Friday, November 23, 2012

காசி யாத்திரையின் மகிமை

ஹிந்துக்கள் தம் வாழ் நாளில் அவசியம் ஒருமுறையாவது காசிக்கு சென்றாக வேண்டும். ஆனால், யாத்திரையின் நோக்கம் அறிந்து சென்று வந்தால் தான், முழு பலனும் கிடைக்கும். இல்லாவிட்டால், வியாசருக்கு ஏற்பட்ட நிலை தான் நமக்கும்! அது என்ன என்கிறீர்களா?

"காசி என்றால், ஒளிமிக்க நகரம், அங்கிருப்பவர்களும், வருபவர்களும், சாதுக்களுக்கு தானதர்மம் செய்வர். அங்கே, பசி என்பதே கிடையாது...' என்று பலர் கூறக் கேட்டார் வியாசர். இதெல்லாம் உண்மை தானா என்று சோதித்து அறிய, சீடர்களுடன் புறப்பட்டார். அங்கு சென்று, ஒரு வாரமாகியும், ஒருவர் கூட வியாசருக்கோ, சீடர்களுக்கோ பிச்சை அளிக்கவில்லை. யார் வீட்டுக்குப் போனாலும், முகத்தில் அறைந்தாற் போல், கதவை அடைத்தனர். வியாசருக்கு கோபம் வந்துவிட்டது. பெரிய ரிஷி அல்லவா!

"ஏ காசி நகரே...' என ஆரம்பித்து, அவ்வூருக்கு சாபம் விடுக்க வாயெடுத்த போது, அங்கே நின்ற ஒரு பெண், அவரைப் பேச விடாமல் தடுத்தாள்.

"முனிவரே... அவசரம் வேண்டாம், இன்று என் வீட்டுக்கு சாப்பிட வாருங்கள்...' என்று அழைத்தாள். வியாசரும், சீடர்களும் அவளுடன் சென்றனர். இலை போட்டு, தண்ணீர் மட்டும் வைத்தாள்.

"உம்... சாப்பிடுங்க...' என்றாள் அந்தப் பெண்.

வியாசருக்கு இன்னும் கோபம். "இலையில் ஒன்றுமே வைக்காமல், சாப்பிடு என்றால்... எங்களை கேலி செய்கிறாயா?' என்று கடிந்தார். அவர் பேசி முடிப்பதற்குள், இலையில் ருசியான பதார்த்தங்கள் வந்து அமர்ந்தன. எப்படி வந்தது என்றே தெரியவில்லை. ஆச்சரியத்துடன் எல்லாரும் பசியாறி விட்டு பார்த்த போது, அங்கே அன்னபூரணியும், காசிவிஸ்வநாதரும் காட்சியளித்தனர்.

"வியாசரே... நீங்கள் காசியை பற்றி, பிறர் சொல்வதைக் கேட்டு சோதித்துப் பார்க்கத்தான் இங்கு வந்தீர்களே தவிர, காசி யாத்திரையின் நோக்கத்தை மறந்து விட்டீர்கள். இங்கு வருவதன் நோக்கமே, பாவங்களைப் போக்கி, பிறப்பற்ற நிலை பெறத்தான். ஆனால், தாங்கள் சாதாரண விஷயம் ஒன்றைச் சோதிக்க வந்ததால், நீங்களும் சோதிக்கப் பட்டீர்கள்...' என்றனர்.

அதன்பிறகே, தான் செய்த தவறை உணர்ந்தார் வியாசர்.

காசி யாத்திரை அவசியம் செல்ல வேண்டும். ஒவ்வொருவரின் நோக்கமும், அதுவாக இருக்க வேண்டும். ஆனால், பிறவியை வேரறுப்பதே யாத்திரையின் நோக்கம் என்பதை லட்சியமாகக் கொண்டு சென்றால் தான், யாத்திரை சென்றதன் பலனை அடைய முடியும்.

No comments:

Post a Comment