர்ப்பை கூறும் வேலையை விட்டுவிடுகிறேன்.*

*நான் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் (பரிகாரம்) இது தான். இதோ ஒரு தட்டு நிறைய பொற்காசுகள் விலைமதிப்பற்ற ஆபரணங்களும் இருக்கின்றன.*
*அவற்றை எடுத்துக்கொண்டு என்னை மன்னியுங்கள்.*

*அப்படி மன்னிக்க விருப்பம் இல்லை என்றால், மற்றொரு தட்டில் இருக்கும் உடைவாளை எடுத்து என்னை வெட்டி வீழ்த்தி உங்கள் மகனைக் கொன்றதற்கு பழி தீர்த்துக்கொள்ளுங்கள்..”* என்று தனது கிரீடத்தை கழற்றி மந்திரியிடம் கொடுத்து *அந்த பெற்றோர் முன்பு மண்டியிட்டு அமர்ந்தான் அரசன்.*

*உடன் வந்த காவலர்களுக்கும் மந்திரி பிரதானிகளும் நடப்பதை பார்த்து திகைத்துப் போய் நின்றனர்.*

அந்த விறகுவெட்டி நம் மன்னனை வெட்டிவிட்டால் என்ன செய்வது? மக்களுக்கும் மகாராணியாருக்கும் என்ன பதில் சொல்வது… செய்வதறியாது திகைத்துப் போய் நின்றனர்.

சில நிமிட மௌனத்திற்கு பிறகு விறகுவெட்டி பேச ஆரம்பித்தான்….! *“ஒன்று நான் இந்த ஆபரணங்களையும் பொற்காசுகளையும் எடுத்துக்கொள்ளவேண்டும். அல்லது மன்னரை கொல்ல வேண்டும்… அப்படித்தானே…?*

நான் எதைச் செய்யப் போகிறேன் என்று அறிந்துகொள்ள அனைவரும் படபடப்புடன் காத்திருக்கிறீர்கள் சரி தானே?

*நான் விரும்புவது இந்த பொற்காசுகளையோ ஆபரணங்களையோ அல்ல… என் மகனே போய்விட்டபிறகு இவற்றை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன்..?”*

'ஐயோ அப்படியென்றால் இவன் மன்னரை கொல்லப்போகிறான் போலிருக்கிறதே…' எல்லாரும் வெடவெடத்து போனார்கள்.

விறகுவெட்டி தொடர்ந்தான் ! *“நீங்கள் நினைப்பது போல நான் மன்னரைக் கொல்ல விரும்பவில்லை.* *அவர் அளிக்கும் பொன்பொருளையும் விரும்பவில்லை. நான் விரும்பியது எதுவோ அது கிடைத்துவிட்டது.* *தான் செய்த தவறு குறித்து மன்னர் மனம் வருந்த வேண்டும் என்று விரும்பினேன்.*

*_அவரோ வருந்திக் கண்ணீர் விட்டதோடு பெருந்தன்மையாக தனது உயிரையும் பதிலுக்கு தியாகம் செய்ய துணிந்துவிட்டார். அது ஒன்றே எனக்கு போதும்._*

*மன்னரை தண்டிப்பதால் என் மகன் எனக்கு மீண்டும் கிடைக்கப் போவதில்லை. ஆனால், இந்த நாடு ஒரு நல்ல மன்னனை இழந்துவிடும்.*
*நான் அப்படி செய்தால் என் மகனின் ஆன்மாவே என்னை மன்னிக்காது.*

அதே நேரம் நான் பொன்னையும் பொருளையும் பெற்றுக்கொண்டால் *என் மகனின் உயிருக்கு நான் விலைபேசியது போலாகிவிடும்.* மன்னர் *தான் செய்த தவறுக்கு உளப்பூர்வமாக மனம் வருந்தி சிந்திய கண்ணீரே போதுமானது…* எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம்” என்று கூறி தன் மனைவியை அழைத்துக்கொண்டு தன் வழியே போய்விட்டான் விறகுவெட்டி.

ஒரு விறகுவெட்டிக்கு இப்படி ஒரு பெருந்தன்மையா, இப்படி ஒரு ஞானமா என்று வியந்துபோனார்கள் அனைவரும்.

*அந்த மன்னன் தான் நாம்.*

*நாம் செய்யும் பாவங்கள் தான் அந்த கொலை.*

*அந்த விறகுவெட்டி தான் இறைவன்.*

*இப்போது புரிகிறதா எப்படிப்பட்ட மனதுடன் பரிகாரம் செய்யவேண்டும் என்று.*

நாம் செய்யும் பரிகாரங்களை எல்லாம் இறைவன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசியம் அவனுக்கில்லை. *ஆனால், நாம் என்ன நினைத்து பாவமன்னிப்பு கேட்கிறோம், அதற்கு ஈடாக என்ன பிராயச்சித்தம் செய்கிறோம் என்பது இங்கே மிகவும் முக்கியம்.*

நீங்கள் எந்திரத்தனமாக செய்யும் எந்த பரிகாரமும் பலன் தரவே தராது.

நீங்கள் எத்தனை கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் சரி…!
எத்தனை லட்சங்களுக்கு திருப்பணிகள் செய்தாலும் சரி !

*பாவத்திற்கு மனம்திருந்தி கண்ணீர்விட்டு மன்னிப்பு கேட்டாலொழிய உங்களுக்கு பாவமன்னிப்பு (பரிகாரம்) என்பது கிடையாது !*

*மன்னன் அந்த விறகுவெட்டி முன்பு தன்னை ஒப்படைத்த மனநிலையில் இருந்து பரிகாரம் செய்யுங்கள் ! அதுமட்டுமே பலன்தரும் !*

No comments:

Post a Comment