Saturday, November 24, 2012

குழந்தைகள் வருமானம் குடும்பத்துக்கு அவமானம்

பெரியசாமி, சோலையம்மாள் ஏழைத் தம்பதிகள். இவர்களுக்கு சுரேஷ், மங்கையர்க்கரசி என்று இரண்டு குழந்தைகள். பெரியசாமி கூலி வேலைக்காரர். வருமானம் குடும்பச் செலவுக்கு மட்டும் சரியாக இருக்கும்.

அவர்களுக்கு பக்கத்து வீட்டில் பரமசிவன்- பார்வதி என்ற இன்

னொரு குடும்பம் வசித்து வந்தது. அவர்கள் இரக்க குணம் உடையவர்கள். அவ்வப்போது பெரியசாமிக்கு தேவையான உதவிகளை செய்து வருவார்கள்.

இப்படியாக நாட்கள் ஓடின. திடீரென்று பெரியசாமி நோய்வாய்ப்பட்டார். எழுந்து நடமாடக் கூட முடியவில்லை. மருத்துவச் செலவுக்கும் பணமில்லை. குடும்பச் செலவுக்கும் காசு இல்லை. பரமசிவம் கொஞ்சம் உதவி செய்தார். இருந்தாலும் பெரியசாமி குடும்பம் வறுமையில் வாடியது.

சுரேஷும், மங்கையும் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குச் செல்ல முடிவு செய்து தாய்- தந்தையிடம் அனுமதி கேட்டனர்.

"அப்பா, நாங்கள் தீப்பெட்டி கம்பெனியில் சேர்ந்து குடும்பத்தை கவனித்துக் கொள்கிறோம்.''

அதைக் கேட்ட பெரியசாமியும், சோலையம்மாளும் அதிர்ச்சி அடைந்தனர்.

படுத்த படுக்கையிலிருந்தே பெரியசாமி பேசினார்.

"இங்கே பாருங்க கண்ணுகளா! நான் சொல்றதைக் கேக்கணும் சரியா?

நான் எங்க வீட்ல ஒரே பையன். உங்கள மாதிரி சின்ன வயசில 3-ம் வகுப்பு வரைக்குத்தான் படிச்சேன். அதுக்கு மேல படிக்க வைக்க வீட்ல வசதி இல்ல. நானும் தீப்பெட்டி கம்பெனியில் சேர்ந்து வேலை செஞ்சேன்.

அப்போ எனக்கு ஒண்ணும் தெரியலே. கெடச்ச காசுல சாப்பிட்டு குடும்பம் நடத்திட்டேன். உங்களையாச்சும் படிக்க வக்கணும்னு ஆசைப்பட்டேன். இப்பத்தான் நீங்கள் 5, 6-ம் வகுப்பு போறீங்க. அதுக்குள்ள எனக்கு உடம்புக்கு இப்படி முடியாமப் போச்சு.

இப்பத்தான் தெரியுது, நான் சின்ன வயசில இருந்தே தீப்பெட்டி கம்பெனியில் வேலை பாத்ததுதான் உடம்பை பாதிச்சிருக்கு. எனக்கு ரத்த சோகை நோய் வந்திருக்கு. கண் பார்வையும் கொறஞ்சு போச்சு. 40 வயசிலேயே இத்தனை வியாதி வந்ததுக்குக் காரணம் அந்த வேலைதான்.

இதை அந்த வயசிலேயே எனக்கு எடுத்துச் சொல்ல என்ன பெத்தவங்களுக்கும் தெரியலை. எனக்கும் அறிவு பத்தல. டாக்டரு இன்னொண்ணும் சொல்லிருக்காரு. எனக்கு காச நோயும் இருக்குதாம். என்ன மாதிரியே உங்க படிப்பையும் கெடுத்து, உடம்பையும் கெடுக்க நான் தயாரா இல்லே.

நான் வேல செஞ்ச இடத்துல எனக்கு பிடித்தம் செய்த பணம் ரூ. 30 ஆயிரம் ரூபா இருக்கும். அத நான் வேலையிலிருந்து விலகியதும்தான் தருவாங்க. இப்ப நான் வேலை செய்ய முடியாம இருக்கதால எழுதிக் கொடுத்தேன்னா அந்தக் காசத் தருவாங்க. அத வாங்கி சின்னதா ஒரு பெட்டிக்கட வச்சு பொழச்சிக்கலாம். நீங்க எதையும் மனசுல நெனக்காம ஒழுங்கா பள்ளிக்கூடத்துக்கு போயி நல்லா படிச்சு பெரிய ஆளா வரணும் கண்ணுகளா! அப்பா சொல்றது புரிஞ்சுதா?''

"சரியா சொன்னே பெரியசாமி. நல்ல நேரத்தில சரியான முடிவெடுத்தே. நீ சொன்னதை எல்லாம் நான் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன்...'' என்றபடி பக்கத்துவீட்டு பரமசிவம் உள்ளே வந்தார்.

"என்ன பசங்களா... நல்லா படிச்சு அப்பாவுக்கு பேர் வாங்கிக் கொடுக்கணும் சரியா?'' என்றார்.

"சரி'' என்று சுரேஷும், மங்கையர்க்கரசியும் தலையாட்டினார்கள்.

காலங்கள் கடந்தன. இப்போது சுரேஷ் வெளிநாட்டில் என்ஜினீயராக இருக்கிறான். மங்கை, நகரத்தில் டாக்டராக இருக்கிறாள். பெரியசாமியும் உடல் நலம்பெற்று நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்.

குழந்தைகள் வருமானம் குடும்பத்துக்கு அவமானம் என்பது சத்தியமான உண்மைதானே!

No comments:

Post a Comment