Monday, December 3, 2012

'தண்ணி'யில இவ்ளோ விஷயம் இருக்கா?

அந்த நடைபாதையில் ஒருவன் தள்ளாடி தள்ளாடி நடந்துக்கொண்டே சென்றான்.

"யோவ் தண்ணி வண்டி.. உனக்கு எத்தனை தடவைதான்யா சொல்றது.. தண்ணி அடிகாத.. தண்ணி அடிக்காத.."ன்னு....என்று செல்லமாக கடிந்துகொண்டே அவனை பத்திரமாக அழைத்துச் செல்வதில் முற்பட்டாள் அவனுடைய மனைவி.

"அடேய்.. இவளே.. என்னை தண்ணி வண்டி.. தண்ணி வண்டின்னு சொல்றியே.. தண்ணியோட மகிமையைப் பத்தி உனக்கு என்னாடி தெரியும்..? " என்று உளற ஆரம்பித்தான்...
"ம்க்கும்...இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.." என்று அலுத்துக்கொண்டாள் அவள்.

"இந்த பிரபஞ்சத்திலேயே ஒரே ஒரு பொருளுக்குத்தான் அதி முக்கியத்துவம் இருக்கு.  அந்த பொருள் இல்லேன்னா... இந்த உலகத்தில எதுவுமே நடந்திருக்காது. அப்பேர்பட்ட முக்கியமான அந்த பொருள் என்ன சொல்லுப் பார்க்கலாம்.. " என்றான்..

"இது கூட தெரியாதா? காத்து..... காத்து இல்லேன்னா மனுஷன் மூச்சு விடமுடியாம செத்துடுவான்." என்றாள்.

"நீ சொல்றதும் ஒருவகையில் சரிதான்...ஆனால் இந்த காத்து பிரபஞ்சத்துல நிறைய கோள்கள்ல இருக்கு..."

"நீயே சொல்லிடுய்யா...எனக்கு தெரியல.."

"தண்ணிதான் அந்த முக்கியமான பொருள்..தெரிஞ்சுக்கோ...

இதுவரைக்கும் வானவியல் அறிஞர்கள் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடிச்சிருக்காங்க.. நிறைய கோள்களை கண்டுபிடிச்சிருக்காங்க.. ஆனால் எந்த ஒரு கோளிலும் தண்ணி இருக்கிறதா இன்னும் உறுதி செய்யல...

ஏன்..இப்ப சமீபத்தில செவ்வாய்ல கியூரோசிட்டி விண்கலம் அனுப்பின தகவல்கள் கூட செவ்வாயில் தண்ணி இருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கான்னு அவங்களால உறுதிப்படுத்த முடியல..

இப்படி ஒவ்வொரு கிரகத்திலேயேயும் போய்பார்த்தால்.. அங்க காத்து இருக்கு. வெப்பம் இருக்கும்.. மண் இருக்கு.. மலை இருக்கு.. ன்னு சொல்றாங்களேத் தவிர, பூமியைத் தவிர எந்த கிரகத்திலேயே தண்ணி இருக்கிறதா சொல்ல்ல.. " புரிஞ்சுக்கோ.. என்கிறார் தள்ளாடியபடியே...

"போய்யா போ.. நீ சொல்ற இந்த தத்துவமெல்லாம் குடும்பம் நடத்தறதுக்கு உதவுமா..இன்னைக்கு பொழப்பு போச்சே..."

"பொழப்பு ஒன்னும் போகல.. நான் சொல்றதை மட்டும் கேளு... இந்த தண்ணி இருக்கே.. தண்ணி.. அந்த தண்ணி இல்லேன்னா... நீயும் இல்லை.. நானும் இல்லை.. தெரியுமா?"

"அட.. என்னய்யா சொல்றே.. எனக்கு ஒன்னும் விளங்கலயே..."

"ஆமாண்டி.. இந்த தண்ணி மட்டுமில்லன்னா.. இந்த பூமியில எந்த உசிரும் பொறந்திருக்காது.. "

"என்னய்யா சொல்ற.. தண்ணியா எல்லார்த்தையும் பெத்தது...? எனக்கு சிரிப்புதான்யா வருது.."

"அடேய் மடச்சி.. இது சிரிக்கிற விஷயமில்லடி.. சிந்திக்கிற விஷயம்.."

"முதல் முதல்ல ஒரு உசிரு தண்ணியிலதான் உருவாகிச்சு தெரியுமா? அதை ஒரு செல் உயிரின்னு சொல்வாங்க.. இப்படியே ஒவ்வொன்னா ஒவ்வொன்னா உருவாகி.. அப்புறம் தண்ணியிலிருந்து வெளியேறி..தரைக்கு வந்ததும் சில உயிர்கள் வாழ ஆரம்பிச்சிச்சு.. "

"ம்ம்..ம்ம்.... நீ சொல்றது எனக்கு கொஞ்ம்கூட விளங்கல.."

"உனக்கு விளங்காம இருக்கிற வரைக்கும் எனக்கு நல்லது..நான் சொல்றதை மட்டும் நீ கேட்டுக்க.. இப்படியே ஒவ்வொன்னா உருவாகி.. உருவாகி.. அது இருக்கிற சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அதனோட உடலமைப்பும் மாறிடுச்சு..

அந்த சூழ்நிலையில அதுக்கு கிடைக்கிற உணவை மட்டுமே உண்ண ஆரம்பிச்சது... எந்த சூழ்நிலையில இருந்ததோ... அந்த சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அது மாமிச உண்ணியாகவோ, தாவர உண்ணியாகவோ மாறிடுச்சு..."

அதே போல முதன்முதல்ல உருவாகினது தாவரம்தான். தாவரங்களுக்கும் அப்படியேதான்.. தான் எந்த சூழல்ல இருக்கோ.. அந்த தட்ப வெப்ப நிலையிலோ இருக்கோ.. எந்த நிலப்பகுதியிலோ இருக்கோ.. அதுக்கு தகுந்த மாதிரி தன்னை மாத்திக்கிடுச்சு..

இப்படியே ஒண்ணிலிருந்து ஒண்ணு ஒண்ணிலிருந்து இன்னொன்னுன்னு.. மாறி மாறி இந்த பூமியில.. பல லட்சக்கணக்கான உயிர்கள் உருவாகிடுச்சு.. "

"நீ சொல்றது நிசமாய்யா... பொய்யில்லையே..."

"உண்மையாதான் சொல்றேன்டி.. இந்த தண்ணி மட்டுமில்லேன்னா.. இந்த பூமியே மற்ற கோள்கள் மாதிரி.... வெறும் நிலமாகவும், காத்தாகவும்தான் இருந்திருக்கும்.. உயிர்கள் எதுவும் வந்திருக்காது..."

"அட.. நீ பெரிய புத்திசாலிய்யா...ஆனால் இந்த புத்திசாலித்தனத்தை கொஞ்சம் குடும்பத்துக்கும்..."

"உண்மை தெரியாம நீ உளறாதடி.. இன்னைக்கு வேலை கொஞ்சம் அதிகம்..கூட வேலை செய்த நண்பன்.. அளவுக்கு அதிகமா குடிக்க முயற்சிப் பண்ணினான்.. நான் பாட்டிலை பிடுங்கும்போது என்மேலயும் அது ஊத்திடுச்சு.. அதுதான்... அந்த வாசம்தான் என்மேல அடிக்குது.. இங்கே பாரு.." என்று ஊதினான்..

வாயிலிருந்து மதுவாடை வரவில்லை.

"அப்போ தள்ளாடி தள்ளாடி வந்தியே...எப்படி...?"

"ஓ..அதுவா.. கொஞ்சம் கீழே குனிஞ்சு என் பாதத்தைப் பாருடி..."

"அய்யய்யோ.. என்னய்யா இது...இவ்வளவு பெரிய கட்டுப் போட்டிருக்க.. எப்படி ஆச்சு..."

"அதுவா.. நான் மது பாட்டிலை அவன்ட்ட இருந்து பிடுங்கும்போது என் கால்மேலே விழுந்து நொறுங்கி என் காலை பதம்பார்த்துடுச்சு...இரண்டு நாள்ல சரியாகிடும்...நீ கவலைப்படாதே.." என்று சிரித்துக்கொண்டே வீடுபோய் சேர்ந்தார்கள்..

No comments:

Post a Comment